பாகவத புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
பத்தாவது, மச்ச அவதாரம் ஆகும். சாக்கூச மன்வந்திரத்தில், வைவஸ்வத மனுவின் காலத்தில் ஜலப் பிரளயத்தால் பூமி முழுவதும் நீரில் மூழ்கி இருந்த பொழுது தோன்றியது மச்ச அவதாரம். இந்த மீன், வைவஸ்வத மனுவிடம், ஒரு பெரிய படகைக் கட்டி அதில் அவனும், ஏனைய மக்களும் ஏறிக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறி உலகைக் காத்தது. பதினொன்றாவது கூர்ம அவதாரம். தேவர்களும், ராட்சசர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுப்பதற் காக வாசுகியை நாணாகவும், மந்திரமலையை மத்தாகவும் பயன்படுத்த முயன்ற பொழுது, மத்தைத் தூக்கிப் பிடிக்க கூர்ம வடிவம் எடுத்துத் தன் முதுகின் மேல் அந்த மத்தைத் தாங்கினார். பன்னிரண்டாவது தன்வந்திரி அவதாரம். பாற் கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருள்களும் போகக் கடைசியாக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்திக் கொண்டு வெளிப்பட்டவர் தன்வந்திரி.
பதின்மூன்றாவது அழகிய பெண்ணாக (மோகினி) எடுத்த அவதாரம். பாற்கடலைக் கடையத் தாங்களும் உதவியதால் தங்களுக்கும் அமிர்தத்தில் பங்கு வேண்டும் என்று ராட்சசர்கள் முரண்டு செய்தனர். அவர்கள் எண்ணத்தைத் திசை திருப்ப விஷ்ணு அழகிய பெண் வடிவுடன் ராட்சசர்கள் பக்கம் செல்ல, அமிர்தத்தை மறந்துவிட்டு அவளைப் பார்ப்ப திலேயே அவர்கள் காலம் சென்று விட்டது. பதினான்காவது நரசிம்ம அவதாரம். இரண்யகசிபு என்பவனைக் கொல்ல சிங்கத்தின் தலையுடன், மனிதனின் உடம்புடன் தோன்றிய இந்த அவதாரம் இரண்யகசிபு மார்பைத் தன் நகத்தாலேயே பிளந்து விட்டது.
பதினைந்தாவது வாமன அவதாரம். தைத்திய மன்னனாகிய மகாபலியிடம் குள்ளனாகச் சென்று மூன்றடி மண் தானம் கேட்டு, அவன் தந்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து மூன்று உலகங்களையும் மூவடியால் அளந்த அவதாரம் ஆகும். பதினாறாவது பரசுராமர் அவதாரம், பரம்பரையாக அரசர் பணியை மேற்கொண்ட சத்திரியர்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றால் மதிமயங்கி மக்களுக்குத் தீமை செய்யத் துவங்கிய போது 21தலைமுறை வரை சத்திரிய மன்னர்களே இல்லாமல் செய்த அவதாரம் ஆகும் இது.
பதினேழாவது அவதாரம், வேதவியாசர் என்று காரணப் பெயர் கொண்ட அவதாரம் ஆகும். பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் கிருஷ்ண துவையம்பாயனர் என்ற இயற் பெயருடன் பிறந்த இவர், மிக விரிந்தும் பரந்தும் யாரும் கற்க முடியாத நிலையிலும் இருந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி நான்கு வேதங்களாக வகுத்தமையால் வேதவியாசர் என்ற பெயர் பெற்றார். பதினெட்டாவது இராம அவதாரம். பத்தொன்பதாவது பலராம அவதாரம். இருபதாவது கிருஷ்ண அவதாரம். பதினெட்டாவது இராம அவதாரத்தை இராமாயணத்திலும், பத்தொன்பது, இருபது அவதாரங்கள் பற்றி மகாபாரதத்திலும் விரிவாக அறியலாம்.
இருபத்திஒன்றாவது புத்தரது அவதாரம் ஆகும். இவர் புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர். இருபத்திரண்டாவது, இனி வரப்போகின்ற கல்கி அவதாரம். விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகக் கலியுகத்தின் முடிவில் தோன்றப் போகின்றவர் கல்கி ஆவார். இருபத்திமூன்று, இருபத்தி நான்கு அவதாரங்களின் பெயர்களை பாகவத புராணம் குறிப்பிடவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 3 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவதாரம், ஆகும், வேண்டும், பெயர், இருந்த