கூடைப்பந்தில் ஜொலிக்கும் தீப்ஸ்
கூடைப்பந்தும் கையுமாக 12 வயது முதல் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே கலக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை தீபா(21)
கல்லூரிகளிடையிலான போட்டிகளானாலும், கிளப் அணிகளிடையிலான போட்டிகளானாலும் ''தீப்ஸ்'' பெயர் ஒலிக்கத் தவறுவதில்லை. ரைசிங் ஸ்டார் அணியின் சக வீராங்கனைகள் தீப்ஸ் என்று தான் அவரை அழைக்கிறார்கள்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கௌதம், விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகளான ''தீப்ஸ்'' மிகச் சிறந்த ''பால் ஹேண்ட்லர்.''
மயிலாப்பூர் செயின்ட் ஆண்டனீஸ் பள்ளியில் படித்து வரும் போது கூடைப்பந்து விளையாட்டால் ஈர்க்கப்பட்ட தீப்ஸ், தற்போது இளம் வீராங்கனைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
சராசரியாக ஓர் ஆட்டத்தில் 20 புள்ளிகளைச் சேர்க்கும் வல்லமை கொண்டவர். தனது அசத்தலான ''டிரைவ்-இன்,'' ''லாங் ஷாட்'' ஆகிய அம்சங்களில் நிகரற்றுத் திகழ்ந்ததால், விளையாடத் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் மாநில ஜூனியர் அணியில் இடம் பிடித்தவர். அவர் இடம்பெற்ற முதல் ஆண்டே (1999), புதுச்சேரியில் நடந்த தேசிய ஜூனியர் போட்டியில் தமிழக அணி வாகை சூடியது அதற்கடுத்த ஆண்டு தமிழக அணியில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக தமிழக சீனியர் அணியில் முக்கிய வீராங்கனையாக விளையாடி வருகிறார்.
கடந்த 2-ம் தேதி லூதியாணாவில் நடைபெற்ற 55-வது தேசிய போட்டியில் 4-ம் இடம்பெற்ற தமிழக அணியிலும் இடம்பெற்றார். தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவது அவருக்கு அது 4-வது முறை, என்றாலும், 2001-ல் தில்லியில் நடைபெற்ற தேசியப்போட்டியில் தமிழகம் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு தீப்ஸின் ஆட்டமும் ஒரு காரணமாக இருந்துள்ளது. அதுவே தமிழக மகளிர் அணியின் இதுவரையிலான தேசிய சிறப்பாக உள்ளது.
மிகவும் பிற்பட்ட மீனவக் குடும்பத்தை சேர்ந்த தீப்ஸ், எம்.ஒ.பி. வைஷ்ணவ கல்லூரி நிர்வாகம் அளித்த ஆதரவால் விளையாடிக் கொண்டே பி.காம் படிப்பையும் முடித்துள்ளார். தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக் கழகத்துக்காக விளையாடி வருகிறார். அகில இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்கான ஜனவரி 9-ம் தேதி குஜராத் செல்கிறார்.
வசதியே இல்லாவிட்டாலும் இவ்விளையாட்டைத் தொடர்வதற்கு தனது தந்தை அளிக்கும் ஊக்கம் மிக முக்கியமானது. 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூத்த சகோதரர் மெரீனா கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து விட்டார். அதனால் நான்தான் குடும்பத்துக்கு மூத்த பெண். தந்தை கூலி வேலை செய்து வருகிறார். எனது பாட்டி மச்சகாந்திதான் எங்களது குடும்பத்துக்குள்ள ஒரே நிதி ஆதாரம். நான் விளையாடுவதற்கு அவர் தான் பணம் கொடுத்து உதவி வருகிறார். தமிழக கூடைப்பந்து சங்கம், எனது பயிற்சியாளர் சம்பத் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் கூடைப்பந்தாட்டத்தில் மிகச் சிறப்பான நிலையிலேயே உள்ளது. ஆனால் வேலை வாய்ப்பு தான் அருகியுள்ளது. எம்.ஒ.பி. வைஷ்ணவ கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் அளித்த ஆதரவால் தான் பி.காம் படிப்பை முடிக்க முடிந்தது என பிரமிப்பு தெரிவித்தார்.
லட்சியம் என்ன எனக் கேட்ட போது வேலைக்காக அவர் தவம் கிடப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ''லட்சியம் வேலைதான்.'' ஆனால் விளையாட்டையும் விட மாட்டேன் என்றார் உறுதியுடன்!
தீபாவை ஒரு வீராங்கனையாக உருவாக்கிய சிறப்பு முன்னாள் வீரரும் ரைசிங் ஸ்டார் அணியின் பயிற்சியாளருமான சம்பத்தையே சேரும். அவர் கூறியதாவது; சக வீராங்கனைகளை ஒருங்கிணைத்து ஆடும் வீராங்கனைகள் தமிழகத்தில் குறைவு. அதில் தீபா கெட்டிக்காரி. தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். சில சமயங்களில் பயிற்சியாளர் எதிர்பார்ப்புக்கும் மேலாக ஆடி, அணிக்கு வெற்றி தேடித் தரும் வல்லமை கொண்டவர், தீபா என்றார் சம்பத்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூடைப்பந்தில் ஜொலிக்கும் தீப்ஸ், தமிழக, தீப்ஸ், வருகிறார், தான், அவர், போட்டியில், தேசிய, கடந்த, எனது, மிகச், தீபா, அணியின், மூத்த, தமிழகம், அணியில், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி