2002 - ம் ஆண்டின் பரபரப்புப் பெண்மணிகள் !
மீரா நாயர் (திரைப்பட இயக்குனர்)
'சலாம் பாம்பே ' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த மீரா நாயர், இன்று சர்வதேச அளவிலான ஒரு திரைப்பட இயக்குநர்.
44 வயதாகும் மீரா, வெனிஸ் நகரில் நடைபெற்ற 2001 - ம் ஆண்டுக்கான உலகத் திரைப்பட விழாவில் தனது ' மான்சூன் வெட்டிங் ' திரைப் படத்துக்காக ' கோல்டன் லயன் ' பரிசு பெற்று இந்தியத் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். உலக அளவில், சிறந்த பெண் திரைப்பட இயக்குநராக தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் இந்தியர் மீரா தான்.
இந்தியாவில் சமூகவியல் படித்த அவர், நாடகக் கலை பற்றிய மேற் படிப்பை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்தார்.
உலக திரைப்படச் சந்தையில் நன்கு விலை போகக்கூடிய விஷயங்களே, மீரா நாயரின் பெரும்பாலான திரைப் படங்களின் கருவாக இருக்கும். பொதுவான சமூக விஷயங்களை பெரிதும் விவாதிக்கப் படும் வகையில் படமாக்குவது, இவரின் தனிச் சிறப்பு.
' மான்சூன் வெட்டிங் ' திரைப் படத்தில் பஞ்சாபி குடும்ப திருமணத்தை வித்தியாசமாகப் படமாக்கியிருந்தார் மீரா. இப்படத்தில், சிறுமிகளுடன் உடலுறவு கொள்ளும் வக்கிரங்கள் தாராளமாக சேர்க்கப் பட்டிருப்பது வேதனையான விஷயம். நாகரிகம், கலாச்சாரம் பற்றி பேசும் மீரா தன் படத்தில் இத்தகைய காட்சிகளை சேர்த்திருப்பது அவரது முரண் பாடான முகத்தைக் காட்டுகிறது.
சலாம் பாம்பே , மிசிசிபி மசாலா என தன்னுடைய அத்தனைப் படங்களிலும் செக்ஸ் காட்சிகளை தாராளமாக காட்டுவது தானும், தன்னுடைய படங்களும் பெரிதும் பேசப்பட வேண்டும் என்பதற்காகத்தான் !
--*--*--
சோகீலா அய்யர் (வெளியுறவுச் செயலர்)
1964 - ல் ஐஃஎப்.எஸ் எனப்படும் ' இண்டியன் ஃபாரின் சர்வீஸ் ' தேர்ச்சி பெற்றதன் மூலம் தன் வாழ்க்கை லட்சியத்தின் முக்கிய மைல் கல்லை அடைந்து தன்னம்பிக்கை மற்றும் தளராத மன உறுதியால் மற்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்பவர் சோகீலா அய்யர்.
29.6.1942 - ல் டார்ஜிலிங்கில் பிறந்த சோகீலா தனது தாயின் கடின உழைப்பு மற்றும் முயற்சியால் 'சிவில் சர்வீசஸ் ' வரை வெற்றிகரமாக வலம் வந்தார்.
செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பொருளாதார பட்டப் படிப்புக்குப் பின் இண்டியன் ஃபாரின் சர்வீஸ் முடித்த சோகீலா அய்யர் மெக்சிகோ நகர மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டு பிறகு, இரண்டாவது செயலாளராக உயர்ந்தார்.
தன்னுடைய குடும்பத்தையும், வேலையையும் சமமாக பாவித்து வரும் சோகீலா அய்யர் தனக்களிக்கப் பட்ட ஒவ்வொரு பணியையும் ஒரு சவாலாகவே கருதி செயல்படுகிறார்.
--*--*--
அருந்ததி ராய் (சமூக சேவகி மற்றும் எழுத்தாளர்)
' தி காட் ஆஃப ஸ்மால் திங்க்ஸ் ' என்ற புத்தகத்தின் மூலம் புக்கர்ஸ் விருது பெற்ற அருந்ததி ராயை மறக்க முடியுமா என்ன?
அவருக்கு இப்போது போதாத காலம் போலும். நீதி மன்றம் மற்றும் அதன் நடவடிக்கைகளை விமர்சித்ததால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் மாட்டிக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் மேதா பட்கர் மற்றும் அருந்ததி ராயின் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோரும் சேர்க்கப் பட்டுள்ளனர்.
எழுத்தாளராக அறிமுகமான அவர் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ' நர்மதா பச்சாவோ ' இயக்கத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார்.
நர்மதா விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பில் தனக்கு இசைவு இல்லை என்று கருத்து தெரிவிக்க தனக்கு உரிமை உள்ள தென்றும் மக்களுக்காகத் தான் நீதி அமைப்பே தவிர நீதி அமைப்புக்காக மக்கள் உருவாக்கப் படவில்லை என்கிறார் அருந்ததி ராய்.
உண்மையிலேயே தைரியசாலி தான் !
--*--*--
மேதா பட்கர் (தலைவர், நர்மதா பசாவோ)
நர்மதா அணையைச் சுற்றிலும் வசித்து வரும் மக்களின் ஜீவாதார போராட்டத்துக்கு ஒரு உந்து சக்தியாக இருப்பவர் மேதா பட்கர்.
நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டு வரும் சர்தார் சரோவர் அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1985 - ல் பாபா ஆம்தேவால் துவங்கப் பட்ட நர்மதா பசாவோ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, மக்களோடு மக்களாக போராடி வருகிறார் மேதா.
இந்த அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித சக்தியைத் திரட்டி போராடி வரும் மேதா, பல முறை சிறை சென்றுள்ளார்.
இது சம்பந்தமாக, உச்ச நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஒரு திருப்பு முனையாக அணை கட்டலாம். ஆனால், நிர்ணயிக்கப் பட்ட உயரத்தை விட அணை குறைவாக கட்டப் பட வேண்டும் என்று உத்தர விட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கோஷ மெழுப்பி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் சந்தித்து வருகிறார் மேதா பட்கர்.
--*--*--
கமல் வில்கூ (மருத்துவர்)
வயது 53 என்று சொன்னால் நம்ப முடியவில்லை. தீர்க்கமான பார்வை. தன்னம்பிக்கை தவழும் முகம். இவர் தான் கமல் வில்கூ. துருவப் பிரதேசமான அண்டார்டிகாவில் 16 மாதங்கள் தங்கியிருந்து தாயகம் திரும்பியவர் இவர்.
தனது தன்னம்பிக்கையின் மூலம் எந்த வயதிலும் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கும் கமல் வில்கூ, தற்போது டெல்லியில் உள்ள மத்திய அரசு ஹெல்த் கிளினிக்கில் தலைமை உடல் நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இயற்கையை மிகவும் நேசிக்கும் கமல் வில்கூ, தான் மருத்துவராக வில்லை யென்றால் ஓவியராகி இருப்பேன் என்கிறார் உறுதியாக. அவரது கணவர் கர்னல் கரம் ஜித் சிங் மற்றும் பிள்ளைகள் அண்டார்டிகா பயணத்துக்கு ஊக்குவித்ததை பெருமையுடம் கூறும் கமல் வில்கூ மீண்டும் ஒரு முறை அண்டார்டிகா கிளம்பத் தயாராகி விட்டார் !
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2002 - ம் ஆண்டின் பரபரப்புப் பெண்மணிகள் !, தனது, அவர், தான், அவரது, மீரா, இமாம், ஷபானா, மேதா, ஜெயலலிதா, நர்மதா, பட்ட, வழக்கில், சோகீலா, வில்கூ, கமல், நீதி, வரும், வேண்டும், மூலம், பிறகு, தலைவர், அய்யர், ராஜீவ், தன்னை, திரைப், திரைப்பட, சோனியா, அருந்ததி, அரசியல், பட்கர், வருகிறார், நீதிமன்ற, காந்தி, தன்னுடைய, கட்சித், காலம், சமூக, படத்தில், உச்ச, கொண்டுள்ளார், பெண்கள், மத்திய, நாடாளு, முறை, மன்றத்தில், இன்று, அறிக்கை, போஸ்லேவின், தெரிவித்து, மங்கேஷ்கர், இந்தியத், பின், பற்றிய, குரலை, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி