திருவாரூர் - தமிழக மாவட்டங்கள்
நீடாமங்கலம்:
மாவட்டத்தில் அதிக நெல்விளைச்சல் உள்ள பகுதிகளில் இவ்வூர் முக்கியமானது. இங்கிருந்து நெல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1761இல் கட்டிய 'யமுனா பாய் சத்திரம்' இவ்வூரில் இருக்கிறது. புகழ்பெற்ற தவில் வித்வான், கலியுக நந்தி மீனாட்சிசுந்தரம் இவ்வூர்காரரே ஆவார்.
திருநாட்டியத்தான் குடி:
இவ்வூர்க் கோயில் கந்தரரால் பாடல் பெற்றது. இவ்வூர் இறைவர் பெயர்: மாணிக்கவண்ணர்; இறைவி மலைமங்கையம்மை.இவ்வூரிலிருந்த கோட்புலி நாயனார் சோழர்களின் சேனைத்தலைவராக இருந்ததாக பெரியபுராணம் தெரிவிக்கிறது. பெளத்த, சமண ஆலயங்கள் இருந்ததாக சுந்தரர் தேவாரம் கூறுகிறது.
மகாதேவபட்டினம்:
இவ்வூர் மன்னார் குடியிலிருந்து 10கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு ஐதருக்கும் பிரிட்டீஷ் தளபதி பிரெய்த்வெயிட்டுக்கும் 1781இல் போர் நடைபெற்றது. கோட்டையில் சிதைந்த பகுதிகள் காணப்படுகிறது. மா, பலாவுக்கு இவ்வூர் புகழ்பெற்றது.
மன்னைவட்டத்தில் திருக்களர், பெருகவாழ்ந்தான், லெட்சுமாங்குடி, களப்பால், திருமாக்கோட்டை, திருவராமேசுவரம் முதலிய தொன்மையான ஊர்களும் இருக்கின்றன.
திருத்தருப்பூண்டி:
இவ்வூர் இவ்வட்டத்தில் தலைநகருமாகும். இன்று திருத்துறைப்பூண்டி என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் இங்கு துறைமுகம் இருந்ததாகக் கருதப்படுகிறது. 1952லும், 1955லும் உருவான புயல்களால் கடல் நீர் இவ்வட்டத்துக்குள் புகுந்து பெருஞ்சேதத்தை உண்டாக்கியது. திருத்துறைப்பூண்டி என்பது வில்வவனத்தை குறிக்கும் என்பர். இவ்வூர் கோயிலில் "பஞ்சமுக வாத்யம்" இருக்கிறது. திருவாரூருக்குப் பிறகு இங்கு மட்டுமே இந்த இசைக் கருவியைக் காணலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரான 'மணலி'தான் புகழ்பெற்ற வள்ளலான மணலி ராமகிருஷ்ண முதலியாரின் பரம்பரை ஊராகும். புகழ்பெற்ற பொதுவுடைமைமிக்க தலைவரான மணலி கந்தசாமி இவ்வூரைச் சார்ந்தவரே ஆவார். இவ்வூர் இப்பகுதியில் முக்கியமான வணிகத்தலமாகும்.
முத்துப்பேட்டை:
இது ஒரு சிறு துறைமுகம்; படகுகள் கட்டும் தொழில் இங்கு வளர்ந்துள்ளது. கடல் வாணிபத்தில் சிறந்த பாட்டை முஸ்லீம் வணிகர் பலர் இவ்வூரினர். சேதுரஸ்தாவில், இராமேஸ்வரம் சாலை இவ்வூர்வழியே செல்கிறது. இவ்வூர் அருகேயுள்ள சம்புவானோடையில் புகழ்பெற்ற இரண்டு தர்க்காக்கள் உள்ளன. இங்கு நிகழும் சந்தனக்கூடு விழாவுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து முஸ்லீம்கள் வருவார்கள்.
மூன்றாம் இராஜராஜச் சோழன் காலத்தில் புகழ்பெற்ற கோயிலூர் சிவன்கோயில் முத்துப்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 1 1/2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
திருக்கோளிலி:
திருவாரூர் அருகில் உள்ள இவ்வூர் ஒரு சப்த விடங்கத் தலம். தேவாரம் பாடல்பெற்ற தலமுமாகும். இங்கு நவக்கிரகங்கள் ஒரு தீங்கும் செய்ய இயலாதவாறு கோணமின்றி ஒரே திசையில் நேரே வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேதான் இவ்வூர் 'திருக்கோளிலி' என அழைக்கப்படுகிறது. திருக்கோளிலி என்ற பெயர் திருக்குவளை என மருவி இன்று 'திருக்குவளை' என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் ராஜராஜச் சோழன், மூன்றாம் இராஜராஜச் சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் இவ்வூர்க் கோயிலில் உள்ளன. இங்குள்ள கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இவ்வூர்தான் தமிழக முதல்வர் கருணாநிதி சொந்த ஊர்.
மாவூர்:
திருநாட்டியத்தான்கூடிக்கு அருகில் உள்ளது. கல்கத்தாவிலுள்ள காளி கோயிலைப் போன்ற ஒரு கோயில் இங்கு இவ்வூரினரான சர்.ஆர்.எஸ்.சர்மாவால் கட்டப்பெற்றிருக்கிறது. சர்மா கல்கத்தாவில் பத்திரிகை நடத்தியவர். பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் ஆதரவு பெற்றவர். இந்தியாவிலிருந்து இலண்டனுக்கு ஆகாய விமானத்தில் சென்ற முதல் இந்தியர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - Thiruvarur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், இங்கு, திருவாரூர், புகழ்பெற்ற, தமிழக, tamilnadu, மாவட்டங்கள், இருக்கிறது, தமிழ்நாட்டுத், கோயில், அருகில், மணலி, திருக்கோளிலி, சோழன், தகவல்கள், அழைக்கப்படுகிறது, உள்ள, கடல், கோயிலில், | , இராஜராஜச், திருக்குவளை, துறைமுகம், மூன்றாம், முத்துப்பேட்டை, தேவாரம், ஆவார், information, districts, thiruvarur, இவ்வூர்க், பெயர், திருத்துறைப்பூண்டி, இன்று, தொலைவில், இருந்ததாக, காலத்தில்