கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“கடலைக் கடப்பது எப்படி? வழிவகைகள் யாவை?” இவை பற்றிச் சீதை மணாளன் சிந்தித்தான்; முல்லை நிலத்துக்குக் கண்ணனும், மலைக்கு முருகனும், மருதத்துக்கு இந்திரனும், பாலைக்குக் காளியும் வழிபடு தெய்வங்களாய் இருப்பது போல, நெய்தல் நிலத்துக்கும், நீலக் கடலுக்கும் தெய்வம் வருணன் என்பது நினைவுக்கு வந்தது. அவன் பெயரால் மந்திரம் சொல்லிச் சென்று ‘கடலில் வழிதருக’ என்று விளம்பினான்; அலை ஒசையில் அவன் காதில் இராமன் சொல்லோசை விழவில்லை.
வாய்ச் சொல்லுக்குச் செவிசாய்க்காத செவிடலை! வழிக்குக் கொண்டு வரக் கைவில்லுக்கு ஆணை பிறப்பித்தான்; இராமன் நாண் ஏற்றினான்; பிரம்ம அத்திர நேத்திரத்தைத் திறந்தான்; ஏவியகணை அவன் ஆவியை வாங்க அவனை அணைந்தது. அலறி அடித்துக் கொண்டு அடக்க ஒடுக்கமாய் அண்ணல் இராமன்முன் வந்து நின்றான் வருணன். அலை அடலுக்கு அப்பால் தன் ஆணையைச் செலுத்தியதால், இப்பால் என்ன நடக்கிறது? என்பதை அவனால் கவனிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தான்; தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.
கடல்நீரை அம்புகொண்டு வற்றச் செய்து விட்டால், காடுகள் இல்லாமல் போய்விடும்; மழை தன் இருப்பைச் சேர்த்து வைத்திருக்கும் வங்கிதான் கடல், வங்கி பொய்த்து விட்டால், மேகங்கள் முடமாகிவிடும்; வான்மழை பொய்த்தால் தருமம் ஏது? நீரில் வாழ் உயிர் அழியும்; நிலத்தில் பயிர் ஒழியும்; “நீரின்று அமையாது உலக வாழ்க்கை” என்ற பழந்தமிழ்ப் பாட்டைச் சொல்லி இராமன் விட்ட அம்பை அடக்கிக் கொள்ள வேண்டினான் வருணன்.
“கடல் பிழைத்தது; அதன்மேல் அணை அமைத்தால்தான் பாதையை அமைக்க முடியும்” என்றான்.
“இரகுராமனாய் விளங்கும் அவன், சேதுராமனாய் மாற வேண்டும்” என்றான்; ‘சிங்களத் தீவுக்கும் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் சேது அமைப்பது உறுதியாகியது. மற்றும் குரங்குகளைக் கொண்டே “கல்லையும், செடிகளையும், பட்ட மரங்களையும், பாழ்பட்ட முள்களையும் போட்டுப் பாதை அமைக்கலாம்” என்றும் கூறினான்.
குரங்குப்படை அதற்குப் பிறகு உறங்கவே இல்லை; அவை கொண்டுவந்து குவித்த கற்குப்பைகளையும், மரம் செடி கொடி வகைகளையும் நளன் என்னும் தெய்வத் தச்சன், களன் இறங்கி வலிவு மிக்க பாலம் ஒன்று கட்டுவித்தான்; சேதுவின் செய்வினை அவன் கைவினையாய் அமைந்தது. ‘அகலத்தில் பத்து யோசனை நீளத்தில் நூறு யோசனை தூரம்’ என்று அதற்குக் கல்நாட்டு விழாவில் சொல்நாட்டி வைத்தனர்; கட்டி முடிந்தது; இராமன் வந்து பார்வை இட்டான்.
போரின் முழக்கம்
இலங்கைக்குப் படை சென்றது; சென்றது நேசக் கரங்கள் அல்ல; விநாசக் குரங்குகள்; அது அணி வகுத்துத் தொடர்ந்தது; இராமனும் இலக்குவனும் முன்னோடிகளாய் நடந்தனர்; வீடணன், சுக்கிரீவன், மற்றுமுள்ள படைவீரர் அவர்களுக்குத் துணை ஆயினர்.
வெட்ட வெளியை அவர்கள் தங்குமிடமாய்க் கொண்டனர்; சுற்றிலும் மாளிகைகள்; நடுவில் ஒரு பெரிய குன்று; அதில் நின்று எதையும் பார்க்க முடியும்; நளன் என்னும் பெயருடைய தச்சன் அந்தக் குன்றில் தங்க ஒரு பாடி வீடு அமைத்துக் கொடுத்தான்; இராமனுக்கு என ஒர் உயரமான பர்னசாலை அமைத்துத் தரப்பட்டது; அங்கு அவன் தம்பியோடு தங்கினான்.
போர்க் கதை தொடக்கமாயிற்று; இராவணன் ஒற்றர் இருவர் குரங்கு வடிவத்தில் அங்கு இறக்குமதி செய்யப் பட்டனர்; சுகன், சாரன் என்ற பெயருடைய அவ்வொற்றர் தாம் கற்ற மாயையால் தம்மை மறைத்துக் கொண்டு திரிந்தனர்; தம்மைக் குரங்குகள் என்றே கருதச் செய்தனர்.
“தேவரே அனையவர் கயவர்; இருவருக்கும் வடிவத்தால் வேறுபாடு இல்லை” என்பார் வள்ளுவர்; அக் குறள்பாட்டைக் காட்டவில்லை; வீடணன் மட்டும் அவர்கள் பால் ஐயம் கொண்டான். பாம்பின்காலைப் பாம்பு அறிந்தது; அனைவர் பார்வையும் அவர்கள்மீது மையம் கொண்டது.
அவர்கள் மந்திரதந்திரம் கற்றவர்; அவற்றை அறிந்து, வீடணன் வல்லவனுக்கு வல்லவனாய் விளங்கி, அவர்கள் வேடத்தைக் கலைத்தான்; பூசி இருந்த வண்ணக் கலவை நீங்கியது: மை நிறத்து அரக்கராய் வெளிச்சத்தில் வைக்கப்பட்டனர்; அவர்கள் மெய்யைக் காட்டிய பிறகு, ‘தாம் யார்?’ என்ற மெய்யை உரைத்துவிட்டனர்; தாம் அரக்கர் என்பதை இராமனிடம் கூறி, இரக்கம் காட்டும்படி வேண்டினர்.
தூதுவர்க்கு உரிய மரியாதையை இராமன் அவர்களுக்குக் காட்ட விரும்பினான்; தீய சிந்தை யரைக் காட்டும் போது விழும் தரும அடிகள், அவர் களை அணுகவில்லை; “'மறைந்திருந்து மறைகளை அறிந்து சொல்ல வேண்டிய தேவையில்லை; நிறைந் திருந்து இங்குள்ள நிறை குறைகளை எண்ணிக்கை விடாமல் தெளிவாய் அறிவிக்கலாம்” என்றான் இராமன்.
“எங்கள் வீரத்தை எடுத்து விளம்ப எங்களுக்கு நீங்கள் தொடர்பேசியாய் இருப்பீர், என்று எதிர் பார்க்கிறேன்; அஞ்சாமல் சொல்லலாம்; நாங்கள் நேரில் சொன்னால் உம் தலைவன் நம்பமாட்டான்; அறிந்து வந்து அறிவித்தால் அதற்கு ஆதிக்கம் அதிகம்” என்று சொல்லி அனுப்பினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராமன், வீடணன், அறிந்து, என்றான், கொண்டு, வருணன், வந்து