களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல் ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் செவ் வாய் உவணத்தின் தோன்றும் - புனல் நாடன் தெவ்வாரை அட்ட களத்து. |
26 |
சோழ வீரர்கள் போரில் எதிரிகளின் கைகளைத் துண்டாக்கிக் கீழே விழச் செய்தனர். சிவந்த காதுகளை உடைய ஆண் கழுகுகள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன. அக்காட்சி பாம்பினை வாயில் தூக்கிச் சென்ற கருடன் வானில் பறப்பது போல் தோன்றியது.
செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால், ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை, பூ நீர் வியல் மிடாப் போன்ற - புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. |
27 |
சோழ மன்னன் தன்னை அடையாதவர்களை (பகைவர்களை) வென்ற களத்தில், இரத்தச் சேற்றில் முன்னும் பின்னுமாக நடந்து யானைகள் கோபத்தினால் மிதித்தலால் உண்டான குழிகளில் வீரர்களின் சிவந்த கண்களோடு புதிய இரத்தமானது திரண்டு தேங்கியது. அது சிவந்த மலர்களைக் கொண்ட நீரினைக் கொண்ட அகன்ற சால்களைப் போன்று இருந்தது.
ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி, பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள், கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி, இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக் கண்ணாடி காண்பாரின் தோன்றும் - புனல் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
28 |
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், பெருமிதத்தோடு போரிட்ட போர்க்களத்தில் வீரர்கள் பகைவர்தம் கைகளை ஏந்திய கேடயத்தோடு அறுபட்டு வீழுமாறு வெட்டினர். அக்கைகளை நரிகள் கவ்விக் கொண்டு ஓடின. அந்தத் தோற்றம் தம் முகங்களைக் கண்ணாடியில் கண்டு மகிழும் மனிதர்களைப் போல அந்நரிகள் பக்கத்தில் நிற்பவர்களுக்குக் காட்சி தந்தன.
கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு, வீற்று வீற்று ஓடும் மயல் இனம்போல், நால் திசையும் கேளிர் இழந்தார் அலமருப - செங் கண் சின மால் பொருத களத்து. |
29 |
சோழன் சினம் கொண்ட திருமால் போன்று போரிட்ட களத்தில், காற்று கடுமையாக வீசியதால் சோலையில் இருந்த மயில் கூட்டம் பயந்து ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவது போல, போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார்கள் தம் கணவரின் உடல்களைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைந்தனர்.
மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல், தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்- மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால் அடங்காரை அட்ட களத்து. |
30 |
சோழன், அடங்காத வீரர்களைச் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட போர்க்களத்தில் பொங்கி ஓடும் இரத்த வெள்ளமானது கொல்லப்பட்ட யானைகளின் உடல்களை இழுத்துக்கொண்டு செல்வது, மலைகளோடு மலைகள் மோதுமாறு மலைகளைத் தூக்கி எறிந்தும் உருட்டியும் இழுத்துக் கொண்டு ஓடும் வெள்ளம் போல் இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, களத்து, கொண்டு, சிவந்த, அட்ட, இலக்கியங்கள், கொண்ட, செங், போரிட்ட, போன்று, சோழன், களவழி, களத்தில், நாடன், புனல், கீழ்க்கணக்கு, ஓடும், பதினெண், நாற்பது, வீரர்களின், தோற்றம், மால், காற்று, போர்க்களத்தில், வீற்று, திருமால், வானில், வாய், தோன்றும், செஞ், வாயில், சங்க, வீரர்கள், போரில், குருதி, பகைவர்களை, மிதித்தலால், போல், உடைய, வென்ற