இலிங்க புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
நாளாவட்டத்தில் வளர்ந்து இளைஞனான பராசரன், தன் தாயைப் பார்த்து, எல்லோருக்கும் தந்தை இருக்கிறார்கள். எனக்கு மட்டும் இல்லையே ஏன் என்று கேட்டபொழுது, தாய் அத்ரிஷ்யந்தி நடந்தவற்றைக் கூறினாள். உடனே அந்த சிறிய குழந்தையாகிய பராசரன், நான் சிவனைக் குறித்துத் தவம் செய்யப் போகிறேன். சிவனிடம் வரங்கள் பெற்று, ராட்சசர்கள் வாழும் மூன்று உலகங்களையும் அழித்து விடுவேன் என்று கூறினான்.
இதை அறிந்த வசிட்டர் அவனை அழைத்து, "பராசரா! இத்தகைய கொடுமைகள் உலகத்தில் எப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாரோ ஒருவன் தவறிழைக்க, அதனால் யாதொரு குற்றமும் செய்யாத அனைவரையும் அழிப்பேன் என்று கூறுவது தவறாகும். சிவனை நினைத்துத் தவம் செய்து ஆற்றலைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஆற்றலைத் தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட பராசரன் சிவனை நினைத்துத் தவம் செய்தான்.
இவன் தவத்தில் மகிழ்ந்த சிவன், மிக அற்புதமான பல வரங்களைத் தந்தார். தவத்திலிருந்து மீண்ட பராசரன் தன் தந்தையைக் கொன்ற ருத்ரன் என்ற அரக்கனைத் தேடி அலைந்தான். அவன் கிடைக்காததால் கண்ணில்பட்ட அரக்கர்கள் அனைவரையும் எரித்துக் கொன்றான். இதை அறிந்த வசிட்டர், பராசரனை அழைத்து, உன் அழிவு வேலையை இத்துடன் நிறுத்து. உன் தந்தை ஒர் அரக்கனால் கொல்லப்பட்டான் என்றால் அது உன் தந்தையின் தலை யெழுத்து. அதற்காகக் கண்ணில்பட்ட அரக்கர்களை எல்லாம் அழிப்பது நியாயமில்லை. அரக்கர்களும் கடவுளால் படைக்கப் பட்டவர்களே. அரக்கர்கள், மனிதர்கள் ஆகிய இருவரும் இப் பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். இவ்விருவரிடையேயும் ஒரு வகையான சமநிலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஒன்று அதிகமாகும் போது, யாரோ ஒருவர் மூலமாக அது அழிக்கப்படும். இப்பொழுது நீ இந்தச் சமநிலையைக் குலைக்கும் முறையில் அதிகமான அரக்கர்களைக் கொன்று விட்டாய். ஆகவே இத்துடன் அழிவு வேலையை நிறுத்திக் கொள் என்றார்.
இந்த அறிவுரையைக் கேட்ட பராசரன் வேதசாஸ்திரங்கள் பயின்று மிகப் பெரிய அறிஞனாக மாறினான். புராண சம்ஹிதை விஷ்ணுபுராணம் இரண்டையும் இயற்றிய பெருமை பராசரனைச் சேரும். இந்தப் பராசர முனிவனின் மகனே கிருஷ்ண துவைபாயரான வேதவியாசன் ஆவான்.
அந்தகன்: ஹிரண்யக்ஷா என்ற அரக்கனின் மகன் அந்தகன். அந்தகன் கடுமையான தவம் இயற்றி, தன்னை யாரும் கொல்ல முடியாது என்ற வரத்தினை பிரம்மனிடம் பெற்றான். இவ்வரத்தினைப் பெற்றதனால், மூன்று உலகங்களையும் வென்று, தேவர்களை அவ்வுலகத்தினின்று விரட்டினான். இந்திரனும் மற்ற தேவர்களும், விஷ்ணுவுடன் சேர்ந்து மந்தார மலைக்குச் சென்றனர். அந்தகன் தேவர்களைத் துரத்திக் கொண்டு மந்தாரமலைக்குச் சென்றான்.
சிவபிரானைப் பார்த்த தேவர்கள், அந்தகன் செய்யும் கொடுமைகளைக் கூறி, தாங்கள் எங்கு சென்றாலும் அந்தகன் அங்கு வந்து தங்களைத் துரத்துவதாகவும், சிவபெருமான் மட்டுமே தங்களை அவனிடமிருந்து காப்பாற்ற முடியும் என்றும் கூறினர். சிவபெருமானும் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி, அந்தகனைக் கொல்லச் சென்றார். அந்தகன் தனியாக இல்லாமல்,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலிங்க புராணம் - பகுதி 7 - Linga Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அந்தகன், பராசரன், தவம், கொண்டுதான்