கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்

“ஆழம் மிக்க இவ் ஆற்றை இவர்கள் எப்படி என் உதவி இல்லாமல் கடக்க முடியும்? யானைப்படை கொண்டு வந்தால் அதைக் கண்டு நடுங்கிப்போக நான் ஒரு சிற்றெலியா? “தோழமை” என்று அவர் சொல்லிய சொல் ஒன்றேபோதும்; அவர்களை எதிர்த்து உயிர்விட்டால் அதுவே எனக்குப் பெருமை; “இந்தக் கோழை வேடன் எதிர்த்து இறக்கவில்லை” என்ற பழியை நான் ஏற்க மாட்டேன்.”
“பரதனது சேனையைச் சாடி அழித்து இராமனே ஆளும்படி வேடுவர் ஆட்சியை மீட்டுத் தந்தனர்” என்ற புகழுக்கு உரிமை உடையவன் ஆவேன்; நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர்கள், நாம் ஆளும் காடும் கொடுக்க மறுக்கிறார்களே! படை எடுத்து அழிக்க வருகிறார்களே!” என்று வீரர்களிடம் உரை நிகழ்த்தினான்.
இராமனுக்கு அன்பனாகிய குகன், இவ்வாறு பேசி நிற்பதைக் கண்ட பரதன், “இவன் யார்? என்று சுமந்திரனைக் கேட்டான். சுமந்திரன் அவனை அறிமுகப் படுத்தினான்.
“கங்கையின் இருகரையும் இவன் ஆட்சிக்கு உட் பட்டவை; அளவற்ற மரக்கலங்களுக்கு உரியவன்; இராமனுக்கு உயிர்த் துணைவன்; களிறு போன்ற திண்மையும், பெருமையும் உடையவன்; கடல் போன்ற படைகளை உடையவன்; “குகன்” என்பது அவன் பெயர்; உன்னைக் கண்டு வரவேற்க நிற்கின்றான்” என்று கூறினான்.
‘சுமந்திரன் கூறிய சொற்களைக் கேட்டுப் பரதன் உள்ளம் குளிர்ந்தான்; இராமனுக்கு இனிய துணை வனாய் அவன் என்னைக் காண்பதற்குமுன் நானே போய் அவனைக் காண்பேன்’ என்று சொல்லிப் புறப்பட்டான்.
மரவுரி ஆடையும், மாசடைந்த மேனியும், சிரிப்பு இழந்த முகமும், கனியும் துயரமும் உடைய பரதனைக் கண்டான் குகன், கையில் இருந்த வில் தானாகவே கீழே நெகிழ்ந்து விழுந்தது; விம்மி விம்மி அழுதான்.
‘தாயுரை கொண்டு, தந்தை உதவிய தரணியைத் ‘தீவினை’ என்று கூறித் துறந்து, சிந்தனையை முகத்தில் தேக்கிக் காட்டுகிறான் என்றால் அவனைவிடச் சிறந்த தியாகி யாரும் இருக்க முடியாது; புகழுக்கு உரியவன் ஆகிவிட்டான்; அவன் தன்மைக்கு ஆயிரம் இராமர் ஒன்று கூடினும் நிகராய் இருக்க முடியாது’ என்று கூறிப் பாராட்டினான்.
‘இராமன் எங்கே உறங்கினான்? இலக்குவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?’ என்ற கேள்வி களைப் பரதன் கேட்டான்.
“அல்லை ஆண்டு அமைந்தமேனி அழகனும் அவளும் துஞ்ச,
வில்லையூன்றியகையோடும் வெய்துயிர்ப் போடும் வரன்,
கல்லையாண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லைகாண் பளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம் என்றான்”.
அழகனும் அவளும் துயில் கொள்ள இளவல் அவர்களுக்காகக் காவல் காத்தான்; உறக்கம் நீத்தான் என்று குகன் விவரித்தான்.
‘யான் துன்பத்துக்குக் காரணம் ஆயினேன்; இலக்குவன் அதைக் துடைக்க நின்றான்; அவன் அன்புக்கு ள்ல்லையே இல்லை; என் அடிமைத்தனம் அழகிது’ என்றான் பரதன்.
நங்கையர் நடையின் அன்ன நாவாய்கள் கங்கையில் இடமே இல்லாதபடி நிறைந்துவிட்டன; அவை வந்தவர்களைக் கரை ஏற்றின.
தன் தம்பியும், தாயர் மூவரும், சுமந்திரனும், குகனும் ஒரே படகில் ஏறிச் சென்றனர்.
குகன் கோசலையைத் தொழுது நோக்கி, “இவர் யார்?” என்று வினவினான்.
‘தசரதன் முதல்தேவி, இராமன் தாய்; அவனைப் பெற்றதால் அடைந்த செல்வத்தை யான் பிறந்ததால் இழந்த பெரியாள்’ என்றான் பரதன்.
அடுத்துச் சுமித்திரையை அறிமுகம் செய்தான்.
“இராமனுக்குப் பின்பிறந்தான் என்னும் பெருமைக் குரிய இலக்குவனைப் பெற்றெடுத்த பெருமை உடையவள் இவள் என்றான்.
அடுத்துக் கைகேயியை அறிமுகம் செய்தான்.
“இத் துன்பங்களுக்குகெல்லாம் காரணமாய் நின்றவள்; பழி வளர்க்கும் செவிலித்தாய்; இவள் குடலிலே கிடந்து பாவம் செய்தவன் நான்; இந்த உலகம் களை இழந்து, உயிர்ப்பு அடங்கி இருப்பதற்கு இவள்தான் காரணம்; இந்நிலையில் இடரே இல்லாத முகத்தினை உடையளாய் இவள் இருக்கிறாள் என்றால், இவளே என்னை “ஈன்றவள்” என்றான்.
தாய் என்பதால் இரக்கமற்ற அவளையும் குகன் கையெடுத்து வணங்கினான். தோணியை விட்டு இறங்கிய தாயர் மூவரும் சிவிகையில் ஏறினர். குகனோடு பரதன் காலால் நடந்தான். அனைவரும் பரத்துவாசர் இருப் பிடத்தை அடைந்தனர். அவர் இவர்களை இன்முகம் காட்டி வரவேற்றார்.
திருவடி சூட்டிய வரலாறு
பரத்துவாசர், ‘ஆள்வதை விட்டுக் காட்டுக்கு வந்தது ஏன்?’ என்றார்.
‘மாள்வதற்கு வழிதேடி வந்துள்ளேன்; முறை தவறி எனக்குத் தந்த ஆட்சியை நிறை மனத்தோடு இராமன் ஏற்றுக்கொள்ள வேண்டுதற்காக வந்தேன்; அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் யான் மாள்வது உறுதி’ என்றான் பரதன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - பரதன், அவன், என்றான், குகன், இவள், உடையவன், இராமனுக்கு, நான்