மகாகவி பாரதியார் நூல்கள் - தேசிய கீதங்கள்
தேசிய இயக்கப் பாடல்கள்
32. சத்ரபதி சிவாஜி
(தன் சைனியத்திற்குக் கூறியது)
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்! ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்! யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள் எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்! கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர். மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்! யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய! தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக! மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு! வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு! தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும் நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு! வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! பாரதப் பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! வானக முட்டும் இமயமால் வரையும் ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு! தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு! ஊனமொன்றறியா ஞானமெய் பூமி, வானவர் விழையும் மாட்சியார் தேயம்! பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்! தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர் பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபுரி பகைவர் வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்! ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார் கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார் எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர் கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர், பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர் திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர், பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர், வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர். மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்? மொக்குகள்தான் தோன்றி முடிவது போல மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம். தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய் ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன், புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன். மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர் யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக! படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்! சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க, நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக! தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க! ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன். ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்! வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்! மானமே பெரிதென மதிப்பவர் இருமின்! ஈனமே பொறாத இயல்பினர் இருமின்! தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்! மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்! ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்! சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்! தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்! பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்! உடலினைப் போற்றா உத்தமர் இருமின்! கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்! வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின் இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும் பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும் ராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்! வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்! பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும் (வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும் வானுறு தேவர் மணியுல கடைவோம், வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத் தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்! போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்! பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ? ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம் வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை! தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை! முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த் தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர் ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்? வையகத் தரசும் வானக ஆட்சியும் போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன். மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது. வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது, ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும், வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன் சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன், எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன், சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி? எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த் தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான் வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால் அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய், உண்மையை அறியாய் உறவையே கருதிப் பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய் வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம். ஆரிய நீதிநீ அறிகிலை போலும்! பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும் பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக் குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் மறமே உருவுடை மாற்றலர் தம்மைச் சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன். விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும் ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர், நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர், செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர் சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார். |
33. கோக்கலே சாமியார் பாடல்
(இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது)
களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ? வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ? மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ? துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால் தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ? |
34. தொண்டு செய்யும் அடிமை
(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது)
நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்கு மார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டு தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு சுதந்திர நினைவோடா? பண்டு கண்ட துண்டோ ? - அதற்கு பாத்திர மாவாயோ? (தொண்டு) ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய்! - கண்முன் நிற்கொ ணாது போடா! (தொண்டு) அச்சம் நீங்கி னாயோ? - அடிமை ஆண்மை தாங்கி னாயோ? பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை பேணு தலொழித் தாயோ? (தொண்டு) கப்ப லேறு வாயோ? - அடிமை கடலைத் தாண்டு வாயோ? குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு) ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை உடல்பில் வலிமை யுண்டோ ? வெற்று ரைபே சாதே! அடிமை! வீரியம் அறி வாயோ? (தொண்டு) சேர்ந்து வாழு வீரோ? - உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ? சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள் சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு) வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி வெருவலை ஒழித் தாயோ? உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம் உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு) நாடு காப்ப தற்கே - உனக்கு ஞானம் சிறது முண்டோ ? வீடு காக்கப் போடா! - அடிமை வேலை செய்யப் போடா! (தொண்டு) சேனை நடத்து வாயோ? - தொழும்புகள் செய்திட விரும்பு வாயோ? ஈன மான தொழிலே - உங்களுக்கு இசைவ தாகும் போடா! (தொண்டு) |
35. நம்ம ஜாதிக் கடுக்குமோ
(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்)
"ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? நியாயந் தானோ? நீர் சொல்லும்?" என்ற வர்ணமெட்டு பல்லவி ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? செய்வது சரியோ? சொல்லும் கண்ணிகள் முன்னறி யாப் புது வழக்கம் நீர் மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது எந்நகரிலு மிது முழக்கம் - மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே) சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள் தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள் மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே) வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர் பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே) |
36. நாம் என்ன செய்வோம்.
("நாம் என்ன செய்வோம்! புலையரே! - இந்தப் பூமியி லில்லாத புதுமையைக் கண்டோ ம்" என்றவர்ணமெட்டு)
ராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம் பல்லவி நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப் பூமியிலில்லாத புதுமையைக் கண்டோ ம். (நாம்) சரணங்கள் திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு இபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்) தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார், பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார், பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்) பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்) சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார் சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் தாமெத் தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்) |
37. பாரத தேவியின் அடிமை
(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன் அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதியது)
பல்லவி அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான் அன்னியர் தமக்கடிமை யல்லவே. சரணங்கள் மன்னிய புகழ் பாரத தேவி தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்) இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம் திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்) வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம் ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்) காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள் பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்) காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம் பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்) |
38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய், கனல் மூட்டினாய், வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி) கூட்டம் கூடி வந்தே மாதரமென்று கோஷித்தாய், - எமை தூஷித்தாய், ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல் ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி) கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள் கூறினாய், - சட்டம் மீறினாய், ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி) அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் ஆக்கினாய், - புன்மை போக்கினாய், மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி) தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத் தூண்டினாய், - புகழ் வேண்டினாய், கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி) எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய், - விதை தூவினாய், சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல் செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி) சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச் சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன் தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி) |
39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம் எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ? வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம் எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல் ஈனமோ? - அவ மானமோ? பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? - உயிர் வெல்லமோ? நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? - பன்றிச் சேய்களோ? நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத் நீதமோ? - பிடி வாதமோ? பார தத்திடை அன்பு செலுத்துதல் பாபமோ? - மனஸ் தாபமோ? கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்றமோ? - இதில் செற்றமோ? ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம் மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம் மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம். சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம் சாயுமோ? - ஜீவன் ஓயுமோ? இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ? |
40. நடிப்பு சுதேசிகள்
(பழித்தறிவுறுத்தல்)
கிளிக்கண்ணிகள்
கிளிக்கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற பெண்களின் கூட்டமடீ! - கிளியே! பேசிப் பயனென் னடீ யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! மாங்கனி வீழ்வ துண்டோ ! உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவா ரடீ! - கிளியே! செய்வ தறியா ரடீ! தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே! நம்புத லற்றா ரடீ! மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலு யிரைக் - கிளியே பேணி யிருந்தா ரடீ! தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே அஞ்சிக் கிடந்தா ரடீ! அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே ஊமைச் சனங்க ளடீ! ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மாக்களுக் கோர் கணமும் - கிளியே வாழத் தகுதி யுண்டோ ? மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந் தனில் - கிளியே! இருக்க நிலைமை யுண்டோ ? சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் வந்தே மாதர மென்பார்! - கிளியே! மனத்தி லதனைக் கொள்ளார் பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமை இருந்த நிலை! - கிளியே! பாமர ரேதறி வார்! நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! சிறுமை யடைவா ரடீ! சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! செம்மை மறந்தா ரடீ! பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! சோம்பிக் கிடப்பா ரடீ! தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் வாயைத் திறந்து சும்மா - கிளியே! வந்தே மாதர மென்பார்! |
தேசீயத் தலைவர்கள்
41. மகாத்மா காந்தி பஞ்சகம்
வாழ்க நீ எம்மான் வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம் குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப் படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! வேறு கொடியவெந் நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ? இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ? என்சொலிப் புகழ்வதிங் குனையே? விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன வெம்பிணி யகற்றிடும் வண்ணம் படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம் படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்! தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும் பிறனுயிர் தன்னையும் கணித்தல் மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணர்தல் இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு இழிபடு போர், கொலை, தண்டம் பின்னியே கிடக்கும் அரசிய லதனில் பிணைத்திடத் துணிந்தனை பெருமான், பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய் அதனி லுந் திறன்பெரி துடைத்தாம் அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழி யென்று நீ அறிந்தாய் நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை! நெறியினால் இந்தியா விற்கு வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்கநல் லறத்தே! |
42. குரு கோவிந்தர்
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு விக்ரம நாண்டு வீரருக் கமுதாம் ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன் பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக் குலத்தினை வகுத்த குருமணி யாவான். ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும் வீரர் நாயகன், மேதினி காத்த குருகோ விந்த சிங்கமாங் கோமகன், அவந்திருக் கட்டளை அறிந்துபல் திசயினும் பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும் நாடொறும் வந்து நண்ணுகின் றாரால், ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம் வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான் கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும், புன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும், பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும், நல்வர வாகுக நம்மனோர் வரவு என்று ஆசிகள் கூரி ஆர்ப்பன போன்ற புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள் யாதவன் கூறும்? என்னெமக் கருளும் ? எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும் இன்புடைத் தாக்கும்? எனப்பல கருதி மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் தேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும் ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம். விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் திருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது கூறநா நடுங்குமோல் கொற்றக் கூர்வாள். எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி, வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச் சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு மோனமுற் றடங்கி முடிவணங் கினரால் வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன் திருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச் சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலை குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி "வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப விரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள் தருமத் தெய்வந் தான்பல குருதிப் பலவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம் வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப யார்வரு கின்றீர்!" என்னலும் சீடர்கள் நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர் கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு வீரன்முன் வந்து விளம்புவான் இஃதே. "குருமணி! நின்னொரு கொற்றவள் கிழிப்ப விடாயறாத் தருமம் மேம்படு தெய்வத்து இரையென மாயவன் ஏற்றருள் புரிகவே!" புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம் கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல, மற்றதன் நின்றொர் மடுவின்வந் தாலெனக் குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டஜர் பார்மின்! சற்குரு பளீரெனக் கோயிலிஜ் வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம் முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய் மின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன். மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி - தூக்கிப் பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன், "மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச் சித்தம்நான் கொண்டேன்; தேவிதான் பின்னுமோர் பலிகேட் கின்றாள்! பக்தர்காள்! நும்முளேஇன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇக் காளியை தாகங் கழித்திட துணிவோன் எவனுளன்!" எனலும் இன்னுமோர் துணிவுடை வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன். இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன் குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். இங்ஙன மீண்டுமே இயற்றிபப லியோ ரைந்து பரமனங் களித்தனன். அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட மட்டிலே மானிடர் மாண்பெற லாகார் அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் அவரே மெய்மையோர் முத்தரும் அவரே தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன். அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர் ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார் எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன் வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும் ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும் கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்! ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்! விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர் "ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!" எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர். அப்போழ் தின்னருள் அவதரித் தனையான், நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு குறுநகை புரிந்து குறையறு முத்தர் ஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி ஆசிகள் கூறி அவையினை நோக்கிக் கடல்முழக் கென்ன முழங்குவன் காணீர்! ஏகாளியும் நமது கனகநன் னாட்டுத் தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்! நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும பலியிடச் சென்றது பாவனை மன்ற. என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்? ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும் நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே! தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர் என்பது தெளிந்தேன், என்கர வாளால் அறுத்ததிங் கின்றைத் தாடுகள் காண்பீர், சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன், களித்ததென் நெஞ்சம், கழிந்தன கவலைகள் குருகோ விந்தன் கொண்டதோர் தருமம் சீடர்தம் மார்க்கம்எ எனப்புகழ் சிறந்தது இன்னுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர் காலசா என்ப, காலசா எனுமொழி முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று ஐவரன் னோர்தமை அருளினன் ஆரங்யன் சமைந்தது எகாலசாஎ எனும் பெயர்ச் சங்கம் பாரத மென்ற பழம்பெரு நாட்டினர் ஆவிதேய்ந் தழித்திலர். ஆண்மையிற் குறைந்திலர். வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன் அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர் தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி மண்மா சகன்ற வான்படு சொற்களால் எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள் இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன். ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச் சாதியை வகுத்தனன்; தழைத்தது தருமம். கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர் நடுங்குவ ராயினர்; நகைத்தனள் சுதந்திரை. ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு விக்கிர மார்க்க னாண்டினில் வியன்புகழ்க் குருகோ விந்தன் கொற்றமர் சீடரைக் கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன் காண்டற் கரிய காட்சி! கவின் திகழ் அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன் சூழ்ந்திருந் தனர் உயிர் தொண்டர்தாம் ஐவரும் தன் திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக் கண்மணிப் போன்றார் ஐவர்மேற் கனிந்து குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி, "காண்டிரோ! முதலாங் 'காலசா' என்றனன் நாடும் தருமமும் நன்கிதிற் காப்பான் அமைந்ததிச் சங்கம் அறமின்நீர் என்றான் அருகினில் ஓடிய ஆற்றின்நின் றையன் இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி மந்திர மோதினன், மனத்தினை அடக்கிச் சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச் சபமுரைத் திட்டான், சயப்பெருந்திரு, அக் கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள். ஆற்றுநீர் தனையோ அடித்ததந் திருவாள் அயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரதச் சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி நல்லுயிர் நல்கினன், நாடெலாம் இயங்கின. தவமுடை ஐவரைத் தன்முனா நிறுத்தி மந்திர நீரை மாசறத் தெளித்து அருள்மய மாகி அவர்விழி தீண்டினன் பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால் அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது! சீடர்கள னைவரும் தீட்சை இஃதடைந்தனர். ஐயன் சொல்வான் அன்பர்காள்! நீவிர் செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம் அமிர்தம்எ என்று அறிமின் அரும்பே றாம் இது பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின், ஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய மானிடரெல்லாஞ் சோதரர் மானிடர்சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர். சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும் இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல் ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும் தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதியொன் றினையே சார்ந்ததோ ராவீர் அநீதியும் கொடுமையும் அழித்திடுஞ் சாதி இமழித்திடலறியா வன்முகச் சாதி இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும் கையினில் வாளும் கழன்றிடாச் சாதி இசோதர நட்புத் தொடர்ந்திடு சாதி அரசன் இல்லாது தெய்வமே யரசா மானுடர் துணைவரா, மறமே பகையாக் குடியர சியற்றுங் கொள்கையார் சாதி அறத்தினை வெறுக்கிலீர்! மறத்தினைப் பொறுக்கிலீர், தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப் புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!" என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன் அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள். குருகோ விந்தக் கோமகன் நாட்டிய கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி. |
43. தாதாபாய் நௌரோஜி
முன்னாலில் இராமபிரான் கோதமனா தியபுதல்வர் முறையி னீன்று பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத் தியஎமது பரத கண்ட மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப் பிறரெள்ள வீழ்ந்த காலை அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில மக்களவ ரடிகள் சூழ்வாம். அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன், தன் அன்னை கண்ணீர் எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென் உயிர் துடைப்பேன் என்னப் போந்து, யௌவன நாள் முதற்கொடுதான் எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும் செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி யானுழைப்புத் தீர்த லில்லான் கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக் கருணையும்அக் கருணைப் போலப் பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு நிகரின்றிப் படைத்த வீரன், வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம் எனஅதனை வெறுத்தே உண்மைச் சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித் தனக்குழையாத் துறவி யாவோன். மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும் மதியாதே வாணாள் போக்குந் தீதாவார் வரினுமவர்க் கினியசொலி நன்குணர்த்துஞ் செவ்வி யாளன், வேதாவா யினுமவனுக் கஞ்சாமே உண்மைநெறி விரிப்போன் எங்கள் தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க; எண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு இருந்தெம்மை இனிது காக்க! பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந் துக எமது பரதநாட்டுப் பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி போற்புதல்வர் பிறந்து வாழ்க விண்புல்லு மீன்களென அவனன்னார் எவ்வயினும் மிகுக மன்னோ! |
44. பூபேந்திர விஜயம்
பாபேந்திரியஞ் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன் ஞானY ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன் விண்ணவர்த முலகை யாள்ப்ர- தாபேந்திரன் கோப முறினுமதற்கு அஞ்சியறந் தவிர்க்கி லாதான் பூபேந்திரப் பெயரோன் பாரதநாட் டிற்கடிமை பூண்டு வாழ்வோன் வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங் கிளைத்துவர மேலோர் தம்மைத் தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பி நிற்கும் பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம் அருகில்வரும் பான்மை தோன்றக் காழ்fத்தமன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலையினிது காட்டி நின்றான் மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய் திட்டாலும் மாந்த ரெல்லாம் கண்ணாகக் கருதியவன் புகழோதி வாழ்த்திமனங் களிக்கின் றாரால் எண்ணாது நற்பொருளைத் தீதென்பார் சிலருலகில் இருப்ப ரன்றே? விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள் இருளினது விரும்பல் போன்றே! இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட் டிற்கிரங்கி இதயம் நைவான் ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும் ஓருயிரென் றுணர்ந்த ஞானி. அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமையெதும் அறிகி லாதார், முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே? |
45. வாழ்க திலகன் நாமம்!
பல்லவி வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே! வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே! சரணங்கள் நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே! நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே! ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே! எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க) கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் - நல்ல கருத்தினா லதனைச் சூழ்ந்தோர் அகழி வெட்டினான் சொல் விளக்க மென்ற தனிடைக் கோயி லாக்கினான் ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக் கொடியைத் தூக்கினான் (வாழ்க) துன்பமென்னும் கடலைக் கடக்குந் தோணி யவன் பெயர் சோர்வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சி யவன் பெயர் அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன்பேர் ஆண்மையென்னும் பொருளைக் காட்டும் அறிகுறி யவன்பேர். (வாழ்க) |
46. திலகர் முனிவர் கோன்
நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல் நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர் தாம கத்து வியப்பப் பயின்றொரு சாத்தி ரக்கடலென விளங்குவோன், மாம கட்குப் பிறப்பிட மாகமுன் வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப் பூம கட்கு மனந்துடித் தேயிவள் புன்மை போக்குவல் என்ற விரதமே. நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான் நீத மேயோர் உருவெனத் தோன்றினோன், வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன், துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல் அன்பொ டோ தும் பெயருடை யாவரின். வீர மிக்க மராட்டியர் ஆதரம் மேவிப் பாரத தேவி திருநுதல் ஆர வைத்த திலகமெனத் திகழ் ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன், சேர லர்க்கு நினைக்கவுந் தீயென நின்ற எங்கள் திலக முனிவர்கோன் சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே. |
47. லாஜபதி
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன்கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ? நினையவர் கனன்றிந் நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்களெலாம் மறக்கொ ணாதெம் எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி நீவளர்தற் கென்செய் வாரே ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் அருமையில்லை; எளிதினவர் புரிந்திட்டா ரென்றிடினும் அந்த மேலோன் பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென நெஞ்சினுளே பெட்பிற் பேணி வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம் ஓட்டியெவர் வாழ்வ திங்கே? பேரன்பு செய்தாரில் யாவரே பெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்? ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய் செய்ததனால் அவனுக் குற்ற கோரங்கள் சொலத் தகுமோ? பாரதநாட் டிற்பக்தி குலவி வாழும் வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம் பலவடைதல் வியத்தற் கொன்றோ? |
48. லாஜபதியின் பிரலாபம்
கண்ணிகள்
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே? வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன் மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால் குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும் நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு. சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர் ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு. ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம் வெம்புலனை வென்ற எண்ணில் வீரர்க்குந் தாய்நாடு. நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம் புல்லியரைச் செற்றாழ்ந்த புனிதப் பெருநாடு. கன்னாணுந் திண்டோ ட் களவீரன் பார்த்தனொரு வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு. கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும் மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு. ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத் தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம். சீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல் ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு. ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த சீரியர் மெஞ்ஞான தயாநந்தர் திருநாடு. என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ? ஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ? என்னை நினைத்தும் இரங்குவரோ? அல்லாது பின்னைத் துயர்களிலென் பேருமறந் திட்டாரோ? தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில் கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன். எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும் தத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன். |
49. வ.உ.சி.க்கு வாழ்த்து
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ வருந்தலைஎன் கேண்மைக்கோவே! தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம் நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி! |
பிற நாடுகள்
50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை
பேரருட் கடவுள் திருவடி யாணை, பிறப்பளித் தெமையெலாம் புரக்கும் தாரணி விளக்காம் என்னரு நாட்டின் தவப்பெய ரதன்மிசை யாணை பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின் பணிக்கெனப் பலவிதத் துழன்ற வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த விழுமியோர் திருப்பெய ராணை. ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த சீருய ரறங்களி னாணை. மாசறு மென்நற் றாயினைப் பயந்தென் வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின் ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ அத்தகை யன்பின்மீ தாணை. தீயன புரிதல் முறைதவி ருடைமை, செம்மைதீர் அரசியல், அநீதி ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும் அரும்பகை யதன்மிசை யாணை தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய உரிமைகள் சிறிதெனு மில்லேன், தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம் துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன். மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து மண்டுமென் வெட்கத்தி னாணை. முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று அச்செயல் முடித்திட வலிமை அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில் ஆர்ந்த பேராவலி னாணை. நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந் நலனறு மடிமையின் குணத்தால். வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண் வளர்ந்திடும் ஆசைமீ தாணை. மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின்மீ தாணை. மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை. பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும் புன்சிறைக் களத்திடை யழிந்தும் வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும் மெய்குலைந் திறந்துமே படுதல் ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின் அன்னைமார் அழுங்கணீ ராணை. மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும் வகுக்கொணாத் துயர்களி னாணை. ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே யான்செயுஞ் சபதங்கள் இவையே. கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக் கட்டளை தன்னினும் அதனைத் திடனுற நிறுவ முயலுதல் மற்றித் தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம் உடனுறு கடமை யாகுமென் பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும் தடநில மிசையோர் சாதியை இறைவன் சமைகெனப் பணிப்பனேல் அதுதான். சமைதலுக் குரிய திறமையும் அதற்குத் தந்துள னென்பதை யறிந்தும் அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும் அன்னவர் தமக்கெனத் தாமே தமையல தெவர்கள் துணையு மில்லாது தம்மருந் திறமையைச் செலுத்தல் சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும், கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும் கருதிடா தளித்தலுந் தானே தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு தளர்விலாச் சிந்தனை கொளலே பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற் பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும், அருமைசால் சபத மிவைபுரி கின்றேன் ஆணைக ளனைத்து முற்கொண்டே. என்னுடனொத்த தருமத்தை யேற்றார் இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம் தத்தமா வழங்கினேன்; எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச் சுதந்திரம் பூண்டது வாகி இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக் குடியர சியன்றதா யிலக. இவருடன் யானும் இணங்கியே யென்றும் இதுவலாற் பிறதொழி லிலனாய்த் தவமுறு முயற்சி செய்திடக் கடவேன். சந்ததஞ் சொல்லினால், எழுத்தால், அவமறு செய்கை யதனினால் இயலும் அளவெல்லாம் எம்மவ ரிந்த நவமுறு சபையி னொருபெருங் கருத்தை நன்கிதன் அறிந்திடப் புரிவேன். உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கமென் பதுவும் செயம்நிலை யாகச் செய்திடற் கறமே சிறந்ததோர் மார்க்கமென் பதுவும், பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற் பேணுமா றியற்றிடக் கடவேன், அயலொரு சபையி லின்றுதோ றென்றும் அமைந்திடா திருந்திடக் கடவேன். எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும் இச்சபைத் தலைவரா யிருப்போர் தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து தலைக்கொளற் கென்றுமே கடவேன், இங்கென தாவி மாய்ந்திடு மேனும் இவர்பணி வெளியிடா திருப்பேன் துங்கமார் செயலாற் போதனை யாலும் இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன். இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன் மெய்யிது, மெய்யிது; இவற்றை என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக. அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க அசத்தியப் பாதகஞ் சூழ்க நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம்யா னுழலுக மன்னோ! வேறு பேசி நின்ற பெரும்பிர திக்கினை மாசி லாது நிறைவுறும் வண்ணமே ஆசி கூறி யருளு! ஏழையேற்கு ஈசன் என்றும் இதயத் திலகியே.- |
51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
அறத்தினால் வீழ்ந்து விட்டாய், அன்னியன் வலியனாகி மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய், முறத்தினால் புலியைத் தாக்க்ம் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினான் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்! வண்மையால் வீழ்ந்து விட்டாய்! வாரிபோற் பகைவன் சேனை திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலித லின்றி ஒண்மைசேர் புகழே மேலென்று உளத்திலே உறுதி கொண்டாய், உண்மைதேர் கோல நாட்டார் உரிமையைக் காத்து நின்றாய். மானத்தால் வீழ்ந்து விட்டாய்! மதங்ப்பிலாப் பகைவர் வேந்தன் வானத்தாற் பெருமை கொண்ட வலிமைதான் உடைய னேனும். ஊனத்தால் உள்ள மஞ்சி ஒதுங்கிட மனமொவ் வாமல் ஆசனத்தைச் செய்வோ மென்றே அவன்வழி யெதிர்த்து நின்றாய்! வீரத்தால் வீழ்ந்து விட்டாய்! மேல்வரை யுருளுங் காலை ஓரத்தே ஒதுங்கித் தன்னை ஒளித்திட மனமொவ் வாமல் பாரத்தை எளிதாக் கொண்டாய், பாம்பினைப் புழுவே யென்றாய் நேரத்தே பகைவன் தன்னை எநில்எலென முனைந்து நின்றாய். துணிவினால் வீழ்ந்து விட்டாய்! தொகையிலாப் படைக ளோடும் பிணிவலர் செருக்கி னோடும் பெரும்பகை எதிர்த்த போது பணிவது கருத மாட்டாய், பதுங்குதல் பயனென் றெண்ணாய் தணிவதை நினைக்க மாட்டாய், நில் லெனத் தடுத்தல் செய்தாய். வெருளுத லறிவென் றெண்ணாய, விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய், சுருளலை வெள்ளம் போலத் தொகையிலாப் படைகள் கொண்டே மருளுறு பகைவர் வேந்தன் வலிமையாற் புகுந்த வேளை, உருளுக தலைகள் மானம் ஓங்குகெஎன் றெதிர்த்து நின்றாய். யாருக்கே பகையென் றாலும் யார் மிசை இவன்சென் றாலும் ஊருக்குள் எல்லை தாண்டி உத்திர வெண்ணி டாமல், போருக்குக் கோலம் பூண்டு புகுந்தவன் செருக்குக் காட்டை வேருக்கும் இடமில் லாமல் வெட்டுவேன் என்று நின்றாய். வேள்வியில் வீழ்வ தெல்லாம் வீரமும் புகழும் மிக்கு மீள்வதுண்டு டுலகிற் கென்றே வேதங்கள் விதிக்கும் என்பர், ஆள்வினை செய்யும் போதில், அறத்திலே இளைத்து வீழ்ந்தார் கேள்வியுண் டுடனே மீளக் கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல். விளக்கொளி மழுங்கிப் போக வெயிலொளி தோன்றும் மட்டும், களக்கமா ரிருளின் மூழ்குங் கனக மாளிகையு முண்டாம், அளக்கருந் தீதுற் றாலும் அச்சமே யுளத்துக் கொள்ளார், துளக்கற ஓங்கி நிற்பர், துயருண்டோ துணிவுள் ளோர்க்கே? |
52. புதிய ருஷியா
(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)
மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே, ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, கொடுங்காலன் அலறி வீழ்ந்தான், வாகான தோள்புடைத்தார் வானமரர், பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர் போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம், வையகத்தீர், புதுமை காணீர்! இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெனும்பே ரிசைந்த பாவி சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும்; தருமந் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன், பொய்சூது தீமை யெல்லாம் அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த தோங்கினவே அந்த நாட்டில். உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை, பிணிகள் பலவுண்டு பொய்யைத் தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டே யிறப்ப துண்டு, முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே ஆவிகெட முடிவ துண்டு. இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம், இவ்வா றங்கே செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில் அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி உண்மைசொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடுநல் விழியாலே நோக்கினாள்ஈ முடிந்தான் காலன். இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன் இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார், புயற்காற்றுங் குறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே! குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது அடிமையில்லை அறிக என்றார், இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான், கிருத யுகம் எழுக மாதோ! |
53. கரும்புத் தோட்டத்திலே
ஹரிகாம்போதி ஜன்யம் ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு பல்லவி கரும்புத் தோட்டத்திலே - ஆ! கரும்புத் தோட்டத்திலே சரணங்கள் கரும்புத் தோட்டத்திலே - அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே! ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய் சுருங்குகின்றனரே - அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு மருந்திதற் கிலையோ? - செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது எண்ணம் இரங்காதோ? - அந்த ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும் மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) நாட்டை நினைப்பாரோ? - எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ? - அவர் விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரையாயோ? - அவர் விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே) நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ? - ஹே வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே) |
தேசிய கீதங்கள் முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய கீதங்கள் - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - கிளியே, இருமின், எங்கள், தொண்டு, நாட்டி, அன்னியர், மாற்றலர், நாட்டின், நின்றாய், செய்யும், என்றும், வீழ்ந்து, சுதந்திரம், விட்டாய், பல்லவி, தருமம், போச்சோ, சரணங்கள், ஒற்றுமை, சீடர்கள், தோட்டத்திலே, கரும்புத்தோட்டத்திலே, விம்மி, கரும்புத், கடவேன், குரவன், தாங்கு, குருகோ, திலகரே, விரும்பேன், புதல்வர், தாய்த்திரு, ஆரியர், நோக்கி, மிலேச்சர், காட்டி, பகைவர், சூழ்ச்சி, இந்நாள், கின்றார், கடவுள், வீரியம், குருமணி, திருநாடு, றாலும், நீரதன், பாரதப், யாவிரும், போதில், நினைவகற், மனத்திற், கொண்டே, அரும்புகழ், றாதீர், பாரதநாட், சோதரர், எனப்பல, கடுக்குமோ, மாதரம், ஆசிகள், போச்சு, ஜாதிக், யுண்டோ, நாட்டினர், உங்கள், முண்டோ, நாட்டில், கெல்லாம், செய்வோம், புன்னகை, நீங்கள், நெஞ்சம், உனக்கு, சிறைக்குள்ளே, கடிமைக், தேவியின், திலகன், யாவரும், யென்று, னல்லன்