சோழர் வரலாறு - மூன்றாம் இராசேந்திரன்
8. மூன்றாம் இராசேந்திரன்
(கி.பி. 1245-1279)
முன்னுரை : மூன்றாம் இராசேந்திரன் கி.பி.1216-இல் சோழப் பேரரசன் ஆனான். ஆனால், இராசராசற்கு இவன் இன்ன முறையில் உறவினன் என்பது புலப்படவில்லை. இராசராசன் உயிருடன் இருந்த பொழுதே இவனது ஆட்சி தொடக்கம் ஆகிவிட்டது. இவன் இராசராசனுடன் அவனது இறுதிக் காலத்தில் சேர்ந்திருந்தே நாட்டை ஆண்டு வந்தான் என்றும் கூறலாம். இராசராசன் இறுதிக் காலத்தில் அவனுடைய கல்வெட்டுகள் வடஆர்க்காடு, நெல்லூர்க் கோட்டங்களில் காணப்படுகின்றன. ஆயின், அதே காலத்தில் இராசேந்திரன் கல்வெட்டுகள் சோழப் பெருநாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன. இதனால் இராசேந்திரன் பொது மக்களால் நன்கு வரவேற்கப்பட்டமையும் சிற்றரசரிடம் இவனுக்கு இருந்த செல்வாக்கும் நன்கறியலாம். இவன் கல்வெட்டுகள் முன்னோர் கல்வெட்டுகளில் உள்ள பலவகைத் தொடக்கங்களையே உடையன. நிகழ்ச்சி முறைகொண்டு வேறு பிரித்தல் வேண்டும்.
ஹொய்சளர் பகைமை : ஹொய்சள நரசிம்ம தேவன் மகனான வீர சோமேசுவரன் இக்காலத்தில் ஹொய்சள நாட்டை ஆண்டு வந்தான். இவனது தந்தை இராசராசனை இரண்டு முறை காத்து அரசனாக்கியவன். ஆயின், இவன் எக்காரணம் பற்றியோ இராசேந்திரனிடம் பகைமை பாராட்டியதோடு பாண்டியனை நட்புக் கொண்டிருந்தான். தன்னைப் ‘பாண்டிய குலக் காப்பாளன்’ என்று கூறிக் கொண்டான். ஆனால் இச்சோமேசுவரனை இராசேந்திரனும் சுந்தர பாண்டியற்குப் பின் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1238-1253) என்பவனும் ‘தம் மாமன்’ என்றே கல்வெட்டு களிற் கூறியுள்ளனர். எந்த வகையில் இவன் இருவர்க்கும் ‘மாமன்’ ஆனான் என்பது விளங்கவில்லை. இவ்வுறவு எங்ஙனமாயினும், இவன் பாண்டியனை ஆதரித்து, இராசேந்திரனை வெறுத்து வந்தான் என்பது திண்ணம்.
சோமேசுவரன் தன் தண்ட நாயகரை ஏவிர் சோணாட்டைப் பிடிக்க முயன்றான் என்பது சில கல்வெட்டுகளால் தெரிகிறது. கி.பி.1241-இல் சிங்கண தண்ட நாயகன் என்பவன் சோணாட்டிற்குள் படையெடுத்து வந்தான். அப்பொழுது மூடப்பட்ட ஒரு கோவில் 50 ஆயிரம் காசுகள் செலவில் கும்பாபிடேகம் செய்யப்பட்டது என்று திருமறைக்காட்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.[1] சோமேசுவரனது மற்றொரு தண்ட நாயகனான இரவிதேவன் என்பவன் கான நாட்டைக் கைப்பற்றினான் என்று புதுக்கோட்டைக் கல்வெட்டுக் குறிக்கிறது.[2]
பாண்டியர் - ஹொய்சளர் உறவு : கி.பி. 1238 - இல் பட்டம் பெற்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் வலியற்ற அரசன். இவன் கி.பி.149-இல் திருநெல்வேலிக் கோட்டத்தில் தன் மாமனான வீரசோமேசுவரன் பெயரை அவன் விருப்பப்படி ஒரு சிற்றூர்க்கு இட்டு வழங்கினான்; அதே ஆண்டில், வரக்கண்ண தண்டநாயகன் என்ற சேனைத் தலைவன் திருநெல்வேலியில் இருந்து வந்தான்.அக்காலத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த திருமய்யத்தைச் சுற்றியுள்ள நாடு ‘கான நாடு எனப்பெயர் பெற்றிருந்தது.அது பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது. அங்குச் சைவ வைணவச் சண்டை உண்டாகி நாடு குழப்பப்பட்டதால், சோமேசுவரனது தண்ட நாயகனான அப்பண்ணன் என்பவனால் அமைதி உண்டாக்கப்பட்டது, பாண்டிய அரசன் மைத்துனன் ஹொய்சள இளவரசன். அவன் பெயர் விக்கிரம சோழதேவன் என்பது. அவன் பாண்டிய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றவனாக இருந்தான்.[3]
சோழர் - தெலுங்கர் உறவு: வீரசோமேசுவரன் பாண்டியனை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதால், இராசேந்திரன் ஹொய்சளர்க்குப் பகைவரான தெலுங்குச் சோடரை நட்புக் கொண்டான். அக்காலத்தில் நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோடர் வன்மை மிக்கிருந்தனர். அவரது ஆட்சி நெல்லூர் முதல் செங்கற்பட்டு வரை பரவி இருந்தது. அவர்கள் நீண்டகாலமாகச் சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசராக இருந்தவர்கள். திக்கன் என்ற கண்டகோபாலன் என்பவன் அப்பொழுது இருந்த சோழ அரசன் ஆவன். இவன் சாம்புவராயர், சேதியராயர், காடவராயர்களை வென்று தன் பேரரசை ஒப்புக்கொள்ளச் செய்தவன்; இவ்வெற்றியால் கோப்பெருஞ் சிங்கன் சூழ்ச்சிகளை ஒடுக்கினவன். இவன் தொண்டை மண்டலத்தில் பெரும் பகுதியைச் சோழப் பேரரசிற்கு அடங்கியே ஆண்டு வந்தான்.[4] இங்ஙனம் பாண்டியற்கு ஹொய்சளன் உதவியாக இருந்தாற்போலச் சோழற்குத் தெலுங்குச் சோடன் உதவியாக இருந்தான்.
- ↑ 1. 501 of 1904.
- ↑ 2. 387 of 1906.
- ↑ 3. K.A.N. Sastry’s ‘Pandyan Kingdom’, Page 158.
- ↑ 4. Tikkana’s Int to his Ramayanam.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் இராசேந்திரன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், வந்தான், இராசேந்திரன், என்பது, சோழப், பாண்டிய, தண்ட, என்பவன், நாடு, தெலுங்குச், அவன், அரசன், கல்வெட்டுகள், காலத்தில், இருந்த, நாட்டை, ஆண்டு, ஹொய்சள, பாண்டியனை