கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
தவமுனரிவனிடம் வென்று பெற்ற வில் அப்பொழுது தேவைப்படவில்லை; அதனை வருணனி டம் தந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி இராமன் ஆணையிட்டான் அது பிற்காலத்தில் கரனோடு போர் செய்யும்போது பயன்பட்டது; அவன் சிரம் நீக்க இந்த வில்லைக் கேட்டுப் பெற்றான்; தக்க சமயத்தில் உதவியது; பரசுராமனிடம் பெற்ற பரிசு இந்த வகையில் அவனுக்குப் பயன்பட்டது. பரசுராமன் வடக்கு நோக்கி விடை பெற்றதும் அடக்கமாகத் தந்தையை அணுகித் தன் வெற்றியை விளம்பினான் இராமன். அச்சம் நீங்கித் தசரதன், நல்லுணர்வு பெற்றுக் களிப்பு என்னும் கடலுள் ஆழ்ந்தான். தீமை விலகிற்று என்பது ஒன்று; இராமன் வெற்றி பெற்றான் என்ற சிறப்பு மற்றொன்று.
துயரமும் அபூர்வும் நீங்கி அனைவரும் இனிமை யாய் அயோத்தி அடைந்தனர். மாற்றம் அல்லது ஏற்றம் ஏதுவும் இல்லாமல் தசரதன் வாழ்க்கை சென்றது. மணம் செய்து கொண்டு வந்த பரதனை அவன் பாட்டனார் அழைத்து, விருந்து வைப்பதற்கு அழைப்பு அனுப்பினார். கேகய மன்னன்விடுத்த செய்தியை இராமனின் அடுத்த தம்பியாகிய பரதனிடம் தசரதன் எடுத்துக் கூறினான்; “நீ சில நாள் சென்று தங்கிவருக” என்று சொல்லி அனுப்பனான்.
பரதனும் தசரதனிடம் விடை பெற்றுக்கொண்டு இராமனை வணங்கிப் பிரிய மனமில்லாமல் அரிதிற் பிரிந்தான். இராமனை அவன், தன் உயிரையும்விட மிக்கு நேசித்தவன் ஆதலின், பிரிவிற்கு மிகவும் வருந்தினான். செல்லும் இடம் அவனுக்குத் தேனிலவாக இல்லை; நிலவு இல்லாதவானாக இருந்தது.
இவனை அழைத்துச் செல்லத் தாய் மாமன் உதயசித்து வந்திருந்தான். அவன் ஒட்டிய தேரில் கேகய நாட்டை நோக்கிச் சென்றான். அவனோடு இளயவனான சத்துருக்கனனும் சென்றான். நாள்கள் ஏழு அவன் ஊர் செல்வதற்கு இடையிட்டன. ஏழாம் நாள் அவர்கள், தம் தாய் பிறந்த நாட்டை அடைந்தனர். தசரதனும் ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்து அமர்ந்து மக்களுக்குக் காட்சி தந்து தனக்கு உரிய கடமைகளைச் செம்மையாய் ஆற்றிக் கொணடிருந்தான். புயலுக்கு முன் அமைதி, அது அவன் மன நிறைவுக்குத் துணை செய்தது. எதுவுமே நிலைப்பது இல்லை; மாற்றங்கள் வரக் காத்துக் கொண்டிருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், தசரதன், இராமன்