அக்னி புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
இதனால் கடுங்கோபம் கொண்ட ஹிரண்யகசிபு ஒரு தூணினைக் காட்டி மகனிடம், "இதனுள்ளும் உன்னுடைய விஷ்ணு இருக்கின்றாரா?” என்று வினவ, மகனும், ஆம் என்று சொன்னான். "அப்படியானால் நான் இந்தத் துணினை எட்டி உதைக்கிறேன். உன்னுடைய விஷ்ணு வருகின்றாரா என்று பார்க்கலாம்” என்று துணினை எட்டி உதைத்தான். இரண்டாகப் பிளந்த அத் தூணிலிருந்து மனித உடலுடனும், சிங்கத்தின் தலையுடனும் நரசிம்ம அவதாரமாக வெளிவந்த விஷ்ணு, அசுரனைத் தன்னுடைய தொடையின் குறுக்கே படுக்க வைத்து, தன்னுடைய கூரிய நகங்களால் ஹிரண்யகசிபு நெஞ்சினைக் கிழித்துக் கொன்றார். இறுதியில் பிரகலாதனை அரசனாக நியமித்து விட்டு தேவர்களைத் தேவருலகத்திற்கு அனுப்பி வைத்தார் விஷ்ணு.
5. வாமன அவதாரம்
பிரகலாதனின் பேரனாகப் பிறந்தவன் பலி. மிகுந்த பலசாலியாகவும் வீரமுள்ளவனாகவும் திகழ்ந்த பலி அசுரர்களின் தலைவனாக இருந்தான். அப்பொழுது, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில், தேவர்கள் தோல்வி அடைந்தனர். உடனே விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். விஷ்ணுவும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி கூறினார்.
காசிப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக அவதரித்தார் விஷ்ணு. குள்ளமான உருவத்தை உடையவராக இருந்தார். பலிச் சக்கரவர்த்தி மிகப் பெரிய யாகம் ஒன்றினுக்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தின் பொழுது, யார் வரம் கேட்டாலும் வழங்கப்படும் என்று அறிவித்தான். யாகத்தில் கலந்து கொண்ட குள்ளன், வேதங்களை மிக அழகாக எடுத்துக் கூறினான். இதனால் மனம் மகிழ்ந்த பலிச் சக்கரவர்த்தி, அச் சிறுவனுக்கு ஏதேனும் வரம் அளிக்க விரும்பினான். பலிச் சக்கரவர்த்தியின் குருவாகிய சுக்ராச்சாரியார் இதில் சந்தேகம் கொண்டு, பலிச் சக்கரவர்த்தியைத் தடுத்தார். தான் வாக்குக் கொடுத்தபடியே நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதனின்று பின்வாங்க மாட்டேன் என்றும் கூறிய அரசன், குள்ளனை நோக்கி, “சிறுவனே! உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்” என்று கூறினான். வரத்தினைக் கொடுப்பதற்கு முன் புனித நீரைக் கொண்டு சிறிய சடங்கு செய்யப்பட வேண்டி இருந்தது. வரம் கொடுப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைத்த சுக்ராச்சாரியார், நீர் வைத்திருந்த பாத்திரத்தின் உள்ளே சென்று, யாரும் அதிலிருக்கும் நீரை எடுக்க முடியாதபடி, அந்தப் பாத்திரத்தை இறுக்க மூடிக் கொண்டார். அப் பாத்திரத்தில் உள்ள நீரை எடுக்க அதனை ஒரு குச்சியால் துளைத்தான், குள்ளன். அக்குச்சியானது. பாத்திரத்தின் உள்ளே அமர்ந்திருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தியதால் அவருக்கு அன்று முதல் ஒரு கண்ணே இருந்தது.
பலிச் சக்கரவர்த்தியைப் பார்த்த குள்ளன், “அரசே! என்னுடைய குருவிற்கு தட்சணை கொடுப்பதற்காக என்னுடைய மூன்று அடியில் அடங்கியிருக்கும் மண்ணைத் தரவேண்டும்” என்று கேட்க அரசனும் ஒப்புக் கொண்டான். குள்ளன் உடனே மிகப் பெரிய உருவெடுத்து ஒர் அடியினைக் கீழே வைக்க, அது பூலோகம் முழுவதையும் அடைத்துக் கொண்டது. பலியிடம் இருந்து பெற்றுக் கொண்ட இம் மூன்று உலகங்களையும் இந்திரனுக்கு வழங்கினார். குள்ளனாக அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, வேறு எங்கும் செல்ல முடியாத பலி அரசன் பாதாள லோகம் செல்ல முற்படுகையில் அவனைத் தடுத்து, அவன் பெருந்தன்மையைப் பாராட்டி, “பிற்காலத்தில் இந்திரன் என்ற பதவியை வகிப்பாய்!” என்று பலி அரசனுக்கு வரம் கொடுத்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 4 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, வரம், பலிச், குள்ளன், ", வேண்டும், கூறினான், உடனே, ஹிரண்யகசிபு, கொண்ட