நாரத புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
விஷ்ணுவின் அருளால் மிருகண்டு முனிவரின் புத்திரனாகப் பிறந்தார். மிகவும் இளம் வயதிலேயே வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் பயின்று விற்பன்னராகிவிட்டார். மார்க்கண்டேயர் பிரளய காலத்தில் நீரின் மேல் படுத்துக் கிடக்கும் வாய்ப்பைப் பெற்றார். பல்லாயிரக்கணக்கான வருடங்கள் இப்படியே நீரில் மிதந்தமையால், நீரைக் கண்டு ஒருவித அச்சமடைந்தார். அந்நிலையில் விஷ்ணு அவர் முன் தோன்றி, "நீ என்னுடைய சிறந்த பக்தன், உன்னைக் கைவிட மாட்டேன்” என்று கூறிவிட்டு, விஷ்ணு பக்தர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று சில அடையாளங்களைக் கூறினார். விஷ்ணு பக்தர்கள் பொறாமை, காழ்ப்புணர்ச்சி என்ற இரண்டும் அற்றவர்கள். எல்லா உயிர்களையும் போற்றி அன்பு செய்பவர்கள். அவர்கள் மனம், வாக்கு, காயங்களால் மறந்தும் பிறர்க்குத் தீமையை நினைக்க மாட்டார்கள்; சொல்ல மாட்டார்கள் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சமாதான விரும்பிகள். ரிஷிகள், முனிவர்கள், பெரியோர்கள் ஆகியோரிடம் அன்பு பூண்டு பணி செய்வார்கள். அவர்கள் கோயில் கட்டுதல் என்ற நற்பணியுடன் மக்களுக்குத் தேவையான குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலைகள் அமைத்தல் ஆகிய தொண்டுகளையும் செய்வார்கள். அவர்கள் புராணங்களைப் படிப்பதுடன், அவற்றை விளக்கமாகப் பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள். உண்மையைச் சொன்னால், உண்மையான விஷ்ணு பக்தனுடைய எல்லாப் பண்புகளும் உன்னிடம் நிறைந்துள்ளன.
விஷ்ணுவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயர் சலகிரமா என்ற தீர்த்தக்கரையில் பெருந்தவம் இயற்றினார். மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்துவத்தை விஷ்ணுவிடம் பெற்றார் என்று சில புராணங்களும், பிரம்மாவிடம் பெற்றார் என்று சில புராணங்களும் கூறுகின்றன.
கங்கை - யமுனை சங்கமம்
தீர்த்தங்களுள் சிறந்தது கங்கை. அடுத்த நிலையில் இருப்பது யமுனை. இவை இரண்டும் சங்கமிக்கின்ற இடம் மிக மிகப் புண்ணியமானது என்பார்கள். இந்தச் சங்கமத்தில் குளிப்பவர்கள் நோயற்ற உடம்பையும், மிக நீண்ட ஆயுளையும் பெறுவர். தேவர்கள்கூட இந்தச் சங்கமத்தில் வந்து குளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கங்கை, விஷ்ணுவின் பாதத்தில் இருந்து புறப்படுகிறது. யமுனை, சூரியனின் புத்ரி ஆகும். எனவே இவை இரண்டும் மிகப் புண்ணியமான தீர்த்தம் என்பதை அறிந்து கொள்ளலாம். கங்கையில் சென்று நீராட முடியாதவர்கள் கூட கங்கா தேவியை மனத்தினால் நினைத்தாலே அவர்கள் பாவம் போய்விடும்.
பிரயாகை என்ற இடம் கங்கைக் கரையில் உள்ளது. இந்த இடத்தில் பிரம்மரே தவம் செய்தார் என்றால், இதன் பெருமையை அறிந்து கொள்ளலாம். பல தீர்த்தங்களில் சென்று நீராடியதன் பயனைப் பிரயாகையில் உள்ள கங்கைத் தண்ணீரின் சில சொட்டுகளே தரமுடியும். இந்தச் சில சொட்டுத் தண்ணிர் ஏனைய தீர்த்தங்களில் கிடைக்கும் புண்ணியத்தைவிடப் பதினாறு பங்கு அதிகமாகும். கங்கைக் கரையில் உள்ள களிமண்ணை எடுத்துத் தலையில் பூசிக் கொள்பவர்கள் சிவனே ஆகிறார்கள். திருமாலுக்கு மூன்று பொருள்கள் மிக முக்கியம். 1. கங்கை, 2. துளசி, 3. திருமால் அடியார்களின் பாதத் துளி.
கோதாவரி, சரஸ்வதி, காளிந்தி, காவேரி, கிருஷ்ணா, ரேவா, வகுதா, துங்கபத்திரை, பீமரதி, வேத்ரவதி, தாமிரபரணி, விடத்ரு ஆகிய நதிகளிலும் கங்கை கலந்திருக்கிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 5 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கங்கை, மார்க்கண்டேயர், விஷ்ணு, யமுனை, இந்தச், இரண்டும், பெற்றார், மாட்டார்கள்