பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
இனி, பிரம்ம வைவர்த்த புராணம் உறவு முறைகள் பற்றிப் பேசுகிறது. பிரம்மன் மக்களிடையே சில உறவு முறைகளை வரையறுத்தார். அவை பின்வருமாறு குறிப்பிடப் படுகின்றன.
தந்தை, பிதா, ததா, ஜனகா என்றும், தாய், மாதா, அம்பா, ஜனனி என்றும், தந்தையின் தந்தை பிதா மகன் என்றும், தாயின் தந்தை மாதா மகன் என்றும் அழைக்கப்படுவர்.
தந்தையின் சகோதரி பித்ரிஷ்வசா என்றும், தாயின் சகோதரி மாசுரி என்றும் அழைக்கப்படுவர். புத்ரா, தயதா, தனபகா, வீர்யஜா என்பவை மகனைக் குறிக்கும் சொற்கள். துஹிதா, கன்யா என்பவை மகளைக் குறிக்கும். வது என்பது மகனின் மனைவியையும், ஜமத்ரி என்பது, மகளின் கணவனையும் குறிக்கும். பதி, பர்த்தா என்பவை கணவனை யும், பத்ணி, பார்யா என்பவை மனைவியையும் குறிக்கும். மகனின் மகன் பெளத்ரன் என்றும், மகளின் மகன் தெளஹித்ரா என்றும் கூறப் பெறுவர்.
ஒரு மனிதனுக்கு ஐவகை தந்தையர் பொறுப்பு வகுக்கப் பட்டுள்ளது. அவை 1. ஜன்ம தாதா 2 அன்ன தாதா 3. பயத் ரதா 4 வித்யா தாதா 5. பத்னிபிதா ஆகியவை ஆகும். பதினான்கு வகையான பெண்கள், தாய் எனக் கருதப்படுவர். தாய், தந்தையின் தாய், தாயின் தாய், தந்தையின் சகோதரி, தாயின் சகோதரி எனப் பதினான்கு உறவு முறையினர் குறிக்கப்படுகின்றனர்.
ஒருவன் தன் ஆசிரியனுடைய மகன் அல்லது மகளைத் தன் உடன்பிறந்தவராகக் கருத வேண்டும். பெண்ணின் தந்தையும், மணமகனின் தந்தையும் சகோதரர்கள் போல் நடந்து கொள்ள வேண்டும். இம்முறைக்கு வைவஹிகா என்று பெயர். இவ்வுறவு முறைகள் அன்றி, வேறு உறவு முறைகளும் உண்டு. ஒரு நண்பரிடத்தில் உறவினன் போல் பழகுவது பிரிதிஜா எனப்படும். இப்படிப்பட்ட உறவுகள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.
உபவர்ஹன
முன்னொரு காலத்தில் கந்தமாதனம் என்ற மலையில், வயது முதிர்ந்த கந்தர்வ தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். செல்வம் நிறையப் பெற்றிருப்பினும், குழந்தைச் செல்வம் வேண்டிச் சிவபெருமானை தியானித்தனர். சிவபெருமான் கொடுத்த வரத்தின்படி நாரதர் இவர்கட்கு மகனாகப் பிறந்தார். வசிட்டர் இக்குழந்தைக்கு உபவர்ஹனா என்று பெயரிட்டார். பெரும் மரியாதைக்குட்பட்டவன் என்ற பொருளில் இப்பெயர் இடப்பட்டது. இக்குழந்தை சிறுவனாக வளர்ந்தபின் தியானம் செய்யத் துவங்கினான். கந்தர்வர்களின் மன்னனாகிய சித்ரசேனாவின் பெண்கள் ஐம்பது பேரும், உபவர்ஹனாவை மணக்க விரும்பினர். வேறு வழியின்றி அவர்களை மணந்து கொண்ட உபவர்ஹனா ஒருநாள் பிரம்மனை தரிசிக்கச் சென்றான். அங்கு ரம்பா என்ற அப்சரஸைக் கண்டு மணம் புரிய விரும்பினான். இதனால் கோபம் கொண்ட பிரம்மன் அவன் இறந்து போகும்படி சபித்தார்.
உபவர்ஹனாவின் முதல் மனைவியாகிய மாலவதி கோபம் கொண்டு, தன் கணவனின் இறப்பிற்குக் காரணமாகிய பிரம்மன், சிவன், யமன் ஆகியோரை சாபமிடப் போவதாகக் கூறினாள். இதைக் கேட்ட தேவர்கள் விஷ்ணுவிடம் அடைக்கலம் தேடி ஓடினர். விஷ்ணுவும் ஒர் அழகிய பிராமண இளைஞன் உருவமெடுத்து, மாலவதியின் முன் தோன்றினார். தேவர்களைச் சமாதானப்படுத்தி உபவர்ஹனாவிற்கு உயிர் கொடுக்கும்படிக் கூறினார். பிரம்மன் புனித நீரைத் தெளிக்க சூரியதேவன் கண்பார்வை வழங்க, வாயுதேவன் மூச்சுக் காற்றை வழங்கினான். கிருஷ்ணன் உபவர்ஹனாவின் உடலின் உள்ளே புகுந்து உயிர் கொடுத்தார். பிராமண வடிவத்தில் இருந்த விஷ்ணு, மாலவதிக்கு இறப்பு பற்றியும், அதற்கான காரணங்களையும் எடுத்துக் கூறினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 5 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றும், தாய், மகன், உறவு, சகோதரி, குறிக்கும், என்பவை, தாயின், தந்தையின், பிரம்மன், தாதா, முறைகள், தந்தை