பத்ம புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
பிருகு முனிவரின் வழியில் 'சயவனன் என்ற முனிவன் தோன்றினார். நிறைந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்று நினைத்தார். அதைப் பெறுவதற்குரிய சிறந்த வழி தீர்த்த யாத்திரை செல்வதுதான் என்ற முடிவுக்கு வந்தார். பல ஊர்கட்குச் சென்று பல தீர்த்தங்களில் நீராடி விட்டு நர்மதை ஆற்றின் தென்கரையில் உள்ள அமரகந்தகா என்ற ஊரின் எல்லையில் உள்ள ஒர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்பொழுது அம்மரத்தின் கிளைகளில் ஒரு கிளிக் குடும்பம் வசித்து வந்தது. ஆண் கிளியின் பெயர் குஞ்சலா. இக்கிளி தன் மனைவி, நான்கு மகன் கிளிகளுடன் வசித்து வந்தது. பிள்ளைகளுள் மூத்த கிளியாகிய "உஞ்வலா காலை இரை தேடச் சென்று தாய் தந்தையருக்கு வேண்டுமான இரையைத் தேடிக் கொண்டு மாலை வரும். அந்த உணவை மற்ற கிளிகள் பகிர்ந்து சாப்பிடும். சயவன முனிவர் அங்கு தங்கியிருந்த நேரத்தில் மேலே உள்ள கிளிக் குடும்பத்தில் நடந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது.
குஞ்சலா கிளி (தந்தை): மகனே உஞ்வலா! இன்று எங்கு இரை தேடப் போயிருந்தாய்?
உஞ்வலா: தந்தையே! பிளக்ஷத்தீவு என்ற பகுதிக்குத் தான் நான் இரைதேடச் செல்வது வழக்கம். அதை ஆள்கின்ற மன்னன் திவோதசா என்பவன் ஆவான். அவனுக்கு திவ்ய தேவி என்ற ஒரு அழகான பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்ய ரூபா நாட்டின் அரசன் சித்ரசேனனைத் தேர்ந்தெடுத்தார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்குரிய சடங்கும் நடந்தது. இது நடந்த சில நாட்களில் சித்ரசேனன் இறந்து விட்டான். அடுத்து ரூபசேனன் என்ற மன்னனை நிச்சயித்துச் சடங்குகள் நடைபெற்றன. திருமணத் தேதிக்குள் அவனும் இறந்து விட்டான். இப்படியே 21 அரசர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக நிச்சயம் செய்யப்பட அத்தனை பேரும் மடிந்து விட்டனர். அச்சமடைந்த திவ்யதேவியின் தந்தை தனித்தனியாக நிச்சயம் செய்யப்பட்டால் ஏற்படும் ஆபத்தை மனத்தில் கருதி, பெண்ணுக்கு சுயம்வரம் என்று ஒரு நாளைக் குறிப்பிட்டான். பல அரசர்களும், அரசகுமாரர் களும் வந்து கூடினர். என்ன காரணத்தாலோ சுயம்வரம் தொடங்கு முன்னரே கூடியிருந்தவர்களுள் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கொன்று கொண்டனர். அப்பா, ஏன் அந்தப் பெண்ணுக்கு இப்படி நடந்தது என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
குஞ்சலா: மகனே! அந்த ரகசியம் எனக்கு நன்றாகத் தெரியும். வாரணாசியில் சுதிரா என்றொரு வைசியன் இருந்தான். மிகவும் நல்லவனும், நல்வழி நடப்பவனுமாகிய அவனுக்கு சித்ரா என்றொரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் தீயவள். யாருடனாவது தீய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருப்பதும், சமயம் நேரும்போதெல்லாம் தன் கணவனை அவமானப்படுத்துவதும் அவள் பொழுது போக்காக இருந்தது. அவள் கொடுமை தாங்காது சுதிரா மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான். இது பொறுக்க மாட்டாமல் சித்ரா வீட்டை விட்டு ஒடிக் கொலை, கொள்ளை, களவு முதலியவற்றைச் செய்கின்ற கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டாள். தானே தலைமை வகித்துப் பலரையும் கொன்று தீர்த்தாள். காலம் வந்த பொழுது அவள் இறந்துவிட அவள் ஆன்மா எமலோகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பல தண்டனைகளை அனுபவித்த பிறகு பிளக்ஷத்தீவு மன்னனுடைய மகளாகப் பிறந்தாள். அவள் செய்த கொலைகள் காரணமாக இப்போது அவள் வாழ்க்கையை நாசப்படுத்த அவளுக்கு மணம் பேசப்பட்ட அத்தனை ராஜாக்களும் இறந்தார்கள்.
உஞ்வலா: தந்தையே! எனக்கு ஒரு சந்தேகம். இத்துணை கொலைகள் செய்து நரகவேதனை அனுபவித்த இவள் ஒரு சாதாரணப் பிறப்பு எடுக்காமல் எப்படி பிளக்ஷத்தீவு மன்னனுக்கு மகளாகப் பிறக்க முடிந்தது?
குஞ்சலா: மகனே! மிக அருமையான கேள்வியைக் கேட்டாய். இந்தக் கேள்வியை நான் உன்னிடம் எதிர் பார்த்தேன். அதற்கான காரணம் உனக்குச் சொல்வேன். இத்துணை கொலைகள் செய்து வாழ்க்கை நடத்தி யிருந்தாலும், ஒரு நாள் இவள் வீடு தேடி, உணவு கேட்டு ஒரு முனிவர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 7 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவள், உஞ்வலா, குஞ்சலா, கொலைகள், மகனே, உள்ள, பிளக்ஷத்தீவு