ஒரு நிஜ ஹீரோயின்
2001-ம் ஆண்டில் ''உலக மக்கள் அரங்கில் ஒர தமிழச்சி'' எனப் பேச வைத்த ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருதினை பிரதமர் வாஜபேயிடம் பெற்றுக் கொண்டு, பிரதமரின் காலைத் தொட்டு வணங்குவதற்காக குனிந்தார் உழைக்கும் தமிழச்சியான சின்னப்பிளளை.
பிரதமரோ, இந்தத் தமிழச்சியின் கால் தொட்டு வணங்கினார்.
''மகராசனா இருங்க!'' என்று ''மனசு நெறைய'' பிரதமரை தமிழச்சி வாழ்த்திய காட்சி கண்டு அகிலஇந்தியாவும் மெய்சிலிர்த்தது.
மாவட்ட வரைபடத்தில் கூட இடம்பெற முடியாத பில்லுச்சேரி என்ற சின்னஞ்சிறிய கிராமத்தின் மீது உலகின் கவனத்தை ஒரே நாளில் திருப்பவைத்த சின்னப்பிள்ளை கூறியதாவது;
''பிரதமரை நேர்ல பார்க்கப் போறம்னு தெரிஞ்சதும் படபடனு பயமாத்தான் இருந்துச்சு. அப்புறம் டில்லியில எறங்கினா... அங்கே தரையெல்லாம் குளிரு! மேடையில ஏறினா..பெரதமரைப் பார்த்தா நம்ம அப்பனைப் பார்த்த மாதிரி இருந்திச்சு. அவரு கால்ல நான் விழுந்தேன். அவரு என்னடானனா படக்குன்னு என் கால்ல விழுந்திட்டாரு. எனக்கு என்ன செய்யுறதுன்னே தோணலை. மகராசனா இருங்கனு மனசார வாழ்த்திட்டு வந்தேன் என்று சொன்ன சின்னப்பிள்ளையின் முகம் பெருமையில் நிறைந்திருந்தது.
வகிடு எடுத்து அள்ளி சொருகிய முடி. சுருக்கமான தோல், பொட்டும் மஞ்சளும் இழந்த முகம். மதுரைக் கிராமங்களுக்கே உரிய பின் கொசுவச் சேலைக் கட்டு. கரிய நிறம். சேறு அரித்த பாதங்கள். -இது தான் சின்னப்பிள்ளை.
மதுரையிலிருந்து அழகர்கோயில் செல்லும் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமம்தான். ஸ்ரீ சக்தி புரஸ்கார் சின்னப்பிள்ளையின் பிறந்த மண்.
அப்பா பெரியாம்பிளை. ஆத்தா பெருமி எனக்கு வௌரம் தெரியும்முன்னே செத்துப் போச்சு ரெண்டு அண்ணன், ஒரு அக்கா, நான் நாலாவது. ''சடங்கான நாள் வரைக்கும் ஆடு, மாடுதான் மேச்சேன். அப்புறம் எங்கே பள்ளிக்கொடம் போறது?''
பில்லுச்சேரி பெருமாளுக்கு வாக்கப்பட்ட சின்னப்பிள்ளைக்கு மூன்று பெண்களும் இரண்டு பையன்களும், ''மொத ரெண்டு பொண்களும் மொதல்லயே செத்துப் போச்சுக. மக இருளாயியை நல்லா படிக்க வைக்கணும்முன்னு நினைச்சேன். ஒன்பதாங்கிளாஸ்ல பெயிலாப் போயித்தா. அந்தச் சங்கடத்தாலே அவளும் விஷத்தைக் குடிச்சிட்டு போயி சேர்ந்திட்டா... அதோட போச்சா... அவுகளுக்கும் வயித்திலகட்டி வந்திருச்சு... வைத்தியம் பாக்க வக்கு இல்லாம அவுகளையும் எமன்கிட்டத் தூக்கிக் கொடுத்திட்டு... வாங்கின கடனுக்கு கந்து வட்டிக் கொடுக்க முடியாம என் தலையெழுத்தேனு தவிச்சுக்கிட்டு இருந்த போது தான்.
''தானம் அறக்கட்டளையினர் 1990-ம் ஆண்டில் பில்லுச்சேரி பகுதியில் 'களஞ்சியம்'' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். கிராமப் புற ஏழைப் பெண்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் சேருவதற்கு பலரும் பயந்து கொண்டிருந்த போது சின்னப்பிள்ளை உற்சாகத்தோடு அதில் உறுப்பினரானர்.
அதன் மூலம், வங்கியிலிருந்து ''பால் மாட்டு லோன், மீன் வளர்க்க குத்தகை எடுக்க, சேமித்து வைக்க, இது போன்ற பணிகளில் ஈடுபட்டு பில்லுச்சேரி மக்களை கைத் தூக்கினார். இந்த கணவனை இழந்த தமிழச்சி.
''மத்திய அரசு, சமூக நலத்துறை மூலமா விருதுக்கான விளம்பரம் கொடுத்திருந்தது. தமிழகத்திலிருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் 300 பெண்களை பரிந்துரை செய்தன. அகில இந்திய அளவில் ஐந்து பெண்மணிகளுக்கு விருது கிடைத்திருக்கிறது.
அதில் நிமிர்ந்து நிற்க முடியாத பனையோலைக் குடிசைக்குள், வறுமையும், நோயும் தன் குடும்பத்தை தின்னுகொண்டிருந்த, உழைக்கும் பெண்களை ஒன்று திரட்டி, உயர்த்தப்பட்ட எங்கள் சின்னப்பிள்ளையும் ஒருவர்!'
தமிழச்சி சின்னப்பிள்ளை ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருதுபெற்ற தகவலை அறிந்த தமிழக முதல்வர் சின்னப்பிள்ளைக்கு ஒரு லட்சம் பொற்கிழியும் பாராட்டும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறிய செய்தி பில்லுச்சேரியை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது...
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரு நிஜ ஹீரோயின், தமிழச்சி, சின்னப்பிள்ளை, பில்லுச்சேரி, சக்தி, ஸ்ரீ, புரஸ்கார், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி