கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - பொம்மை
- வசந்த் அன்பு மகனே நீ நடை பழகியதும் விளையாடவென்று பொம்மைகள் பல வாங்கிவந்தேன். தலையாட்டும் பொம்மை கை தொட்டதும் கத்தும் குருவி கூடவே நடக்கும் நாய் பல்லிளிக்கும் குரங்கு பறக்காத பறவையென்று வந்த உறவினர்களும் தந்த பொம்மைகள் ஏராளம். என் கண்ணே... காய்களைக் கட்டாயத்தில் கனியவைக்கிற காலம் இது. பல்முளைக்கும் முன்பே ஏ,பி,சி,டி சொல்ல வைத்தாள் உன் அம்மா. காலையில் கண்விழித்ததுமே கர்நாடக சங்கீதம் உன் காதில் விழுகிறது. இடைவிடாத இசைப் பயிற்சி. பகலில் பள்ளிக்குச் செல்கிற நீ சுமக்கிற எழுத்து மூட்டைகள் ஏற்படுத்துகிற தடங்களை உடை மாற்றும் போதெல்லாம் கவனிக்கிறேன் நான். மாலை முழுவதும் கம்ப்யூட்டர் எலியிடம் உன்னை பிடித்துக் கொடுத்துவிடுகிறாள். இடைப்பட்ட நேரத்திலெல்லாம் உன் தலைக்குள் இந்தி மொழி இறக்கப்படுகிறது. விடுமுறை நாளென்றால் விடாத நாட்டியப் பயிற்சி. நிற்க நேரமில்லாது உன்னை தன் கனவு "ரிமோட்டால்' இயக்குகிறாள் அவள். எப்போதாவது நீ தூக்கத்தில் சிரித்து "ப்பா'வென்று குழறுகிறபோது தூக்கம் கலைந்துவிடுகிறது எனக்கு. இன்னும் உனக்கான பொம்மைகளெல்லாம் மெருகு குலையாமல் இருக்கின்றன. என்றைக்காவது ஏதோ ஒரு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து தவ்வி விழுந்து தடுமாறும் போதாவது உன் கால்கள் பட்டு அந்த பொம்மைகள் உடையாதா என்று காத்திருக்கிறேன். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - பொம்மை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - பொம்மைகள்