மச்ச புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
இது இப்படி இருக்க, பிரம்மதத்தன் முற்பிறப்பில் நான்கு சகோதரர்கள் உலக வாழ்க்கை வெறுத்து தவம் செய்தனர் அல்லவா? அவர்கள் மறுபிறப்பில் சுதரித்ரா என்ற பிராமணனுக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்தனர். பறவையாக இருக்கும் பொழுதே உலக வாழ்வில் ஈடுபட மனம் இல்லாமல் இருந்தமையின் அந்த நால்வரும் காட்டிற்குச் சென்று தவம் செய்ய வேண்டுமென்று விரும்பிப் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் தந்தை அவர்களை விடுவதாக இல்லை. அவன் அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே! நீங்கள் தவம் செய்யப் போவது என்பது சரியான காரியம் அன்று. நீங்கள் நால்வரும் இவ்வாறு போய்விட்டால் என் முதுமைக் காலத்தில் என்னை யார் கவனித்துக் கொள்வார்கள்?’ என்றான். அது கேட்ட மைந்தர்கள், "தந்தையே! கவலை வேண்டாம் பக்கத்து நாட்டில் பிரம்மதத்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். அவனிடம் சென்று நாங்கள் சொல்லும் நாலு வார்த்தைகளை மட்டும் சொல்லுங்கள். பசுமாடு, வேடர்கள், மான்கள், பறவைகள் என்ற இந்த வார்த்தைகளை மன்னனிடம் சொன்னால் உங்கள் தேவைக்கு அதிகமாகவே பொன்னும் பொருளும் தருவான். பெற்றுக் கொண்டு செளகரியமாக இருங்கள்” என்று கூறிவிட்டுக் காட்டிற்குப் போய்விட்டனர்.
விஷ்ணு கனவில் சொன்னதில் இருந்து எப்பொழுது பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருந்த மன்னன் பிரம்மதத்தனிடம், காலையில் ஒரு பிராமணன் வந்து நின்றான். அந்த பிராமணன், “அரசே! எனக்கு முதுமைக் காலத்தில் எவ்விதக் குறையும் இன்றி வாழ நிலங்கள், மாடுகள், பொன் ஆகியவை வேண்டும். தருவீர்களா” என்று கூறிவிட்டு, வியப்போடு தன்னைப் பார்க்கும் பிரம்மதத்தனைப் பார்த்து மெதுவாக, “அரசே! பசுமாடு, வேடர்கள், மான், பறவைகள்” என்று மந்திரம் சொல்வது போல் சொல்லி முடித்தான். அரச வாழ்க்கையில், சுகபோகத்தில் மூழ்கி இருந்த மன்னன் பிரம்மதத்தன் மனத்திரையில் பழைய பிறப்புக்களும், அதன் காரணமும் வரிசையாக வந்தன. தன்னுடைய சகோதரர்கள் ஆன்மிக வளர்ச்சி அடைந்து காட்டிற்குச் சென்று விட்டதை அறிந்த மன்னன் எதிரே இருந்த அந்தணனுக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்து அனுப்பி விட்டான்.
தன் மகனை அழைத்து அவனுக்கு அரசைத் தந்தான். மந்திரி குமாரர்களை அழைத்து நடந்ததைக் கூறியவுடன் இவர்கள் மூவரும் பறவைகளாக இருந்தவர்கள் ஆதலால் பழம்பிறப்பு நினைவுக்கு வர உடனே இந்தச் சுகபோகங்களைத் துச்சமாகக் கருதி உதறிவிட்டு மூவருமாகக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்று விட்டனர்.
முனிவர்கள், 'லோமஹர்ஷனரே! கதையை நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம். ஆனால் ஒரு சந்தேகம். எறும்புகள் பாஷையை எப்படி பிரம்மதத்தன் அறிந்து கொண்டான்?” என்று கேட்க, லோமஹர்ஷனர் "அது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியமில்லை. பிரம்மதத்தன் தந்தை, தனக்கு மகன் வேண்டும் என்று வேண்டும் பொழுதே ஜீவராசிகளின் பாஷையை அறியும் சக்தியுடையவனாக அவன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதனால்தான் பிரம்மதத்தனால் எறும்புகளின் பாஷையை அறிந்து கொள்ள முடிந்தது” என்று கூறினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 7 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், பிரம்மதத்தன், வேண்டும், மன்னன், சென்று, தவம், ", பாஷையை, கொண்டான்