கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
இலக்குவன் மழைநீர்பட்ட மலைக்கல் போலக் குளிர்ந்து ஆறினான். சூடு தணிந்தது; தன்னை அடக்கிக் கொண்டான்; தன் தமையன் கட்டளைக்கு அடி பணிந்தான்; அதன்பின் இராமன் நிழலாக அவன்பின் தொடர்ந்தான்; தன் தாய் சுமத்திரையைக் காணச் சென்றான்; இராமனும் அவனுடன் சென்றான்.
கைகேயி இராமனுக்காக அனுப்பி வைத்த மரவுரியை ஏற்று உடை மாற்றிக் கொண்டான், களம் நோக்கிச் செல்லும் போர் வீரனாக மாறினான்; தவக் கோலத்தில் தமையனைக் கண்ட இலக்குவன், கண் கலங்க நின்றான்; சுமத்திரை அவனைத் தட்டி எழுப்பினாள்.
“தமையனைக் கண்டு நீ கண்ணிர் விடுகிறாய்; அதனால் நீ அவனுக்கு அந்நியன் ஆகிறாய்; நீயும் புறப்படு; கோலத்தை மாற்று; வில்லை எடுத்து அவன் பின் செல்க! மரவுரி நான் தருகிறேன்; நீ உடுத்திக் கொள்; அதுதான் உனக்கு அழகு தரும்”
“இராமன் வாழும் இடம்தான் உனக்கு அயோத்தி; அவன்தான் உனக்கு இனித் தந்தை. சனகன் மகள் சீதைதான் உனக்கு இனி அன்னை, காலம் தாழ்த்தாதே; புறப்படு; இங்கு நிற்பதும் தவறு” என்றாள்.
மரிவுரி தரித்து இலக்குவனும் இராமன்பின் வந்து நின்றான்.
“இது என்ன கோலம்?” என்று வியப்புடன் கேட்டான்.
“அரச உடை அங்கு ஆகாதே” என்றான்.
“உன்னை யார் காட்டுக்கு ஏகச் சொல்லியது? வரம் எனக்குத்தானே தவிர உனக்கு அல்லவே”
“நான் உடன் வரக்கூடாது என்று அன்னையர் யாரும் வரம் வாங்கவில்லையே” என்றான்.
அவனும் தன்னுடன் வருதலை விரும்பாது, அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான்.
“உனக்கு இங்கே கடமைகள் மிக்கு உள்ளன; அன்னையர்க்கு ஆறுதல் கூற உன்னையன்றி யார் இருக்கிறார்கள்?”
“தந்தை நிலை கெட்டு உலைகிறார்; அவருக்கு என் இழப்பை ஈடு செய்ய நீ இருக்க வேண்டாவா?”
“பரதன் ஆட்சிக்குப் புதிது; வயதில் என்னைவிட இளைஞன், அவனுக்குத் துணையாக யார் இருப்பர்?”
“யான் இங்கிருந்து ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன; எனக்காக நீ இரு; என் வேண்டுகோளை ஏற்று நட” என்று அறிவுரை கூறினான்.
மூத்தவன் இந்த உரைகளைப் பேசுவான் என்று இலக்குவன் எதிர்பார்க்கவில்லை; இந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டுக் கடுந்துயரில் ஆழ்ந்தான்; விம்மி அழுதான்.
“ஏன் என்னை உன்னிடமிருந்து பிரிக்கிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை நான் விரும்பும் இடத்தில் வாழ விடு”
“மீனும் குவளையும் நீரில்தான் வாழும்; ஏனைய உயிர்களும் அவை அவை வாழும் இடம் இவை எனத் தேர்ந்து எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன; கட்டிய மனைவியை நீ விட்டு ஒதுங்கமுடியாது; ஒட்டிய உறவுடைய என்னையும் நீ வெட்டித் தள்ளமுடியாது; “எட்டப் போ” என்று கூறமுடியாது! நீ இல்லாமல் நான் வாழ முடியாது; அன்னை சீதையும் உன்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது; இது எங்கள் நிலை”.
“ஏன் என்னை ஒதுக்குகிறாய்; உனக்குக் கொடுமை இழைத்த தசரதன் மகன் என்பதாலா? நீ எதைச் சொல்லி இதுவரை மறுத்தேன்; சினம் தணிக என்றாய்; தணிகை மலையாயினேன்; சீற்றம் கொள்ளாதே என்றாய்? அதற்கு மறுப்பு நான் கூறவில்லை; நீ எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவன் நான்; ஆனால் ‘இரு’ என்ற கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது; இது கொடுமை மிக்கது; அரச செல்வத்தை விட்டுச் செல்லும் நீ, நானும் உன் உடைமை என்பதால் என் உறவை உடைத்து எறிகிறாயா?” என்று கேட்டான் அதற்குமேல் இராமன் பேசுவதைத் தவிர்த்தான்; அவனைத் தடுக்கவில்லை.
சீதை செய்கை
சித்திரப் பாவைபோல எந்தச் சலனமும் இல்லாமல் வாழ்ந்து வந்த சீதைக்கு இந்தப் புதிய மாற்றங்கள் வசித்திரமாய்ப் பட்டன; “என்ன நடக் கிறது?” என்று எடுத்துக் கூற யாரும் முன்வரவில்லை; அவளும் தன் நாயகன் நா, உரையாததால் நலிந்து காத்திருந்தாள்.
“எதிர்பாராதது நடக்கலாம்; ஆனால், எதிர்த்துப் பேசும் உரிமையை நீ எடுத்துக் கொள்ளாதே; எல்லாம் மிகச் சிறிய செய்திகள்தான்,” என்றான்.
“பரதன் பட்டத்துக்கு வருகிறான்; மகிழ்ச்சிமிக்க செய்தி.”
யான் காட்டுக்குப் போகவேண்டும் என்பது மன்னன் கட்டளை”
“மாமியார் மெச்சும் மருமகளாய் நீ அவர்களுக்குத் துணையாய் இங்கே இருப்பாய்” என்று அறிவித்தான்.
“நான் காட்டுக்குச் செல்லும் தவசி; நீ வீட்டு ஆட்சிக்கு அமையும் அரசி; இவற்றை நீ தெரிந்து கொள் அலசி” என்று விளக்கம் கூறினான்.
“பரிவு நீங்கிய மனத்தோடு பிரிவை எனக்குத் தருகிறாய்; ஏன் என்னை விட்டு நீ நீங்க வேண்டும்?”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - நான், உனக்கு, என்னை, யார், என்றான், வாழும், செல்லும், இலக்குவன், அவனைத்