முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.050.திருப்புனவாயில்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.050.திருப்புனவாயில்
7.050.திருப்புனவாயில்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழம்பதிநாயகர்.
தேவியார் - பரங்கருணைநாயகியம்மை.
508 |
சித்த நீநினை யென்னொடு சூளறு வைகலும் மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளன்ஊர் பத்தர் தாம்பலர் டிநின் றாடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே. |
7.050.1 |
மனமே, நீ, 'நும் நெறியாற் பயன் கிட்டாது' என்று இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி; மதத்தையுடைய யானையின், உரித்த தோலைப் போர்த்த அழகனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊர், அடியார் பலர், திருப்பாடல்கள் பலவற்றைப்பாடி ஆடுகின்ற பழைய ஊராகிய மரப்பொந்துகளில் ஆந்தைகளின் பாட்டு ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல்.
509 |
கருதி நீமனம் என்னொடு சூளறு வைகலும் எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது மருத வானவா வைகும் இடம்மற வேடுவர் பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே. |
7.050.2 |
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி; எருதினை ஊர்கின்ற எம்பெருமானுக்கு இடமாய் இருப்பது, இந்திரன் முதலிய தேவர் நீங்காதிருக்கின்ற இடமாகிய, வேடர்கள் வாணிகச் சாத்தோடு போர்செய்தலால், ஆரவாரம் ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல்.
510 |
தொக்காய்மன மென்னொடு சூளறு வைகலும் நக்கானமை ஆளுடை யான்நவி லும்மிடம் அக்கோடர வார்த்தபி ரானடிக் கன்பராய்ப் புக்காரவர் போற்றொழி யாப்புன வாயிலே. |
7.050.3 |
அளவற்ற நினைவுகள் பொருந்தி ஆராய்கின்ற மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி. ஆடை யில்லாதிருப்பவனும், நம்மை ஆளாக உடையவனும் ஆகிய சிவ பெருமானுக்கு இடமாய் இருப்பது, எலும்பையும், பாம்பையும் அணிந்த அப்பெருமானுக்கு அன்பராய், அவனையே புகலிடமாக, அடைந்தவர் அவனைப் போற்றுதல் ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல்.
511 |
வற்கென் றிருத்திகண் டாய்மன மென்னொடு சூளறு பொற்குன்றஞ் சேர்ந்ததொர் காக்கைபொன் னாமதுவேபுகல் கற்குன்றுந் தூறும் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப் புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே. |
7.050.4 |
மனமே, நீ, முருடுடையையாய் இருக்கின்றாய்; என்னொடு இப்பொழுது சூள்செய்தலை ஒழி; பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாம் ஆதலின், கரையிடத்து, சிறிய கற்குன்றுகளும், புதர்களும், வெப்பம் மிக்க வெற்றிடமும் பொலிவிழந்து தோன்றுதற்குக் காரணமான எம் பெருமானது திருப்புனவாயிலாகிய அதனையே போற்று; பின்னர் என்னொடு சொல்.
512 |
நில்லாய்மன மென்னொடு சூளறு கைவலும் நல்லான்நமை ஆளுடை யான்நவி லும்மிடம் வில்வாய்க்கணை வேட்டுவ ராட்ட வெருண்டுபோய்ப் புல்வாய்க்கணம் புக்கொளிக் கும்புன வாயிலே. |
7.050.5 |
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; நன்மையே வடிவமானவனும், நம்மை ஆளாக உடையவனுமாகிய சிவபெருமான் பெரிதும் உறையும் இடம், வேடர்கள், தம் வில்லின்கண் தொடுத்த அம்பினால் வெருட்ட வெருண்டு ஓடி, மான் கூடடம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே; நாள்தோறும் அதன் கண் சென்று நில்; பின்னர் என்னொடு சொல்.
513 |
மறவல் நீமன மென்னொடு சூளறு வைகலும் உறவும் ஊழியும் ஆயபெம் மாற்கிட மாவது பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப் புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே. |
7.050.6 |
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; எல்லா உயிர்கட்கும் உறவும், காலமுமாய் நிற்கும் சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது, சேவற் புறா, தன் பெடை பிரிந்தபின்பு, அதனை, கள்ளிப் புதரின் வளர்ந்த கிளையில் ஏறிநின்று கூப்பிட, புனஙகளில் பொன் நிறைந்து காண்ப்படுகின்ற திருப்புனவாயிலே; அதனை மறவாது நினை; பின்னர் என்னொடு சொல்.
514 |
ஏசற்று நீநினை என்னொடு சூளறு கைவலும் பாசற்றவர் பாடிநின் றாடும் பழம்பதி தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப் பூசற்றுடி பூசல றாப்புன வாயிலே. |
7.050.7 |
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; பாசம் நீங்கிய மெய்யுணர்வினர் புகழ்ந்து பாடி, நின்று ஆடுகின்ற பழைமையான ஊர், பல நாட்டிலும் உள்ள அடியவர் பலரும் வந்து காலையிலும், மாலையிலும் வணங்க, வேடுவர்களது போர்ப்பறை ஆரவாரத்தை ஒழியாத திருப்புனவாயிலே; அதனை, இகழ்தல் அற்று, நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல்.
515 |
கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே தௌளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை கள்ளிவற் றிப்புற் றீந்துவெங் கானங் கழிக்கவே புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே. |
7.050.8 |
கொள்ளிபோல முனை சிவந்து நீண்ட வாயினை யுடையனவாகிய, கூரிய பற்களையுடைய பன்றிகள் நிலத்தைக் கிண்ட வெளிப்பட்ட சிறந்த மாணிக்க மணியோடு நெருப்புத் தோன்றுமிடத்துச சிவந்து காட்டும் நிலத்தின்கண் உள்ள கள்ளி உலர்ந்து, புல்தீந்து, கொடிய காடு அழிகையினாலே, புள்ளிமானின் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே.
516 |
எற்றேநினை என்னொடு சூளறு வைகலும் மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக் கற்றூ றுகார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப் புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே. |
7.050.9 |
மனமே, நின் செயகைதான் எத்தன்மைத்து! என்னொடு சூள்செய்தலை ஒழி; நம் வலிய வினையெனப் படுவன யாவும் அடியொடு கெட்டொழிதற்கு மற்றுச் சூழ்ச்சி யாதும் வேண்டா; கல்லைச் சூழ்ந்த புதரிலும், கரிய காட்டிடத்தும் இரையை உண்ட கரிய கானங்கோழிகள், ஈயற் புற்றுக்களின் மேல் ஏறி நின்று, 'கூகூ' எனக் கூப்பிடுகின்ற திருப்புனவாயிலை நாள்தோறும் தப்பாது நினை.
517 |
பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை அடியா ரடியன் னாவல வூரன் உரைத்தன மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வின மாய்ந்துபோய்க் குடியாகிப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே. |
7.050.10 |
நீற்றின்கண் மூழ்கிய திருமேனியனாகிய சிவ பெருமானது, புனங்களில் பொன் நிறைந்துள்ள திருப்புனவாயிலை அடியார்க்கு அடியானாகிய திருநாவலூரன் பாடிய இப்பாடல்களை,சாம்பியிராது கற்று, அவற்றால் அப்பெருமானை ஏத்த வல்லவர், முன்செய்த வினை எல்லாம் மாய்ந்துபோகப் பெற்று, அப்பெருமானுக்கே அடியராய் வாழ, அவற்றை இசைவழிப் பாடி நன்று ஆட வல்லவர்க்கு, செய்வன தவிர்வனவற்றிற் பிறழ்தலால் வருங் குற்றம் இல்லையாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புனவாயில் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னொடு, வாயிலே, பின்னர், திருப்புனவாயிலே, இப்பொழுது, சூள்செய்தலை, நாள்தோறும், தப்பாது, வைகலும், ஒழியாத, மென்னொடு, கும்புன, றாப்புன, இருப்பது, இடமாய், பெருமானது, புக்கொளிக், கைவலும், உறவும், சிவந்து, வேண்டா, திருப்புனவாயிலை, நின்று, பாடிநின், ஒளிக்கின்ற, பொன்புனஞ், சூழ்புன, புகுந்து, மாற்கிட, போர்த்த, றாடும், யானையின், நீநினை, திருமுறை, திருச்சிற்றம்பலம், பழம்பதி, செய்தலை, வேடர்கள், யான்நவி, திருப்புனவாயில், ஆடுகின்ற, சிவபெருமான், லும்மிடம்