மச்ச புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில், கெளசிக முனிவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். கெளசிகன் இறந்த பிறகு இவர்கள் கார்க முனிவனின் சீடர்களாக வாழ்ந்தனர். அப்போது திடீரென்று பஞ்சம் வந்து உயிர்கள் செத்து மடிந்தன. கார்க முனிவர் தமது பசுக்களை எல்லாம் காட்டிற்கு ஒட்டிச் சென்று வளர்க்குமாறு ஏழு சீடர்களையும் ஏவினார். அந்த எழுவரும் காட்டில் வாழும் பொழுது, பசுக்களுக்குப் புல் கிடைத்தாலும், இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எழுவரும் ஒரு யோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தனர். பசுவில் ஒன்றினைக் கொன்று சாப்பிட முடிவு செய்தனர். எழுவரில் இளையவன் “பசு வதை மிகவும் கொடிய பாவம். ஆனாலும் இது தவிர வேறு வழியும் தெரியவில்லை. எனவே இறக்கின்ற மனிதர்களுக்குச் செய்யும் இறுதிக் கடன்களை இப் பசுவிற்கும் செய்துவிட்டுப் பிறகு கொன்று தின்னலாம்" என்றான். இவ்வாறு செய்வதால் தாங்கள் செய்யும் பாவத்தின் கொடுமை கொஞ்சம் குறையும் என்று நம்பினான். அவ்வாறே செய்து முடித்தனர். பஞ்சம் தீர்ந்தவுடன் எஞ்சிய மாடுகளை குருவிடம் கொண்டுவந்து சேர்ப்பித்து விட்டு, ஒரு மாட்டைப் புலி அடித்துக் கொன்றுவிட்டது என்று பொய் கூறினார்கள். கார்க முனிவரைப் பொறுத்த மட்டில் இவர்கள் கூற்றில் நம்பிக்கை வைத்திருந்தார். இந்தப் பசுவதை செய்த பாவத்தால் ரிஷிகுமாரர்கள் எழுவரும் வேட்டைக்காரர்களாகப் பிறந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஜதீஸ்மரா இருந்ததால், முற் பிறவியை நினைவில் கொண்டுவர முடிந்தது. அந்த வேட்டைக் காரப் பிறவியைப் போக்கிக்கொள்ள முடிவு செய்து, உண்ணா நோன்பிருந்து எழுவரும் உயிரை விட்டனர். அடுத்த பிறப்பில் எழுவரும் பறவைகளாகப் பிறந்தனர். கடைசி மூவர் தவிர மூத்த நால்வரும் இந்த உலக வாழ்க்கை பிடிக்காமல் நாட்டத்தை வேறு பக்கம் செலுத்தினர். மூன்று பறவைகளும் மரத்தின் மேல் தங்கி இருக்கும் பொழுது பாஞ்சால மன்னன் விப்ரஜா அங்கு வநதான். அவன் தோற்றப்பொலிவைக் கண்ட ஒரு பறவை, இவனைப்போல் அழகான மன்னனாகப் பிறக்க வேண்டும் என்று நினைத்தது. அரசனின் மந்திரிகள் எல்லோரையும் அதிகாரம் செய்வதைப் பார்த்து மற்ற இரு பறவைகளும் மந்திரிகளாகப் பிறக்க விரும்பின.
இப்பறவைகள் இறந்த பிறகு முதல் பறவை விப்ரஜ மன்னன் மகனான பிரம்மதத்தனாகப் பிறந்தது. மற்ற இரு பறவைகள் மந்திரி மகன்களாகப் பிறந்தன. அரசன் மகனாகிய பிரம்மதத்தன் கல்யாணி என்ற பெண்ணை மணந்து கொண்டான். அந்தக் கல்யாணி முற்பிறப்பில் அவனால் கொல்லப்பட்ட பசுவே ஆகும். ஒருநாள் மாலைப் பொழுதில் அரச குமாரனும், கல்யாணியும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அரசகுமாரனைப் பொறுத்த மட்டில் அவனுக்கு உலகத்தில் உள்ள உயிர்கள் பேசிக் கொள்ளும் பாஷைகள் அனைத்தும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் இருந்தது. அதனால் தோட்டத்தில் நடந்து கொண்டு இருந்த பிரம்மதத்தன் திடீரென்று சிரித்தான். அவன் அவ்வாறு சிரிப்பதற்குரிய நிகழ்ச்சி அங்கே நடந்தது.
இரண்டு எறும்புகள் தமக்குள் பேசிக் கொண்டிருந்ததை அரசகுமாரன் கவனித்தான். ஆண் எறும்பு பெண் எறும்பி னிடம் நெருங்கிச் சென்ற பொழுது, பெண் எறும்பு முறைத்துக் கொண்டு, ‘என் பக்கத்தில் வராதே. இனி என்னோடு பேச வேண்டாம் என்று கூறிற்று. ஒன்றும் புரியாத ஆண் எறும்பு, நான் ஒரு தவறும் செய்யவில்லையே. எதற்காக என்னைக் கோபிக்கின்றாய் என்று கேட்டது. அதற்கு அந்தப் பெண் எறும்பு, "அதற்குள் நீ செய்த காரியத்தை மறந்துவிட்டாயா? நேற்று உனக்குக் கிடைத்த சர்க்கரைத் துண்டத்தை வேறொரு பெண்ணுக்கு நீ தந்ததை மறந்து விட்டாயா? என்று கோபத்துடன் கேட்டது. ஆண் எறும்பு, நான் ஒரு பாவமும் அறியேன். பக்கத்தில் நீதான் இருக்கிறாய் என்று நினைத்து சர்க்கரைத் துண்டத்தைக் கொடுத்து விட்டேன். இனி அப்படி நடக்காது. என்னை மன்னித்துவிடு' என்று கூறியவுடன் பெண் எறும்பு தன் கோபத்தை மறந்துவிட இரண்டும் கூடிக் குலாவின. எறும்புகளின் இந்த உரையாடலும் பிறகு அவை கூடிக் குலாவியதும் பிரம்மதத்தனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 6 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, எறும்பு, எழுவரும், பிறகு, பெண், பொழுது, கார்க, செய்து