கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
வசிட்டர் இராமன் ஆட்சியை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்; “சூரிய குலத்து மன்னர்கள் முறை பிறழ்ந்தது இல்லை. மேலும் நான் தந்தையைப்போல மதிக்கத் தக்கவன், ஆசான், ஆசான் சொல்லைத் தட்டாதே! யான் இடும் ஆணையை ஏற்று உனக்கு உரிய நாட்டைப் பாதுகாப்பாய்” என்று கூறித் தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.
அம் ‘முனிவனைத் தொழுது’ “அறிஞ! ஒரு செயலைச் செய்வதாக ஒப்புக் கொண்டபின் அதனைக் கைவிடுவது அறமாகுமா, தாயும் தந்தையும் இட்ட கட்டளைகளை மேற்கொள்ளாத அற்பனாக நான் வாழேன்; அவர்கள் இட்ட பணியைத் தாங்கிச் செயலாற்றும்போது வேறுவிதமாக மாற்ற முனைவது நீதியாய்ப் படவில்லை; முறை தவறி நான் ஆட்சியைக் கைவிடுகிறேன் என்று சொல்கிறீர்; நீங்கள் முறை தவறி உரை செய்வதுதான் வியப்பாக உள்ளது” என்றான் இராமன்.
முனிவன் உரைத்தும் அவன் ஏற்கவில்லை என் பதை அறிந்த பரதன், முடிவாகத் தன் கருத்தைக் கூறினான்.
“அப்படியானானல் நாட்டை ஆள்பவர் ஆளட்டும்; நான் காட்டை மேவுதல் உறுதி” என்றான்.
“அது என் உரிமை, இதை யாரும் தடுக்க முடியாது” என்ற பரதன் உறுதியாக நின்றான்.
வானவரும் “என்ன ஆகுமோ?” என்று அஞ்சினர்.
“தெய்வத் திருவுளமும், அங்கு கூடியிருந்தவர் கருத்தும் பரதன் ஆட்சியை ஏற்று நடத்துவதே தக்கது” என்ற முடிவுக்கு வந்தனர்.
மறுபடியும் இராமன் பரதனை அன்புடன் கேட்டுக் கொண்டான்.
“என் ஆணையால் பாரினை ஆள்க” என்றான்.
“குறிப்பிட்ட ஆண்டுகள் பதினான்கு முடிந்ததும் நீ அங்கு வந்து சேர வேண்டும்; ஒருநாள் தாமதம் ஆனாலும் நெருப்பில் விழுந்து உயிர் துறப்பேன்” என்றான் பரதன்.
இராமன் உறுதிமொழி தந்தான். அதற்குமேல் பேச முடியாமல் “நின் திருவடி நிலைகளை ஈக” என்று கேட்டான். இராமன் தன் பாதுகைகள் இரண்டனையும் அவனுக்குத் தந்தான்.
பரதன் அழுத வண்ணம் பாதுகை இரண்டையும் தரையில் வைத்து வணங்கினான்; மணி முடிகளாய் அவற்றைத் தலையில் தாங்கிக் கொண்டான். பரதன் அயோத்திக்கு, அடியெடுத்து வைக்க வில்லை; கங்கையைக் கடந்து, கோசல நாட்டின் தென் எல்லையில் இருந்த நந்தியம் பதியை அடைந்தான்; சிம்மாசனத்தில் இராமன் திருவடி நிலைகள் இடம் பெற்றன. அவற்றை வணங்கி வழிபட்டு இராமன் ஆட்சியைப் பரதன் அங்கு இருந்து நடத்தினான்.
சித்திர கூடத்தில் மேலும் தொடர்ந்து தங்கி இருந்தால், அயோத்தி மாந்தர், வந்து வருத்துவர் என்பதால் தானும் தம்பியும் தையலுமாகத் தென்திசை நோக்கிச் சென்றான் இராமன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - இராமன், பரதன், என்றான், நான், அங்கு, முறை