நாரத புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
நம்பிக்கையும், முழு ஈடுபாடும் கொண்டு செய்யப்படும் வழிபாட்டையே விஷ்ணு ஏற்றுக் கொள்கிறார். இவை இரண்டும் இல்லாதவர்கள் எவ்வளவு நைவேத்தியம் செய்து வழிபட்டாலும் விஷ்ணு அவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. நம்பிக்கையும் ஈடுபாடும் தாய் போன்றது. குழந்தைகள் தாயிடம் சென்று அடைக்கலம் புகுவது போல, விஷ்ணு பக்தி உடையவர்கள் அடைக்கலம் புகுவது பக்தி, ஈடுபாடு என்ற இவற்றிடையேயாகும். இதைத்தான் மார்க்கண்டேயரிடம் விஷ்ணு கூறினார்.
கதை செல்லிக் கொண்டு வரும் நாரதரை இடைமறித்து, "மார்க்கண்டேயர் என்பவர் யார்? விஷ்ணு அவரிடம் என்ன சொன்னார்?' என்று சனத்குமாரர் கேட்டார். மிருகண்டு, மார்க்கண்டேயர் என்பவர்களின் கதையை நாரதர் சொல்ல ஆரம்பித்தார்.
சலகிரமா தீர்த்தக்கரையில், மிருகண்டு முனிவர் விஷ்ணுவைக் குறித்து நீண்டகாலம் தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் ஆற்றல் பெருகப் பெருக இந்திரனும் தேவர்களும் பயந்தனர். மிருகண்டு தவத்தின் முடிவில் விஷ்ணு தோன்றினால், இந்திரப் பதவி வேண்டும் என்று கேட்டு, ஆட்சியிலிருந்து தன்னைத் தள்ளிவிடுவாரோ என்று இந்திரன் பயந்தான். தேவலோகத்திலிருந்து தங்களை எல்லாம் மிருகண்டு விரட்டி விடுவாரோ என்று தேவர்கள் பயந்தனர். ஆகவே இந்திரனும் தேவர்களும், விஷ்ணுவிடம் சென்று தங்கள் பயத்தை வெளிப்படுத்தி, ஒரு வழி சொல்லுமாறு வேண்டினர். அவ்வாறு சென்று பார்க்கும்போது விஷ்ணு பஞ்ச ஆயுதங் களுடன், கோடி சூரியப் பிரகாசமுடைய உடம்புடன் தாமரை போன்ற கண்களுடன் மஞ்சள் பீதாம்பரத்துடன் காட்சி தந்தார்.
தேவர்களின் வேண்டுதலைக் கேட்டு விஷ்ணு, “உங்களுக்குக் கவலை வேண்டாம். மிருகண்டுவை நான் அறிவேன். அவர் இவற்றிற்கெல்லாம் ஆசைப்படுபவர் அல்லர். நீங்கள் கவலை இல்லாமல் போங்கள். தீயவர்கள் கடுந்தவம் இயற்றினால் நீங்கள் பயப்படுவது நியாயம். அந்தத் தவத்தின் பயனாகப் பதவி பிடிக்கும் வேட்டையில் அவர்கள் இறங்கி விடுவார்கள். ஆனால் மிருகண்டு அத்தகையவர் அல்லர்” என்று சொல்லி அனுப்பினார்.
இதன் பிறகு இதே கோலத்துடன் மிருகண்டு முனிவர் முன் விஷ்ணு தோன்றினார். இந்தக் கோலத்தை தரிசித்த மிருகண்டு முனிவர் விஷ்ணுவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். "ஐயனே! தேவர்கள் முதலானவர்கள் உன்னைத் தரிசிப்பதற்குத் தவம் கிடக்கிறார்கள். அவர்களால் காண்பதற்கரிய நீ என்னை நாடி வந்தது. என் முன்னே நிற்பது என் மிகப் பெரிய பேறாகும்” என்றார். விஷ்ணு, “முனிவரே! உன் தவத்தை மெச்சினோம். வேண்டிய வரத்தைக் கேட்பாயாக!” என்றார். முனிவர் ‘ஐயனே! தங்களை நேரே தரிசனம் செய்யும் பேறு கிடைத்த பிறகு இதைவிட மேலான ஒன்று எதுவும் இல்லை. ஆதலால் எனக்கு எந்த வரங்களும் தேவை இல்லை. தங்கள் தரிசனம் ஒன்றே போதுமானது" என்றார். விஷ்ணு, “முனிவரே! ஒரு பக்தனிடம் விஷ்ணு சென்றார், ஆனால் வரம் ஒன்றும் தரவில்லை என்ற பெயர் எனக்கு உண்டாக வேண்டாம் நீயே கேட்காவிட்டாலும், நானே ஒரு வரத்தைத் தரப்போகிறேன். உம்முடைய வம்சத்தில் நான் வந்து தோன்றப் போகிறேன். அது உம்முடைய வம்சம் செய்த பெரும் புண்ணியமாகும்” என்று கூறிவிட்டு மறைந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 4 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, மிருகண்டு, முனிவர், என்றார், தவத்தின், சென்று, இல்லை