மச்ச புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் புரூரவன் என்ற மன்னன் உலகை ஆண்டு வந்தான். மாபெரும் சக்தி உடையவனாகிய அவன் நேர்மையிலிருந்து சிறிதும் பிசகாதவனாய் உலகை ஆட்சி செய்து வந்தான். மனிதர்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களாக உள்ள தர்ம, அர்த்த, காமம் என்ற மூன்றின் அளவறிந்து வாழ்ந்து வந்தான். அவன் நேர்மையை, குறிக்கோள் வாழ்வைக் கண்ட தர்ம, அர்த்த, காம தேவதைகள் இந்த மூன்றில் எதனிடம் அதிக பக்தி கொண்டிருக்கிறான் என்பதை அறிய மானிட வடிவம் கொண்டு வந்தன. இவர்கள் யாரென்று அறியாத அரசன் அவர்களைப் பொன் ஆசனத்தில் இருத்தி முறைப்படி உபசாரம் செய்தான். அப்படிச் செய்யும் பொழுது கூட அவனையும் அறியாமல் தருமத்திற்குக் கொஞ்சம் அதிகமான உபசாரம் செய்து விட்டான். இதைக் கண்டு பொறாத அர்த்த, காம தேவதைகள் அவனைச் சபித்தன. அர்த்த தேவதை 'உன் செல்வத்தையெல்லாம் இழந்து நீ தவிப்பாய்’ என்று சாபமிட்டது. காமதேவதை ஊர்வசியிடம் மயங்கி பைத்தியம் பிடித்து அலைவாய் என்று சாபமிட்டது. ஆனால் தர்மதேவதை நீ அறவழியில் இருந்து நீங்காமையால் இந்தச் சாபங்களில் இருந்து விடுதலை அடையலாம் என்று கூறிப் போய்விட்டது.
சில நாட்கள் கழித்து, மன்னன் ஒரு தேரில் ஏறி காட்டுவழி சென்றான். அவன் எதிரே கேசி என்ற அசுரன், ஊர்வசியை பலவந்தமாக இழுத்துச் செல்வதைக் கண்டான். கேசியிடம் போரிட்டு அவனைத் தோல்வியுறச் செய்து, ஊர்வசியை இந்திரனிடம் சேர்ப்பித்தான். இந்த அரிய காரியத்தைச் செய்த புரூரவனிடம் இந்திரன் மிகுந்த நட்புப் பாராட்டி வாழநதான்.
ஒருமுறை இந்திர சபையில் ஒரு நாட்டியத்திற்கு ஏற்பாடாயிற்று. நாட்டிய சாத்திரத்தின் தந்தையாகிய பரத முனிவரே முன்னின்று நடததினார். மேனகை ரம்பை, ஊர்வசி ஆகிய மூவரும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். தன்னைக் காப்பாற்றியவனும், அழகில் மிகுந்தவனுமாகிய புரூரவன் எதிரிலே அமர்ந்திருந்தான். ஊர்வசி அவனையே அதிகம் கவனித்துத் தன் வசம் இழந்தாள். அதனால் ஜதிவிட்டுப் போய்விட்டது. கோபம் கொண்ட பரத முனிவர் பூமியில் ஐம்பத்தைந்து ஆண்டு வாழ்வாயாக என்று சாபமிட்டார். பூமிக்கு வந்த ஊர்வசி புரூரவனை மணந்து அயு, திரிதயு, முதலான எட்டுப் பிள்ளைகளைப் பெற்றாள்.
கச்சன் - தேவயானி
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் போர் நடந்தது. இந்தச் சண்டையில் ஒரு வேறுபாடு இருந்து வந்தது. தேவர்களின் குருவாக பிரஹஸ்பதியும், அசுரர்களின் குருவாக சுக்கிராச்சாரியும் இருந்தனர். தேவகுருவான பிரகஸ்பதிக்குத் தெரியாத ஒரு மந்திரம் சுக்கிராச்சாரியாரிடம் இருந்தது. மிருத்யுசஞ்சீவினி என்ற மந்திரத்தால் இறந்தவர்களை எழுப்ப முடியும். பிருஹஸ்பதிக்கு இந்த மந்திரம் தெரியாது. தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் இறந்தால் இறந்தவர்கள் தாம். ஆனால் அசுரர்கள் பக்கத்தில் எத்தனைபேர் இறந்தாலும், அத்துணைப் பேரையும் மிருத்யுசஞ்சீவினி மந்திரத்தால் சுக்கிராச்சாரியார் மீட்டு வருவார். இதனால் ஒவ்வொரு போரிலும் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, அசுரர்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்தது. தேவர்கள் கூடி யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். பிரஹஸ்பதியின் மகனாகிய கச்சன் சுக்கிராச்சாரியாரிடம் சென்று எப்படியாவது அந்த மந்திரத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த யோசனையின் முடிவு.
இந்த முடிவின்படி கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். குருவே! நான் பிரஹஸ்பதியின் மகன் என்றாலும் தங்களுக்குச் சீடனாக இருந்து ஆயிரம் வருடங்கள் பணி புரிய விரும்புகிறேன்' என்று கேட்டுக் கொண்டான். மிருத்யு சஞ்சீவினி பற்றி அவன் ஒன்றும் அறியான். அவன் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத சுக்கிராச்சாரியார் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். சுக்கிராச்சாரியாருக்குப் பணி புரிந்து வந்த கச்சன் மீது காதல் கொண்டாள் தேவயானி. ஐந்நூறு ஆண்டுகள் கழிந்தன. பிருஹஸ்பதியின் மகனே கச்சன் என்பதை அசுரர்கள் அறிந்து கொண்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 8 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், கச்சன், இருந்து, அர்த்த, செய்து, ஊர்வசி, சுக்கிராச்சாரியாரிடம், வந்தான்