பெற்றோரின் மனப்பக்குவம்
உன்னுடைய உடைகளை நீதான் துவைத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது உன் பொறுப்பு என்று குழந்தையை வேலைகளுக்குப் பழக்குவதில் தவறில்லை. ஆனால், சில பெற்றோர் ஒட்டுமொத்த வேலையையும் குழந்தைகள் தலையில் சுமத்திவிட்டு தாங்கள் ஹாய்யாக சுற்றக் கிளம்பி விடுவார்கள். பிள்ளைகளுக்குப் பொறுப்பை உணர்த்துகிற பாவனையில் தாங்கள் பொறுப்பற்றவராகும் நிலைதான் அது.
தங்கள் வயதுக்கு மீறிய காரியங்களைச் செய்யக் கற்றுக்கொண்ட குழந்தைகள் வயது வந்தவர்களைப் போல் நடந்து கொள்ளவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். பெற்றோரின் அன்பும், பரிவும் கிடைக்காத நிலையில் அவர்களின் புகலிடம் போதை மருந்துகள்தாம். அதற்குப் பணம் தேவை. நிறையப்பணம் தேவைப்படும் போது அவர்கள் பொய் சொல்லவோ, தங்கள் வீட்டிலேயே திருடவோ தயங்குவதில்லை.
குழந்தைக்குத் தேவை மகிழ்ச்சியும், பத்திரத்தன்மையும் உள்ள வீடு. பெற்றோர், நாயும், பூனையுமாய் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை நரகமாக்குவதை எந்தக் குழந்தையாலும் சகித்துக் கொள்ள முடியாது. தன்னால் சகித்துக் கொள்ள முடியாத கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறவும் செய்யும்.
பத்து வயது மகனையும், எட்டு வயது மகளையும் பற்றிக் கவலைப்படாமல் விவாகரத்துக்குத் தயாராகும் தம்பதிகளும் உண்டு. அவர்களால், குழந்தைகளின் வண்ணக் கனவுகள் சின்னாபின்னமாகி விடுகின்றன. அவர்கள், தங்களின் நலனில் அக்கறை காட்டாத பெற்றோரை வெறுக்கவே செய்வார்கள்.
மூன்று பெண் குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்ற தாய்க்கு, நான்காவதாகப் பிறந்த ஆண் குழந்தையிடம் அளவற்ற பிரியம் இருக்கும். தவமிருந்து பெற்ற பிள்ளை மீது யார் கண்ணாவது பட்டுவிடுமோ என்று அஞ்சுவாள், பிள்ளையை வெளியில் விளையாடப் போகவும், அனுமதிக்கமாட்டாள். கறிவேப்பிலைக் கொத்து மாதிரி ஒரு பிள்ளை. காற்றுக் கறுப்பு பட்டுவிடுமோ என்று கலங்குவாள்.
சத்தான உணவு வகைகளை சளைக்காமல் ஊட்டி விடுவாள். பையன் கொழுகொழுவென்றாகி மந்த கதியை அடைவான். காலையும், மாலையும் ட்யூஷன், ஒவ்வொரு சப்ஜக்டிற்கும் தனித்தனி டியூஷன். அத்தனைக்குப் பிறகும் பையன் ஆவரேஜ் என்ற நிலைதான்.
மனப்பக்குவம் இல்லாத பெற்றோரால், பிள்ளைகள் குட்டிச்சுவராவதற்கு இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். பெற்றோர், செல்லம் கொடுப்பதை சில பிள்ளைகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில குழந்தைகள் மனம் சுளிக்கும். தம்மை வளர்ந்த பிள்ளைகளாக நடத்த வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.
சில பெற்றோரின் விபரீதமான நடத்தைகளும் குழந்தைகளைப் பாதிப்பதாகிவிடும்.
உணர்வுபூர்வமாக வளர்ச்சியுறாத பெற்றோர் குழந்தை வளர்க்கும் பொறுப்பை தங்கள் தோள்களில் சுமக்க விரும்புவதில்லை. குழந்தையை ஆளாக்கவும். படிக்க வைக்கவும் பணம் கொடுப்பது மட்டும் தனது கடமை என்று தந்தை நினைப்பார். குழந்தைக்கு சமைத்துப் போடுவதோடு தன் வேலை முடிந்துவிட்டதாக தாய் கருதிக் கொள்வாள். இத்தகைய பெற்றோர், தங்கள் குழந்தையிடம் இரக்கமற்ற மனோபாவத்தையே கடைப்பிடிப்பார்கள். இவர்கள் எப்படி உணர்வுபூர்வமான பாதுகாப்பை தங்கள் குழந்தைகளுக்கு வழங்க முடியும். உண்மையில் அவர்களுக்கே அல்லவா அப்படி ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது.
குருவி தலையில் பனங்காயாக கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரும் குழந்தைகள், குழந்தைப் பருவ உல்லாசத்தை இழந்துவிடுகிறார்கள், சுயநலத்தோடும், பரபரப்போடும் இயங்க முற்படுகிறார்கள். தங்கள் பெற்றோர் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள்.
பிள்ளை மீது கவனம் வைக்காத பெற்றோரைவிட கூடுதல் கவனம் வைக்கிற பெற்றோர்தாம் பிள்ளைக்கு அதிகக் கெடுதல் ஏற்படக் காரணம் ஆகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், வளர்ச்சி, கல்வி மற்றும் அற்ப காரணங்களுக்கும் அநாவசியமாய் கவலைப்படுகிறார்கள்.
குழந்தையின் காரிய முனைப்பு, தன்னம்பிக்கை, சுய ஆற்றல், ஆர்வம் கெட அவர்களே காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
கூடுதல் கவனம் வைக்கிற பெற்றோரின் பிள்ளைகள், நல்ல விதமாக நடப்பது எப்படி என்றே அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஓர் இக்கட்டான நிலைமை ஏற்படும்போது அதை எப்படி சமாளிப்பது என்றும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
அதீத அக்கறை செலுத்தி வளர்க்கப்படும் பிள்ளைகள், தேக வலிமையற்றவர்களாகவும், பயங்காளிகளாகவும் இருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் பிறரை அண்டிப் பிழைப்பவராகவே இருக்க நேரிடும்.
உணர்ச்சிவசப்படுகிற பெற்றோராலும் குழந்தையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். தங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி அவர்கள் எக்கச்சக்க கனவுகள் (சாத்தியமில்லாத) வைத்துக் கொண்டிருப்பார்கள். கல்வியிலும், விளையாட்டிலும், கலைப் போட்டிகளிலும் தங்கள் குழந்தை முதலாவதாக வரவேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி அந்தக் குழந்தை சாதிக்க முடியாது போயின் மனம் சோர்ந்து விடுவார்கள். அதற்காகக் குழந்தையைத் தண்டிக்கவும் செய்வார்கள்.
பேரார்வம் (Ambitions) மிக்க பெற்றோர் என்றாலே உபத்திரவம்தான். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடியாத குழந்தை தன்னம்பிக்கை அற்றதாகிறது. சுய கௌரவத்தை இழந்து போகிறது.
ஒவ்வொரு குழந்தையும் தனக்கென்று விருப்பு, வெறுப்புகள் வைத்திருக்கும். வளர்ச்சியுள்ள குழந்தை, வாழ்க்கையில் தான் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதே நல்லது. தங்கள் பெற்றோருடைய அனுமதிப்பதே நல்லது. தங்கள் பெற்றோருடைய விருப்பத்துக்கு மாறாக கலைத் துறையைத் தேர்ந்தெடுத்துப் பிரகாசிக்கிற இளைஞர்கள் எத்தனையோ பேர்!
சில வீடுகளில், குழந்தைகள் முன்னிலையில் கணவனும், மனைவியும் கொஞ்சிக் குலவிக் கொள்வார்கள். தங்களுடைய படுக்கை அறையிலேயே குழந்தைகளையும் தூங்க அனுமதிப்பார்கள்.
குழந்தைகளை மனோதிடமும், ஆரோ‘க்கியமும் உடையவர்களாக வளர்க்க விரும்பும் பெற்றோர் புத்திசாலித்தனமும், மன முதிர்ச்சியும் கொண்டிருக்க வேண்டும். மனமுதிர்ச்சி என்பது யார் வேண்டுமானாலும் பண்படுத்திக்கொள்கிற, அபிவிருத்தி செய்து கொள்கிற மனநிலை ஆகும்.
மனப்பக்குவம் உள்ள பெற்றோருக்குக் குழந்தைகள் பிரச்சினை ஆவதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெற்றோரின் மனப்பக்குவம், தங்கள், பெற்றோர், குழந்தைகள், குழந்தை, குழந்தையின், பெற்றோரின், எப்படி, கூடுதல், கவனம், பிள்ளை, வேண்டும், வயது, கொள்ள, மீது, பிள்ளைகள், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி