அக்னி புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
வர்ணங்களில் இரண்டாவது இடத்தைப் பெறும் சத்ரியர்கள் ஆயுதம் ஏந்தி உலகைக் காக்க வேண்டியவர்கள். பிராமணர்கள் வேத, சாஸ்திரங்களைப் படிப்பது, யக்ஞம் முதலியவற்றைச் செய்வது போன்ற கடமைகளை ஆற்ற வேண்டும். ஒரு சமயம் சத்ரியர்கள் மிகவும் ஆணவமுற்று, பல கொடுமைகளைச் செய்தனர். அச்சமயத்தில் விஷ்ணு, ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவிற்கும் மகனாக அவதரித்தார். பிருகு முனிவரின் பரம்பரையில் வந்ததால், பரசுராமனுக்கு பார்கவா என்ற பெயரும் வழங்கப்பட்டது. பிராமணர்களைக் காப்பாற்றுவதும், சத்ரியர்களின் ஆணவத்தை அடக்குவதும் பரசுராமனின் வேலையாக இருந்தது.
தத்தாத்ரேய முனிவரிடம் எல்லா வரங்களும் பெற்ற கார்த்தவீரியன், ஆயிரம் கைகளை உடையவனாகவும், மூவுலகை ஆள்பவனாகவும் இருந்தான். ஒரு நாள் கார்த்த வீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் களைப்பின் காரணமாக ஜமதக்கினி முன்ரிவரின் ஆசிரமத்தில் அழைக்கப் பட்டான். ஜமதக்கினி முனிவரிடம் காமதேனு என்ற பசு இருந்தது. முனிவர் கேட்ட அனைத்தையும் அப்பசு வழங்கியது. ஆதலால் களைப்பாக இருந்த கார்த்த வீரியனுக்கும், அவனுடைய சேனைகளுக்கும் அறுசுவை விருந்து படைத்தார் முனிவர். காமதேனுவைக் கண்டு மிகவும் விருப்பம் கொண்ட கார்த்தவீரியன், அதனைக் கொடுக்குமாறு முனிவரிடம் கேட்க, அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்ட கார்த்தவீரியன் அப்பசுவைத் திருடிச் சென்றான். இதனால் கார்த்தவீரியனுக்கும் பரசுராமனுக்கும் போர் நடந்தது. கார்த்தவீரியன் தலையினை வெட்டி, காமதேனுப் பசுவை மீட்டான் பரசுராமன்.
சில காலத்திற்குப் பின்பு, கார்த்தவீரியனின் புதல்வர்கள், பரசுராமன் இல்லாத பொழுது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரைக் கொன்றனர். இதனால் கடுங் கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை சத்ரியர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். இறுதியில் காசிப முனிவரிடம் உலகை ஒப்படைத்து விட்டு, மகேந்திர மலைக்குச் சென்று வாழ்ந்தான்.
7. இராமாவதாரம்
விஷ்ணுவின் கொப்பூழில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவருடைய புதல்வன் மாரீச்சி. இவரது பரம்பரையில் தோன்றிய அஜா என்பவனின் மகனே தசரதன் ஆவான். தசரதனுக்கு இராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். இஷ்வாகுவின் மகனாகிய ககுத்தன் பரம்பரையில் தோன்றியதாலும், ரகுவின் பரம்பரையில் தோன்றியதாலும் இராமனுக்குக் காகுத்தன் என்றும், ராகவன் என்றும் பெயர்கள் இருந்தன.
விஷ்ணு, இராவணன் என்னும் அரக்கனையும், மற் எல்லா அரக்கர்களையும் அழிக்க நினைத்தார். ஆகையால் தன்னை நான்கு பாகங்களாகப் பிரித்து, ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனனாகப் பிறந்தார். ஒரு சமயம், விசுவாமித்திரர் தசரதனிடம் இருந்து ராட்சசர்களைக் கொல்ல இராமனுடைய உதவி வேண்டும் என்று கேட்டார். இராமன் ராட்சசர்களைப் போரில் வென்றதால், தெய்வீக அஸ்திரங்களை உபயோகிப்பது பற்றிச் சொல்லிக் கொடுத்தார். மிதிலை மன்னனாகிய ஜனகரிடமிருந்த சிவனுடைய வில்லை உடைத்து, ஜனகன் மகள் சீதையை மணந்தான் இராமன். தன்னுடைய மூத்த மகனாகிய இராமனுக்குப் பட்டம் கட்டவேண்டும் என ஏற்பாடுகள் செய்து வந்தான் தசரதன். அவனுடைய மனைவியாகிய கைகேயி தன் வேலைக்காரியாகிய மந்தரை என்ற கூனியின் பேச்சைக் கேட்டு இராமனுக்குப் பட்டம் கட்ட விடாமல் செய்தாள்.
இராமன் சிறிய பையனாக இருக்கும் பொழுது மந்தரையைக் காலை வாரி விட்டுத் தள்ளிக் கீழே விழச் செய்தான். அதிலிருந்து இராமன் மேல் வெறுப்புக் கொண்ட மந்தரை இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தசரதனிடம் அவள் பெற்றுள்ள முதல் வரத்தால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு அனுப்பவும், இரண்டாவது வரத்தால் பரதனுக்குப் பட்டம் சூட்டவும் ஏற்பாடு செய்தாள். முன்னொரு காலத்தில் சம்பராசுரனுடன் போர் தொடுத்த தேவர்கள், தசரதனைத் தங்கட்குத் துணையாக வருமாறு அழைத்தனர். அப்போரில் காயம்பட்ட தசரதனுக்குக் கைகேயி சிறப்பாகப் பணிவிடை புரிந்தாள். மகிழ்ந்த தசரதன், அவள் எப்பொழுது வேண்டுமானாலும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி இருந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 5 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இராமன், கொண்ட, முனிவரிடம், கார்த்தவீரியன், ஜமதக்கினி, பரம்பரையில், பட்டம், பரசுராமன், சத்ரியர்கள், தசரதன்