தாமரையினின்று இறங்கி வந்து விஷ்ணுவைப் பார்த்து ஆச்சரியத்தோடு நின்றார். விஷ்ணு அவரைப் பார்த்து, நீ யார் என்று எனக்கு தெரியவில்லை, தெரிவி என்றார். அப்பொழுது பிரம்மன் நான்தான் சர்வ வல்லமை உள்ள பிரம்மன். இவ்வுலகம் முழுவதையும் படைக்கிறவன் என்று சொல்லிவிட்டு நீங்கள் யார் என்று கேட்டான். உடனே விஷ்ணு என் பெயர் விஷ்ணு. உன்னை உட்பட அனைத்தையும் படைப்பவன் நான்தான். நீ எனக்கு மகன் முறை ஆவாய் என்றார். அதைக் கேட்ட பிரம்மன், கோபம் கொண்டு நானே அனைத்துமாய் இருக்கும் பொழுது நீ எப்படி எனக்குத் தந்தையாக முடியும். வேண்டுமானால் என்னுள் புகுந்து பாருங்கள் என்றார். உடனே விஷ்ணு, பிரம்மன் வாய் வழியாகப் புகுந்து உள்ளே சென்றபொழுது, பல்வேறு உலகங்கள், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிரம்மன் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டான். அதைச் சுற்றிப் பார்க்க விஷ்ணுவுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒருவாறு யாவற்றையும் பார்த்து முடித்து, மறுபடியும் வாய்வழியே விஷ்ணு வெளியே வந்துவிட்டார். பிரம்மனைப் பார்த்து, நீ என் வயிற்றுக்குள் சென்று பார்த்து வா என்றான். அப்படியே பிரம்மன் விஷ்ணுவின் வாய்வழியே புகுந்து உள்ளே சென்றான். அங்கே தான் படைத்ததைப் போன்று பல உலகங்கள் இருந்ததைக் கண்டார். முழுவதும் சுற்றிப் பார்க்க பிரம்மனுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. முடிவில் அவர் வெளியே வர நினைத்தபொழுது, வெளியே வரக்கூடிய வாயில்கள் அனைத்தையும் விஷ்ணு மூடி விட்டான். அந்நிலையில் வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் கொப்பூழ் வழியாக வெளியே வந்த பிரம்மனுக்கும், விஷ்ணு வுக்கும் பெரும் சண்டை மூண்டது. இவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இருவரும் அதிர்ச்சியுறும்படியாக அதிர்வுகள் தோன்ற இருவரும் நின்ற நிலையில் ஆட்டம் கண்டனர். பிரம்மனுக்கு இது புதிய அனுபவம் ஆதலால், ஏன் இப்படிக் கொப்பூழை ஆட்டி எனக்குத் துன்பம் தருகிறாய் என்று விஷ்ணுவிடம் கேட்டார். உடனே விஷ்ணு ஆட்ட வில்லை. சிவபெருமான் வருகிறார் என்று தெரிகிறது. அவர் வருவதால் ஏற்படுகின்ற அலைஅலையான அதிர்வுகள் நம் இருவரையும் நிலைகொள்ளாமல் ஆட்டி வந்தது என்றார். இந்த அதிர்ச்சி தாங்காத பிரம்மா, சிவன் யார் எனக் கேட்க விஷ்ணு, நாம் இருவரும் சிவனைத் தியானம் செய்வோம் என்று கூறி தியானத்தில் ஈடுபட்டபோது, சிவன் அவர்கள் எதிரே தோன்றினார். உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று சிவன் கேட்க, விஷ்ணு தங்களிடத்தில் நீங்காத பக்தி வேண்டும் என்று விடை கூறினார். தந்தேன் என்று கூறிய சிவன், பிரம்மனைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பிரம்மன் "தாங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். இவ்வரத்தைக் கேட்டுக் கொண்ட சிவனும், அவ்வாறே ஆகுக' என ஒப்புக்கொண்டார்.
பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கியவுடன், அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் அவன் விரும்பியபடி இல்லை. படைப்பு தன் விருப்பப்படி இல்லை என்பதை அறிந்தவுடன் பிரம்மனுக்கு எல்லையில்லாத துயரம் உண்டாயிற்று. அத்துயரத்தின் வெளிப்பாடே ருத்திரன் ஆவான்.
தேவதாரு: தேவதாரு மரம் என்பது மரங்களில் சிறப்பான ஒன்று. முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் தேவதாரு மரங்கள் நிறைய வளர்ந்திருந்தன. அக்காட்டில் முனிவர்கள் பலர் தத்தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து வந்தனர். இவர்களின் தியானத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அம்முனிவர்களைப் பரீட்சை செய்ய விரும்பினார். அதனால் அழகற்ற உருவம் ஒன்றினைப் பெற்று, கரிய நிறத்துடனும் கொடிய கண்களுடனும் அவர்கள் முன் தோன்றினார். முனிவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சிவ பெருமானைத் தொடர்ந்து செல்லலாயினர். ஆனால் முனிவர்களோ அவ்வுருவத்தை ஏளனமாகவும், கடுமையான சொற்கள் கூறியும் விரட்ட, சிவபெருமானும் அவ்விடத்தி னின்று மறைந்தார். முனிவர்கள் உடனே பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூற, பிரம்மா வெகுண்டு “முட்டாள்களே! நீங்கள் என்ன தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை