கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“இராமனை அடைந்தால் பிறப்புக்கு விடுதலை கிடைக்கும்; பேரின்ப வீடு கிடைக்கும்” என்ற நம்பிக்கை யும் இவனுக்கு இருந்தது. இந்த இரண்டு காரணங்களால் இவன் இராவணனை விட்டு விலக முடிவு செய்தான். இவனுக்கு நெருங்கிய நேசமுடைய அமைச்சர்கள் நால்வரோடு கலந்து கட்சி மாறுதல் தேவை'” என்பதை உணர்ந்தான். பாசத்தை விட நேசம் இவனுக்குப் பெரிதாகப்பட்டது.
கடலைக் கடந்து கார் வண்ணன் இருக்குமிடம் சேர்ந்தான்; வீடணன் தமிழ்மண்ணில் கால்வைத்தான். அது இலங்கைவாசிக்குப் புகலிடம் தந்தது; ‘முன்பின் அறியாத முதல்வனாகிய இராமனை எப்படிச் சந்திப்பது? எப்படி அறிமுகம் செய்துகொள்வது? ஏற்புடைய கருத்துகளை எப்படி எடுத்துச் சொல்வது? பகைக் களத்திலிருந்து வந்தவனுக்குப் புகல் இடம் எப்படிக் கிடைக்கும்? அஞ்சி அஞ்சி அவனை அணுகினான்.
குரக்கினத் தலைவர் சிலர் வீடணனைக் கண்டனர்; ‘அவன் தீய எண்ணத்தோடுதான் வந்திருக்க வேண்டும்’ என்று எண்ணினர்; ‘அவனை இழுத்துப் பிடித்துக் கழுத்தை நெரித்துக் கொல்வதே ‘தக்கது’ என்று முடிவு செய்தனர்.
மயிந்தன், துமிந்தன் என்னும் பெயருடைய வானரத் தலைவர் வேறுவிதமாய் நினைத்தனர்; அங்க அழகு இலக்கணங்களை அவர்கள் அறிந்தவராய் விளங்கியதால், ‘அவன் அரக்ககுணம் அற்றவன்’ என்று முடிவு செய்தனர்; அறவாழ்க்கையும் நீதியின் பால் நெஞ்சமும் உடையவன்; ராவணன் வஞ்சகத்தை எதிர்த்து வந்திருக்கிறான்” என் இராமனிடம் உரைத்தனர்.
இராமன் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்ய விரும்ப வில்லை; அவன் அரசமகன்; மற்றவரைப் பேசவிட்டுத் தன் இருப்பிடத்தை ஒர் ஆலோசனை மண்டபம் ஆக்கினான்; சுருசுருப்பாய்ச் சுக்கிரீவன் தன் கருத்தை உரைத்தான்.
“வந்தவன் ஒரு சந்தர்ப்பவாதியாகத்தான் இருக்க வேண்டும்; அவனுக்கு அடிப்படையில் நாட்டுப்பற்று இல்லை; அவன் பற்று வேறு: “நாட்டை உம்மிடம் கேட்டுப் பெற்று ஆட்சி செய்ய வேண்டும்” என்று விரும்புகிறான். இராவணனோடு இதற்குமுன் மாறுபட்டவன் அல்லன்; இன்று அவன் வேறுபடுகிறான் என்றால், அவன் ஒரு துரோகியே” என்றான்.
சாம்பவான் வயதில் மூத்தவன்; அனுபவசாலி, ஆர அமர எதையும் சிந்தித்துப் பேசக் கூடியவன். அவன் பழமைவாதி, சாதிப்பற்று மிக்கவனாய்க் காணப்பட்டான்.
“வந்தவனோ, அரக்க சாதி, நீதியால் வேறுபட்டு, இவன், இங்கு வந்து சேர்கிறான்; ஒருமுறை இவனை ஏற்றுக் கொண்டால் பிறகு அவனை வெளியேற்ற முடியாது. தஞ்சம் அடைந்தவனை எக்காரணத்தைக் கொண்டும் வஞ்சகன் என்று தள்ள முடியாது; மாரீசன் பொன்மானாய் வந்து நம்மை மயக்கினான்; இவன் நன்மகனாக வந்து நயக்கிறான். இருவருக்கும் வேறுபாடு கிடையாது” என்றான் சாம்பவான்.
“தெருவிலே போகிற வம்பை யாரும் விலைக்கு வாங்கமாட்டார்கள். தொடக்கத்தில் இவன் நல்லவனாக நடிப்பான்; ஏமாறும்போது இவன், தன் பாடத்தைப் படிப்பான்; இவன் ஒரு ஒட்டைப்படகு இவனைக் கொண்டு நாம் கரையேற முடியாது; நட்டாற்றில் தள்ளி விட்டுத் தன் நாயகனிடம் போய்ச் சேர்ந்துவிடுவான்” என்று நீலன் ஒலமிட்டான்.
இராமன் மாருதியை அழைத்தான்; மாற்றுக் கருத்து இருந்தால் உரையாற்றலாம், என்றான்.
அரசியல் அறிந்த அனுமன், “இவனைத் தூயவன் என்றோ, தீயவன் என்றோ அவசரப்பட்டு முடிவு செய்ய இயலாது; இவனுக்கு ஏதோ ஒர் உட்கருத்து இருக்க வேண்டும்.”
“நாட்டிலே பரதனுக்கும், காட்டிலே என் தலைவனுக்கும் ஆட்சி தந்திருக்கிறாய்; இங்கே தக்க சமயத் தில் வந்து முந்திக் கொண்டான் இவன்; இலங்கை தனது ஆகும் என்ற ஆசையால் வந்திருக்கலாம். ஆட்சி காரணமாய் வந்திருக்கலாம்; ஆசை யாரை விட்டது?”
“இவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை அறிவது, அறிய விரும்புவது தேவை இல்லை; அது பள்ளியாசிரியர்தான் சான்றிதழில் எழுத வேண்டும்; இது பகைப்புலம்; அதனால், நமக்கு நன்மையா தீமையா? என்று முடிவு செய்வதுதான் நல்லது” என்றான்.
“நாமாக விரும்பி அவனை நயக்கவில்லை; அவனாக வந்தால் அவனை பயன்படுத்துவதில் தவறு இல்லை.”
“இவன் எந்தக் கட்சி? யாருக்கு இவன் எதிர்க் கட்சி? இவன் முன்சரித்திரம் என்ன? இவற்றை அறிந்து கூறுகிறேன்”.
“இவனை இலங்கையில் கண்டு இருக்கிறேன்; கள்ள அரக்கர் மத்தியில் வெள்ளை உள்ளம் படைத் தவன்; அரசநீதி அறிந்தவன்; தூதுவனாகச் சென்ற எனக்குத் துயர் விளைவிக்கவிடாமல் தடுத்தவன். அந்த நாட்டில் அச்சடித்த நீதி நூலில் ஊன் உண்ணாமையும், மது மறுத்தலும் தடை செய்யப்பட்டவை; இவனோ விதி விலக்கு: சைவ உணவு தவிர மற்றவற்றைச் சுவையாதவன்; கோயில் குருக்களாகப் பிறக்கவேண்டியவன்; அரக்க குலத்தில் பிறந்துவிட்டான்.”
“இவன்தான் இப்படி அவன் மகள் எப்படி? அந்தப் பெண் அங்கு இல்லாவிட்டால்; சிறை வாசத்தைச் சீதைக்கு சுகவாசமாய் மாற்றி இருக்க முடியாது. இராவணன் மருட்டியபோது எல்லாம், “அவன் கட்டுண்ட பட நாகம்; வெற்று வேட்டு; அவனால் சீதையைத் தொட முடியாது; தொட்டால் அவன்தலை சுக்கு நூறாகும்” என்ற சாபத்தை எடுத்துச் சொன்னவள் அவள்தான். சீதைக்காக நம்பிக்கைக் கனவுகளைக் கண்டு சொல்லியதும் அவள்தான்; அந்தக் குடும்பமே நமக்குத் துணையாக இருந்து வருகிறது; பகை நடுவே பண்புமிக்க நண்பர் அவர்கள்; இது அவர்கள் மனித இயல், அரசியல் வேறு”.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - இவன், முடிவு, அவன், முடியாது, என்றான், வந்து, அவனை, ஆட்சி, இல்லை, இருக்க, எப்படி, செய்ய, இவனுக்கு, கட்சி, வேண்டும்