சாதனை பெண் மகுடேஸ்வரி
வாழ வழிகள் எத்தனையோ உண்டு. எப்படியும் வாழலாம் என்பர் சிலர். இப்படித்தான் வாழ வேண்டும் என்பர் சிலர்.
சிறு தோல்விக்கே துவண்டு, பயந்து, மூலையில் முடங்கிவிடுவோர் பலர். ஆனால் வாழ்க்கையில் எத்துனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர் கொண்டு வாழ நினைத்தால் வாழலாம் எனச் சொல்வோர் மிகச் சிலர். இப்படிப் பட்டவர்களை அரிதாகத்தான் காண முடிகிறது. இவர்களுள் ஒருவர் மகுடேஸ்வரி (41)
லட்சங்கள் புரளும் மர வியாபரம் செய்து வந்த கணவரின் தொழில், சிலர் ஏமாற்றியதால் நலிந்தது, மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டது குடும்பம், பெற்றோர் வசதியானவர்கள் தான். ஆனால் அவர்களை அண்டிப் பிழைக்க மனம் இடம் தரவில்லை. என்ன செய்வது? திகைத்தனர் மகுடேஸ்வரியும் கணவர் ராஜமுத்துவும், மகள், மகனை எப்படி கரை சேர்க்கப் போகிறோமோ என்ற கவலை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே என்ன செய்வது என்ற நிலை. துயரக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மகுடேஸ்வரிக்கு அதிலிருந்து தப்பிக்க மரத்துண்டு போல் உதவியது பாட்டியிடம் கற்றுக் கொண்ட மூலிகை வைத்தியம்தான்.
சிறுவயதிலிருந்தே பாட்டி தயாரித்துக் கொடுக்கும் மூலிகைப் பவுடர்களைத் தான் முகத்தில் பூசிக் குளித்து வந்துள்ளார் மகுடேஸ்வரி. இருமள், சளி என உடல்நலக்குறைவு ஏதேனும் வந்தாலும் மருத்துவர்களிடம் ஓடாமல் வீட்டிலிருக்கும் சுக்கு, மிளகு, தூதுவளை, பனங்கற்கண்டு, மஞ்சள்தூள், மற்றும் வேறு சில பொருள்களைக் கொண்டே பாட்டி குணமாக்கிவிடுவாராம்.
''வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது கைதூக்கி விட்டது எனது பாட்டி கற்றுக் கொடுத்த வைத்தியமுறைதான். இன்று நான் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக இருக்கக் காரணமானவரும் அவர்தான்'' என்கிறார் மகுடேஸ்வரி.
எனது சொந்த ஊர் பொள்ளாச்சி அருகில் உள்ள வெள்ளகோயில். ஆனால் வளர்ந்தது எல்லாம் பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டில்தான். தாத்தா வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு லாரி இருந்தது. கேரளத்திலிருந்து சரக்கு வரம்போது அகில் போன்ற மரக்கட்டைகளை அவர் கொண்டு வருவார். அதை வேறு சில பொருள்களுடன் சேர்த்து அரைத்து மூலிகைப் பொடி செய்து கொடுப்பார் பாட்டி.
எங்களது பாட்டி வீட்டில் நான் சோப்பையே பயன்படுத்தியதில்லை. மூலிகைகளைக் கொண்டு அவர் தயாரித்துக் கொடுக்கும் மஞ்சள் பவுடர், முகத்தில் தேய்த்துக் குளிப்பதற்கான குளியல் பொடி, சீயக்காய், எண்ணெய் ஆகியவற்றைத் தான் உபயோகித்து வந்தேன். (இன்றும் முகத்துக்கு சோப்பு உபயோகிப்பதில்லை).
பாட்டி தயாரிப்பது போல் எந்தெந்த பொருள்களைக் கலந்து எப்படித் தயாரிப்பது என்று கவனித்து நானே தயாரிக்கும் அளவுக்குத் தயாரானேன். அப்போது பி.யு.சி. படித்து முடித்தேன்.
உறவினர் ராஜமுத்துவுடன் திருமணம் நடந்தது. சிறிது காலத்துக்குப் பின், அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மர வியாபாரக் கடையில் பணிபுரிந்ததால் அதே தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தோம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நலிவடைந்தது. மரத்தை வாங்கிச் சென்றவர்களெல்லாம் பணத்தைத் தரவில்லை. இதனால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
வியாபாரத்தை நிறுத்தி விட்டிருந்த சமயம் மதிய உணவுக்கு குழம்பு வைப்பதற்காக மளிகை சாமான் வாங்குவதற்காக ஒரு பத்து ரூபாய் கிடைக்காதா என அனைத்துப் பாத்திரங்களையும் துழாவிக் கொண்டிருந்தேன். அப்போது, கணவரின் நண்பரின் மனைவி வாயிலாக ஒரு வாய்ப்பு கதவைத் தட்டியது. நாங்கள் மூலிகைத் தயாரிப்பையே பயன்படுத்துவதை அறிந்திருந்த அவர், இருநூறு ரூபாயைக் கொடுத்து மூலிகை சீயக்காய் பவுடர், குளிப்பதற்கான பவுடரைச் செய்து கொடுங்கள் எனக் கேட்டார்.
உடனே பையை எடுத்துக் கொண்டு ஜாம்பஜாருக்குப் புறப்பட்டு விட்டேன். சென்னையில் பல்வேறு இடங்களில் நாட்டு மருந்துக் கடை இருந்தாலும். எனக்குத் தெரிந்தது அப்பகுதியில் இருந்த கடை தான். வாங்கி வந்து செய்து கொடுத்தேன். அவர் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக ஆகிவிட்டது. மீதம் இருந்ததைக் கொடுத்து விட்டார்.
இதற்கிடையே, பக்கத்து வீட்டார் என் மகளிடம் உன் முடி நன்றாக உள்ளது. முகமும் பளபளப்பாக உள்ளது. எப்படி எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவள், என் அம்மா செய்து கொடுக்கும் பொடியை பயன்படுத்துகிறேன் எனக் கூறியுள்ளாள். உடனே, அவர்கள் என்னிடம் வந்து அது போன்ற பொடிகளைச் செய்து தருமாறு கூறினார். திருப்தியாக இருந்ததால் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் செய்து கொடுக்கச் சொன்னார்கள். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணும் எனது தயாரிப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினார். இவ்வாறாகப் பலரைக் கவர்ந்ததால், குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீள இதையே முழு நேரத் தொழிலாகச் செய்தால் என்ன என யோசித்தேன்.
முதலில், சிறிய அளவில் செய்துவிற்கத் துவங்கினேன். சுமாரான லாபம் கிடைத்தது. எனது தயாரிப்புகளைப் பாக்கெட்டுகளில் அடைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகளின் வாயிலில் விற்றேன். நல்ல வரவேற்பு கிடைத்து. அவர்களும் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இவ்வாறு வியாபாரம் விரிவடையத் துவங்கியது.
வளசரவாக்கம் கனரா வங்கியின் மேலாளராக இருந்த ஒருவர், அவரது மகனுக்கு 3 ஆண்டுகளாக இருந்து வந்த பொடுகுத் தொல்லை குறித்துக் கூறினார். உடனே, மூலிகை எண்ணையைத் தயாரித்துக் கொடுத்தேன். சில நாள்கள் கழித்து அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். என்ன ஆயிற்றோ என பயந்தபடியே சென்ற எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பல ஆண்டுகளாக இருந்த பொடுகுத் தொல்லை சில நாள்களிலேயே தீர்ந்து விட்டதைப் பாராட்டிய அவர், இன்றளவிலும் தொடர்ந்து எனது வாடிக்கையாளராக உள்ளார்.
பின்னர், பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.40 ஆயிரம் வங்கிக் கடனையும் பெற உதவினார். அது தான் நான் தொழிலில் செய்த பெரிய முதலீடு. பின்னர், சிறுதொழில் செய்வதற்கான SSI சான்றிதழ் பெற்று, கங்கா ஹெர்பல் பிராடக்ட்ஸ் எனப் பெயரிட்டு பாக்கெட்டுகளில் விற்கத் துவங்கினேன். கணவரும், நானும் நேரம் காலம் பார்க்காமல் வீட்டில் உட்கார்ந்து பொருள்களைத் தயாரித்து வீதி வீதியாகச் சுற்றித் திரிந்து விற்றோம். வாங்கியவர்களிடம் நல்ல பெயர் கிடைத்தது.
டபிள்யூ.இ.பி.ஏ. என்ற பெண்கள் அமைப்புத் தலைவி பிரேமா தேசிகனின் அறிமுகம் கிடைத்தபோது எனக்குத் தன்னம்பிக்கையும், தைரியத்தையும் ஊட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினரானேன். பொருள்களை மார்க்கெட்டிங் செய்வது குறித்து கற்றுத் தந்தார். படிப்படியாகத் தொழிலை விரிவுபடுத்தினேன். கணவரும் முழுமூச்சாக துணை புரிந்தார்.
சமூகநலத்துறையின் பெண்கள் கண்காட்சியிலும், தனியார் காட்சியிலும் ஸ்டால்கள் வைத்தேன். நல்ல விற்பனை. தற்போது, கல்லூரி மாணவியர் உள்ளிட்ட 10 முகவர்கள் என்னிடம் பொருள்களை வாங்கி விற்கின்றனர். 10-க்கும் 20-க்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நான் தற்போது மாதம் ரூ.40 ஆயிரம் வரை வியாபாரம் செய்கிறேன். என்னால் 10 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்கிறார் பெருமையுடன்.
நன்றி: தினமணி
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாதனை பெண் மகுடேஸ்வரி, செய்து, பாட்டி, அவர், தான், எனது, சிலர், என்ன, நான், கொண்டு, எனக், இருந்த, நல்ல, வியாபாரம், உடனே, தயாரித்துக், செய்வது, கொண்டிருந்த, மூலிகை, மகுடேஸ்வரி, கொடுக்கும், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி