"கூடைப்பந்து" அனிதா
தமிழ்நாடு கூடைப்பந்து ஆட்டகளத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் அனைவரும் அறிந்த பெயர் பி. அனிதா. ஆக்ரோஷமான, அபாரமான ஆட்டத்துக்கு சொந்தக்காரரான அவர் இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். 3 முறை இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தலான தனது ஆட்டத்தில் அணிக்கு வலுசேர்த்து இருக்கிறார்.
அதே பெயரை கொண்ட (எஸ். அனிதா) பள்ளி மாணவியும், கூடைப்பந்து ஆட்டத்தில் தனது அபாரமான திறனை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். தேசிய அளவிலான மினி போட்டிகளில் 3 முறை தமிழக அணி சார்பில் விளையாடி உள்ளார். அதோடு 3-வது முறையாக இந்திய இளைஞர் அணி பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்.
சீனியர் அனிதா சென்னை ரைசிங் ஸ்டார் கிளப் பயிற்சியாளர் சம்பத்தின் வார்ப்பாகும். ஜூனியர் அனிதா சிதம்பரம் பயிற்சியாளர் நடராஜனின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்டு வருகிறார்.
சீனியர் அனிதாவை போல் இந்திய அணியில் ஆடும் அளவுக்கு ஆட்டத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே தனது "வருங்கால லட்சியம்" என்று எஸ்.அனிதா கூறினார்.
தற்போது தேசிய னித் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப் பட்டு இருக்கிறேன். பஞ்சாபில் டிசம்பர் மாதம் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறேன். ஏற்கனவே குஜராத்தில் நடந்த தேசிய பயிற்சி முகாமுக்கு அழைப்பு வந்தும் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வருத்தத்தை போக்கும் விதமாக இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க இருக்கிறேன். வட மாநிலங்களில் நடை பெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பதில் மொழி பிரச்சினை ஒரு பயமாக இருக்கிறது" என்றார்.
பீவர்ட் நிலையில் சிறப்பாக ஆடுவதும், விங்கில் இருந்து இரண்டு பாயிண்டுகள் குவிப்பதும் தனது சிறப்பம்சம் என்றார். தனது ஆட்ட வளர்ச்சிக்கு பயிற்சியாளர் நடராஜன் முக்கிய காரணம் என்றார். மழை பெய்தால் கூட பயிற்சி அளிக்க முதல் ஆளாக மைதானத்தில் இருப்பார். அதோடு போட்டிக்கு அழைத்து செல்லும் முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டுதான் அணியினரை அழைத்துச் செல்வார் என்று சொன்னார்.
தமிழ்நாடு கூடைப்பந்து, சங்க சேர்மன் தியானேஸ்வரன், செயலாளர் செல்வராஜ் ஆகியோர் ஆட்ட வளர்ச்சிக்கு அரும்பணி செய்வதாக கூறிய அவர் சங்கம் சார்பில் நடைபெறும் பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.
கடலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் சபாநாயகம், அருளானந்தம், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி பொன்மலர் தங்கராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் புஷ்பம், ராணி, ஜெயா ஆகியோர் தனது ஆட்ட வளர்ச்சிக்கு நல்ல ஊக்கம் அளிப்பதாக நன்றி கூர்ந்தார்.
அமெரிக்க வீரர் மைக்கேல் ஜோர்டானின் ஆட்டமும், தமிழக வீராங்கனை பி. அனிதாவின் ஆட்டமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
பள்ளி அளவிலான தடகள போட்டியிலும் பங்கேற்று வருகிறார். குண்டு எறிதலில் மாநில பள்ளி போட்டியில் கலந்து கொள்ள தகுதி இருப்பதாக கூறினார்.
15 வயதான அனிதா 2002-ம் ஆண்டில் புதுச்சேரியில் நடந்த தேசிய மினி போட்டியில் தமிழக அணியில் இடம் பெற்றார். அதே ஆண்டில் கர்நாடகாவில் நடந்த தேசிய பள்ளி போட்டியில் தமிழக அணியில் இடம் பெற்று ஆடினார். 2003-ம் ஆண்டில் அசாமில் நடந்த தேசிய மினி போட்டியில் தமிழக அணியில் இடம்பிடித்தார். இந்த ஆண்டில் கேரளாவில் நடந்த தேசிய மினி போட்டியில் தமிழக அணியில் இடம் பெற்றார். சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த தேசிய யூத் போட்டியில் தமிழக அணியில் இடம்பிடித்து விளையாடினார். இதுதவிர மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அனிதா சிதம்பரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இவருடைய தந்தை சவுந்தர்ராஜ் ஜேம்ஸ் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வருகிறார். தாயார் பெயர் பென்சியா. இவரது மூத்த அக்காள் மெர்லின் நர்சாக பணியாற்றுகிறார். மற்றொரு அக்காள் ஜென்சிராணி சி.ஏ. படிக்கிறார். இவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மானாசந்து பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களது சொந்த ஊர் நெல்லை முருகன்குறிச்சி ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
"கூடைப்பந்து" அனிதா, பயிற்சி, தேசிய, அணியில், தமிழக, அனிதா, நடந்த, போட்டியில், தனது, என்றார், பள்ளி, இந்திய, இடம், மினி, வருகிறார், சிதம்பரம், ஆண்டில், வளர்ச்சிக்கு, ஆட்ட, முகாமுக்கு, அளவிலான, ஆட்டத்தில், கூடைப்பந்து, பயிற்சியாளர், முகாமில், கலந்து, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி