சோழர் வரலாறு - சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்
சங்க காலம்
இப்பொழுது ‘சங்க நூல்கள்’ என்று கூறப் பெறும் எட்டுத் தொகை , பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்பனவும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களும் சங்ககாலச் சோழர் வரலாறுகளை அறியப் பெருந்துணை புரிவன ஆகும். ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், களவழி போன்ற சிலவே சங்க காலத்தைச் சேர்ந்தவை, ஏனையவை பிற்பட்ட காலத்தவை - சமணர் சங்கத்தில் ‘இயற்றப் பட்டவை’ என்று ஆராய்ச்சி அறிஞர் தெளிவுறக் கூறலாம். பதினெண் கீழ்க்கணக்கில் ‘இனியவை நாற்பது’ போன்றவை பிற்கால நூல்கள் என்று கோடலில் தவறில்லை. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பனவே சங்காலச் சோழர் வரலாற்றுக்குப் பேருதவி புரிவன எனலாம். இவ்வுண்மையை அடுத்த பிரிவிற் காணலாம். இவற்றுடன் பிளைநி, தாலமி, பெரிப்ளுஸ் ஆசிரியர் முதலியோர் எழுதியுள்ள ‘செலவு நூல்கள்’ பயன்படுவன ஆகும்.
இடைப்பட்ட காலம்
சங்கத்து இறுதியாகிய (சுமார்) கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆதித்த சோழன் பல்லவரை வென்ற சோழப் பேரரசு ஏற்படுத்திய 9-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதிவரை ஏறத்தாழ 500 ஆண்டுகள் சோழரைப் பற்றியும் சோழ நாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளப் பேருதவி செய்வன சிலவே ஆகும். அவை (1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப் பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர் பட்டயங்கள், (4) சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள் முதலியன ஆகும். இவற்றுடன் தலைசிறந்தன தேவாரத் திருமுறைகள் ஆகும். இவற்றை உள்ளடக்கிப் பல கல்வெட்டுகளையும் (இக்காலத்தில் நமக்குக் கிட்டாத) பிற சான்றுகளையும் கொண்டு எழுதப் பெற்ற சேக்கிழார் - பெரிய புராணம் என்னும் ஒப்புயர்வற்ற நூலும் சிறந்ததாகும். ஆழ்வார்கள் பாடியருளிய நாலாயிரப் பிரபந்தமும் திவ்யசூரி சரிதம் முதலியனவும் ஒரளவு உறுதுணை புரியும்.
பிற்பட்ட சோழ – கல்வெட்டுகள்
விஜயாலய சோழன் முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல் தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும். இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும் முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக் கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன. இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச் செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள், அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல் அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள். பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர் தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத் தோன்றியவை ஆகும். கோவில்களைப் புதியனவாகக் கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவில் திருப்பணிகள் செய்தல் முதலிய நற்பணிகளைக் குறிக்க வந்த அவற்றில், “இன்னின்ன இடங்களில் இன்னவரை வென்ற இன்ன அரசன் பட்டம் பெற்ற இன்ன ஆண்டில்”. என்று விளக்கமாக வரும் முதற் பகுதியே வரலாற்றுக்குப் பெருந்துணை செய்வதாகும். சில கல்வெட்டுகள் அரசியல் தொடர்பாக எழுந்துள்ளன. அவை என்றுமே நிலைத்திருக்கத் தக்கவை. அவை வரிவிதித்தல், நிலவரி, தொழில்வரி, ஊரவைகளின் முடிவுகள், தொழில் முறைகள், அரசியல் முறைகள் இன்ன பிறவும் விளக்குவனவாகும்.பல கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் ஊர் மக்களுடைய நிலம் விற்றல், வீடு விற்றல், மனை விற்றல், வாங்கல் முதலிய செய்திகளையும் குறிக்கின்றன. சில கோவில் சுவர்களில் தேவார நூல்களில் காணப்பெறாத சம்பந்தர் முதலியோர் பாக்கள் வெட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் இக்கல் வெட்டுகள் வரலாற்றுக்குப் பல துறைகளிலும் பேருதவி புரிதல் காணலாம்.இவையே அன்றி, இக்கல்வெட்டுகளால் அக்கால வடமொழி-தமிழ் இவற்றின் வளர்ச்சி-நடை மாறுபாடு முதலியவற்றையும் அறியலாம். வட்டெழுத்து, பல்லவ-கிரந்த எழுத்து, சோழர் காலத் தமிழ் எழுத்து ஆகிய இம்மூன்று தமிழ் எழுத்துகளையும் இக் கல்வெட்டுகளால் நன்குணர்தல் கூடும்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள் - History of Chola - சோழர் வரலாறு - ஆகும், இன்ன, கல்வெட்டுகள், சோழர், தமிழ், கோவில், விற்றல், அரசியல், பட்டயங்கள், பெருந்துணை, வரலாற்றுக்குப், பேருதவி, முதலியோர்