சேதுபதி மன்னர் வரலாறு - திருமலை ரெகுநாத சேதுபதி
![History of Sethupathi](images/sethupathi_history.jpg)
திருமடங்கள் போற்றுதல்:
இந்த மன்னரது ஆட்சியில் சிறப்புக்களைக் காலமெல்லாம் எடுத்துச் சொல்லும் இந்த ஆன்மீகப் பணிகளான திருக்கோயில், அன்னசத்திரம், சிறுபான்மையினரது வழிபாட்டுத் தலங்கள், என்ற துறைகளில் மட்டும் அமைந்து விடாமல் இன்னும் மிகச் சிறந்த இருபணிகளை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. முதலாவது திருமடங்களைப் பாதுகாத்து வளர்த்தது. இரண்டாவது, கற்கண்டிலும் இனிய கன்னித்தமிழை மிகவும் இடர்ப்பாடான காலகட்டத்தில் போற்றி வளர்ததும் ஆகும். திருமடம் என்று சொல்லும்போது நமது மனக்கண்ணில் தோன்றுவது சோழ வளநாட்டில் உள்ள திருவாவடுதுறை திருமடம் ஆகும். தமிழகத்தில் பல வேற்று மதங்களும், ஆற்றிய ஆக்கிரமிப்புகளும் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு முதல் ஏற்பட்டு வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனத் திருவாசகம் தெரிவிக்கின்ற சைவ சித்தாந் தத்தையும், நடைமுறைகளையும் பாதுகாத்து மக்களை நன்னெறிப் படுத்தும் பணியில் தொடங்கப்பெற்றது திருவாவடுதுறை திருமடம் ஆகும். இந்த மடத்தின் தோற்றம் பற்றிய சரியான காலவரையறை அறியத்தக்கதாக இல்லை. ஆனால் பதினென் சித்தர்களில் மூத்தவரான திருமூலர் என்பவர் இந்தத் திருமடத்தின் தலையாய மூலவர் எனத் தெரிகிறது. திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் அந்த மடத்தின் தலைவர் ஒருவர் இராமேஸ்வரத்தில் இந்த சேதுமன்னரைச் சந்தித்த போது மன்னர் அவரது மடத்தையும் அவரது ஆட்சியில் அமைந்திருந்த திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவிலின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டார். பின்னர் ஆதீனமும், திருப்பெருந் துறை திருக்கோயிலும் மன்னரது பல அறக்கொடைகளுக்கு இலக்கு ஆகின. மேலும் திருவாவடுதுறை ஆதீனம் சேதுநாட்டில் தங்களது சமயப் பணிகளைத் தொடங்கி நடத்துவதற்காக இராமநாதபுரம் அரண்மனையின் மேல வீதியில் திருமடம் ஒன்றும், திருவாவடுதுறையினருக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக தமிழர் பிரான் எனப் பிற்காலத்தில் சேது மன்னர்கள் போற்றப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தவரும் இந்த சேதுபதி மன்னர்தான். தமிழகம் வடவர்களாலும், வடுகர்களாலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது ஆட்சிக்களமாக கி.பி. 17ஆம் நூற்றாண்டு இறுதிவரை இருந்து வந்தது. வடுகர்களது தாய்மொழி தெலுங்கு மொழியாக இருந்ததாலும் அந்த மொழி பிராமணர்களது சமஸ்கிருத மொழியுடன் தொடர்புடையதாக இருந்ததாலும் மதுரை, தஞ்சை செஞ்சி, வேலூர் ஆகிய ஊர்களைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாயக்க மன்னர்கள் தெலுங்கையும, சமஸ்கிருத மொழி ஆகிய இரு மொழிகளை மட்டுமே ஆதரித்து அந்த மொழிகளில் வல்ல புலவர்களுக்கு அன்பளிப் புக்களும், பாராட்டுக்களும் அளித்து வந்தனர். தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்த தமிழ்ப் புலவர்கள் தக்க ஆதரவு இல்லாத காரணத்தினால் வாழ்க்கையில் நலிந்து நொந்து வறுமையின் பிடியில் வாடி வந்தனர்.
இந்த இழி நிலையை அறிந்து மனம் வெதும்பிய சேதுபதி மன்னர் தமிழுக்கும். தமிழ்ப்புலவர்களுக்கும் தேவ தாருவாக (கற்பகத் தாருவாக) விளங்கினார். அப்பொழுது இந்த மன்னரது வீரச் செயல்களையும். கொடைச் சிறப்பையும் செம் ெ ாருளாகக் கொண்டு 100 பாடல்களைக் கொண்ட 'ஒரு துறைக் கோவை' என்ற நூலினைப் பாடிய அமுதக விராயரைத் தமது அரசவைக்கு வரவழைத்துப் பொன்னும், பொருளும் வழங்கியதுடன் அவரது சொந்த ஊரான சிவகங்கை வட்டாரத்திலுள்ள பொன்னன் கால் என்ற கிராமத்தினையும் அந்தப் புலவருக்குத் தானமாக வழங்கினார்[5]. மேலும் தொண்டை மண்டலத்திலிருந்து சேது நாட்டிற்கு வந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்ற புலவரையும் ஆதரித்துப் போற்றினார். திருமலை மன்னர் மீது தளசிங்கமாலை என்ற இலக்கியத்தைப் பாடியதற்காக மிதிலைப்பட்டி என்ற கிராமத்தை அந்தப் புலவருக்கு மன்னர் தானமாக வழங்கி உதவினார்[6]. அன்று முதல் அழகிய சிற்றம்பலக் கவிராயரும், அவரது வழியினரும் ஒரு நூறு ஆண்டு காலம் மிதிலைப்பட்டியில் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்றினர் என்பதை வரலாற்று வழி அறியமுடிகிறது.
இத்தகைய அரிய சிறந்த தெய்வீகத் திருப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும், தமிழ்ப் பணிகளையும் தமது நீண்ட 31 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய இந்த மாமன்னர் கி.பி. 1676ல் இராம நாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணித் திருக்கோயிலின் திருத்தேர் விழாவில் வடம்பிடித்துப் பெருமாளையும், தாயாரையும் வணங்கிய நிலையில் மரணமடைந்தார். இவருக்கு ஆண் வாரிசு இல்லையென்பதாக இராமநாதபுரம் சமஸ்தான வரலாறு தெரிவிக் கின்றது. ஆனால் இராமேஸ்வரம் திருக்கோயிலில் அவர் அமைத்த இரண்டாவது பிரகாரத்தில் சுவாமி சன்னதியில் தென்புறம் இந்த மன்னரது உருவச்சிலை அருகே ஒரு சிறுவன் நிற்பதாகச் சிற்பம் அமைக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ↑ 5. Inam Fair Register - available at the Ramnad Collector's Office
- ↑ 6. Inam Fair Register-available at the Ramnad Collector's Office.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமலை ரெகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், அவரது, மன்னரது, திருமடம், போற்றி, ஆட்சியில், அந்த, நூற்றாண்டு, திருவாவடுதுறை, ஆகும்