கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“தப்பியது இராமபிரான் புண்ணியம்” என்று தலைகாட்டாமல் வந்தவழி நீட்டினர். செய்திகொண்டு சென்ற சேவகர் தாம் ஒற்றி அறிந்து கற்றுவந்ததை முற்றுமாக இராவணனுக்கு உரைத்தனர்; கடல் கடந்த அக்கரைச் சீமையில் போர்ப்பயிற்சி பெற்ற சேனை களைப் பற்றியும், இராமன் தோற்றத்தில் தாம் கண்ட ஏற்றத்தைப் பற்றியும், சரண் அடைந்து சாதியை மறந்து நீதிக்காகப் போராடும் வீடணன் அறப் பற்றையும், அவன் பகைவர்களின் உளவாளியாகச் செயலாற்றுவதையும், இராவணன் சந்திக்க வேண்டிய சாதனைகளைப் பற்றியும் கூட்டாமலும் கழிக்காமலும் உள்ளதை உள்ளவாறு உரைத்தனர் ஆயினர்.
ஆணவம் மிக்க இராவணன், உலகப் போர்களுக்குத் துணை போகும் சர்வாதிகளைப் போலச் சிந்தனையின்றி, கர்வம் கொண்டு ஆவேசம் காட்டினான்; தன் வரத்திலும் உரத்திலும் நம்பிக்கை வைத்திருந்தான், இடியேறு அஞ்சும் படி இராமனை எள்ளி நகையாடினான்; எதிரிகள் மடிவது என்ற உறுதியில் பிடிவாதம் காட்டினான். நாவினால் பேசுவதைவிட வாளினால் வீசுவதையே நம்பினான் சொல்லேர் உழவனாய் இருந்து விவாதிப்பதைவிட்டு வில்லேர் உழவனாகச் செயல்பட விரும்பினான்.
இராவணன் நிலை இவ்வாறு ஆக, இராமன் செயல் வேறு விதமாய் இருந்தது; இலங்கை மாநகரின் மலை உச்சியில் ஏறி நின்று. அந் நகரைக் கண்டு மலைந்தான்; பொன்னொளிர் மதில்களையும், மின் அமர் மாளிகை களையும் கண்டு வியந்தான்; நகரத்தின் எழிலையும், மக்களின் கலைத் திறனையும் இலக்குவனுக்குக் காட்டி னான்; சிற்பிகள் சிரத்தை எடுத்துச் செதுக்கிய கற்பனை களைக் கற்களில் காட்டினான்; அவன் அன்னை கைகேயி, அயோத்தியில் அடிவயிற்றில் ஊட்டிய தீ, அணையாமல் சுடர்விடுவது போல அனு மன் மூட்டிய தீ வானை முட்டிக்கொண்டு எரிந்தது.
எட்டாத கனிக்குக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த இராவணன், சீதையை அடைய முடியாத ஏக்கத்தால் மெலிந்து விட்ட தோள்கள், போர்ச் செய்தி கேட்டுப் பூரித்து வீங்கின. அவனுக்கு இராமனை அடையாளம் காட்டத் தேவை இல்லாமல், அவன் எழில்நிறை தோற்றம், அவனை யார் என்பதை அறிவுறுத்தியது; காமனும், தானும் முறையே கரும்பு வில்லையும், இரும்பு வாளையும் எறிந்து விட்டுத் தலைகுனிய வேண்டும் என்பதை உணர்ந்தான்.
அவ்வாறே வீடணனைக் கொண்டு இலங்கைப் படை வீரர்களை இராமன் அடையாளம் கண்டான். சுக்கிரீவன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டான். சீதையின் முடிவில்லாத் துயருக்குக் காரணம் இராவணன், அவன்தான் என்பதை அவன் கண்டு கொண்டான். நாயைக் கண்டால் கல்லெடுத்து எறிய விரும்பும் சிறுவர் போல் அவசரப்பட்டு, அவன் இராவணன்மீது பாய்ந்தான். அது நாட்டுநாய் என்று நினைத்தான்; அது வேட்டை நாய் என்பதை அவன் அறியவில்லை; அது அவனைக் கடித்துக் குதறி விட்டது; தப்பித்தால் போதும் என்று அவன் தன் தவிப்பை வெளியிட்டான்; இராமன் தான் தன் இனிய துணைவனை இவ்வளவு விரைவில் இழப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை; நண்பனை இழந்தபின் அன்புடைய மனைவியை அடைவதில் அவன் மனம் ஈடுபடவில்லை.
வாணர வேந்தன் உயிர் பிழைத்து வர வேண்டுமே என்ற கவலை அவனை வாட்டியது; இராவணன் பேராற்றல் உடையவன்; முன்பின் யோசனை செய்யாமல் நெருப்பில் கைவிடும் சிறுகுழந்தைபோல் சுக்கிரீவன் செயல்பட்டுவிட்டான் என்று வருந்தினான். இருந்தாலும் அந்த நெருப்பில் உள்ள கரித்துண்டை எடுத்து வெளியே போடும் குழந்தையைப் போல் இராவணன் முடியில் பிடிபட்ட வைரக் கற்களைப் பறித்துக் கொண்டு இராமனிடம் வேகமாக வந்து சேர்ந்தான்; தலைதப்பியது; இராவணன் முடி தப்பவில்லை; மற்றவர் முடிகள் தாம் அவன் அடிகளில் பட்டுப் பழக்கம்; இதுவரை தன் மணிமுடியில் மாற்றான் கைபட்டது இல்லை; இதை அவமானமாகக் கருதினான் இராவணன்.
அனுமன் அசோக வனத்தை அழித்தான்; அவன் தலைவன், அவன் மணிமுடியைப் பறித்தான்; இச் செய்கை இராவணனுக்கு எரிச்சல் ஊட்டியது.
அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை முடிவு செய்ய, அமைச்சர் அவையை இராவணன் கூட்டினான்; போர் முயற்சிகளை மேற்கொண்டான்; போர்முரசு கொட்டச் செய்தான். வெற்றிதரும் சங்குகளை முழக்கினான்; அமைதி இலங்கையிடம் விடுமுறை பெற்று, ஒய்வு எடுத்துக் கொண்டது.
இராவணன் போருக்குப் பின்வாங்கவில்லை; இருதரத்தவரும் கைகலக்கக் காத்திருந்தனர்; எனினும், முடிந்தால் கைகுலுக்க இராமன் முயற்சி எடுத்துக் கொண்டான். இது தனிப்பட்ட ஒருவனோடு தொடுக்கும் போர் அன்று; ஒர் அரசன் மற்றொரு அரசன்மேல் எடுக்கும் படை எடுப்பு, “தூதுவன் ஒருவனை அனுப்பிச் சீதையை விடுவது பற்றிப் பேசி வெற்றி காண வேண்டும்” என்று விழைந்தான்.
முரசு அறைந்து உரசு போரைத் தொடரும் அறிவு அறை போகிய நெறி தவறிய காவலனுக்கு நீதி கூற விரும்பினான்; சொல்லின் செல்வன் அனுமன் வெல்லும் திறமை உடையவன் என்றாலும், அவனைத் துது அனுப்பாமல் அரசமகன் அங்கதனை அனுப்பிப் புதுமை தோற்று விக்க விரும்பினான்; “'அனுமனைத் தவிர வேறொரு ஆள் இல்லை; அவனே திரும்பி வருகிறான்; என்று பகைவர் குறைவாய் எடை போடக் கூடும்” என்பதால் ஆள்மாற்றத்தைச் செய்ய விரும்பினான்; வாலி மைந்தன் என்பதால் அவனுக்கு ஒரு தனி தகவு இருந்தது; அறிமுகமானவன் என்பதால் அதிகம் பேசத் தேவை இராது; இராவணனுடன் பேசுவதற்கும் தடைநேராது.
வருகை தந்த தூதுவனுக்கு வரவேற்புத் தரப் பட்டது; அங்கதன் தந்தையைக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்க வந்திருப்பது இராவணனுக்கு வியப்பைத் தந்தது.
“தந்தையைக் கொன்றவனுக்கு ஆதரவு தேடவந்திருக்கிறாய்? இது விசித்திரமானது” என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராவணன், என்பதை, இராமன், விரும்பினான், கண்டு, செய்ய, என்பதால், கொண்டு, இராவணனுக்கு, பற்றியும், தாம், காட்டினான்