கூர்ம புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
சுவேதாஸ்வதா முனிவரும் சம்மதித்து, சாத்திரங்கள் பற்றிய ஞானத்தை போதிக்க ஆரம்பித்தார். சுசிலாவின் தந்தையான சிகண்டிக்கு ஹவித்தன் என்று ஒரு சகோதரன் இருந்தான். அவனுடைய மகனே பிரசினவர்ஹி என்பவன். இவன் கடலரசன் மகள் சவர்ணாவை மணந்து, பத்துப் புதல்வர்களைப் பெற்றான். இந்தப் புதல்வர்களே பிரசேதாஸ் என்று பெயர் பெற்றனர். இவர்கள் விஷ்ணுவிடம் அன்பு கொண்டு, அவரையே வணங்கி வந்தனர். பத்து பிரசேதர்களும் மணம் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு மாரீசன், தட்சன் என்ற புதல்வர்கள் பிறந்தனர். இந்த தட்சனே, முன்பு பிரம்மனின் மகனாகத் தோன்றியவன். தட்சன் சிவனுடன் சண்டையிட்டதால், அவன் பிரசேதர்களின் மகனாகப் பிறப்பான் என்று சிவன் சாபமிட்டார்.
இதனைக் கேட்ட முனிவர்கள், “தட்சனுடைய கதையினை எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று லோமஹர்ஷனரைக் கேட்க, அவரும் கூற ஆரம்பித்தார்.
தட்சன் கதை
தட்சன், சிவன் தனக்கு மருமகனாக இருந்தும் தனக்குரிய மரியாதையைக் காட்டவில்லை என்று கோபித்து, தான் செய்யும் யாகத்திற்கு அழையா விருந்தாக வந்த சதியைப் பலவாறு ஏசியும், சிவனைத் தரக்குறைவாகப் பழித்தும் இகழ்ந்தார். நொடிந்து போன சதி அங்கேயே தன் உயிரை நீத்தார். சதி இறந்ததை அறிந்த சிவன், தட்சனிடம் வந்து பூமியில் ஒரு சத்திரியன் மகனாகப் பிறப்பான் என்று சாபமிட்டார். இந்தச் சாபத்தின் பயனாகவே, பிரசேதனை மகனாகத் தட்சன் பிறந்தான்.
கூர்ம புராணத்தில் உள்ள தட்சயக்ஞக் கதை, வேறு புராணங்களில் உள்ள தட்சயக்ஞக் கதையினின்று ஒரு சிறிது மாறுபடுகிறது. பிற கதைகளில் தட்சயக்ஞத்திற்கு வந்து உயிரை நீத்தவர் சதி என்றும், அவரே மறுபடியும் பார்வதியாகப் பிறந்தார் என்றும் கூறுகின்றன. கூர்ம புராணக் கதைப்படி, தட்சயக்ஞம் பார்வதியின் காலத்தில்தான் நடந்தது. யக்ஞத்தை அழிக்குமாறு பரிந்துரை செய்தவர் பார்வதியே ஆவார். இந்த வேறுபாடு நீங்கலாக மற்ற அனைத்தும் எல்லாப் புராணங்களிலும் ஒன்றாகவே உள்ளன. பிரகலாதன் கதை பிரகலாதன் தந்தையாகிய ஹிரண்யகசிபுவை, விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்ற கதை முன்னரே கூறப்பட்டுள்ளது. அவனுக்குப் பின்பு அவன் சகோதரனாகிய ஹிரண்யாக்ஷன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். விஷ்ணு வராக அவதாரம் எடுத்துப் பாதாள உலகில் சென்று, பூமியை மறைத்து வைத்திருந்த ஹிரண்யாrனைக் கொன்று. பூமியை மீட்டார். அவனுக்குப் பிறகு பிரகலாதன் ஆட்சிப் பொறுப்பேற்றான். சிறந்த விஷ்ணு பக்தனாகிய அவன் சிறந்த முறையில் ஆட்சி செய்தான். வேறு பணியில் பிரகலாதன் ஈடுபட்டிருந்த பொழுது, வந்திருந்த பெரியவரை கவனக் குறைவாய் சரியாக உபசரிக்காமல் இருந்து விட்டான். அந்தப் பெரியவர் மிகவும் கோபம் கொண்டு, "விஷ்ணுவைப் பற்றி நீ மறந்து விடுவாய். அதனால் நீ விஷ்ணுவுடன் போரிட்டுத் தோல்வி அடைவாய்” என்று கூறினார். அப்பெரியவரின் சாபப்படி பிரகலாதன் நேர்மையான வழியை மறந்து, பெரியோர்களை மதிக்க மறந்தான். ஆகையால் வேதம், சாத்திரங்கள் ஆகியவற்றை மறந்து, விஷ்ணு தன் தந்தையைக் கொன்றதால் பழிவாங்க நினைத்தான். நீண்ட காலம் விஷ்ணுவுடன் போர் புரிந்து முடிவில் தோல்வியுற்றான். தன் தவற்றினை உணர்ந்து விஷ்ணுவிடம் மன்னிப்புக் கேட்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 7 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரகலாதன், தட்சன், விஷ்ணு, மறந்து, சிவன், அவன், கொண்டு