முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.007.திருவாரூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.007.திருவாரூர்
5.007.திருவாரூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
1132 | கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி பக்க மேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆடலுகந்துடன் கூத்தராய் அக்கி னோடர வார்ப்பரா ரூரரே. |
5.007.1 |
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி ஆகிய வாச்சியங்களைக் கொண்டு இசைந்து மருங்கிலே நின்று பிளந்துவாயை உடைய பல பூதங்கள் ஆடாநிற்ப ஆடுங்கூத்தராய் அக்குமணிகளையும் அரவையும் பூண்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.
1133 | எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்த மில்புக ழாரூ ரரனெறி சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே. |
5.007.2 |
நெஞ்சமை! பந்தமும், வீடுமாயிருக்கும் தேவதேவனாகிய திருவாரூர்ப் பெருமானுக்குரிய முடிவற்ற புகழ் வாய்ந்து திரு வாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு எவ்வளவு பெருந்தவம் நீ செய்தனை? (திருவாரூர், அரநெறியை உள்ளத்திற்கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நற்றவத்தார்க்கு அன்றி எய்தொணாது என்றபடி).
1134 | வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக் கிண்டை மாலை புனைந்து மிராப்பகல் தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க் கண்ட மாளவும் வைப்பரா ரூரரே. |
5.007.3 |
வண்டுகள் அணுகப்பெறாது சூழ உலாவும் மலர்களைக்கொண்டு வளரும் சடைக்கு இண்டை மாலைகள் புனைந்தும், இரவும் பகலும் தொண்டுகள் புரிந்தும் தொடர்ந்து விடாது வழிபடுவார்க்கு அண்டங்களை ஆளவும் கொடுக்கும் பெருமான் திருவாரூரர் ஆவர். ஆளவும் என்னும் எச்ச உம்மையால் சிவஞானமாகிய முக்கியப் பயனைத் தருவதோடு என்க்கொள்க.
1135 | துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய் என்பெ லாம்நெக் கிராப்பக லேத்திநின் றின்ப ராய்நினைந் தென்று மிடையறா அன்ப ராமவர்க் கன்பரா ரூரரே. |
5.007.4 |
துன்பங்கள் முற்றும் நீங்கி நலம் சான்றவராய் எலும் பெல்லாம் நெகிழ்ந்து இரவும் பகலும் வழிபட்டு நின்று இன்பமுடையோராய் நினைந்து என்றும் இடையறாத அன்பர்க்கு அன்பராய் இருப்பர் திருவாரூர்ப் பெருமான். (இவ்வியல்புடையார்க்கே முதல்வனும், அன்பனாய், அவரைத் தன் தமர்க்குள் வைக்கும் என்றபடி.)
1136 | முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம் அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர் முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை அரட்ட டக்கித னாரூ ரடைமினே. |
5.007.5 |
ஈமக்கிடையில் கிடத்துவதற்கு முன்பு, அடங்காத ஐந்து புலன்களைக் குற்றமறக்களைந்து முரண்பாடு கொண்ட அத்தக்கன் வேள்வியாகிய குறும்பை அடக்கியவனாகிய சிவபெருமான் உறையும் திருவாரூரை நீர் அடைந்து வழிபடுவீராக.
1137 | எம்மை யாரிலை யானுமு ளேனலேன் எம்மை யாரு மிதுசெய வல்லரே அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற் கம்மை யாரைத்தந் தாராரூ ரையரே. |
5.007.6 |
எம்மைக்காத்தற்குரிய இருமுதுகுரவரும் இலர்; யானும் (இளம் பருவத்தினன் ஆகலின்) தனித்து வாழும் மன உறுதி உள்ளேன் அல்லேன்; எனது அன்னையை ஒத்த உடன்பிறந்தாரும் (திலகவதியாரும்) இதனைச் செய்ய (எனக்குத் துணையாய் நின்றருள) வல்லரே! (ஆயினும் அவர் இதுபோது உயிர்விடத் துணிதலின்) தாயாய் உடனிருந்து உபகரிக்கவல்லார் ஆர்? என்று இங்ஙனம் பன்முறை வாய்விட்டு அரற்றிய எளியேனுக்குத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானே (ஐயரே) வீட்டு நெறிக்கு உரிய என் உடன் தோன்றினாரை (உயிர்தாங்கச் செய்து) எனக்கு இருமுதுகுரவரும், ஆசானும், கேளும், உறவுமாக வைத்தருளினார். இப்பாட்டு நாவுக்கரசர், முதல்வன் தமது தமக்கையாரை உம்பருலகணைய உறும் நிலை விலக்கி உயிர்தாங்கி மனைத்தவம் புரிந்திருக்க வைத்தது தாம் பின்னர் மெய்யுணர்வு பெற்றுத் திருத்தொண்டின் நெறி பேணி உய்தற்பொருட்டே என நினைந்து பாடியது.
1138 | தண்ட வாளியைத் தக்கன்றன் வேள்வியைச் செண்ட தாடிய தேவர கண்டனைக் கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க் கொண்டி யாயின வாறென்றன் கோதையே. |
5.007.7 |
என்றன் கோதையாகிய இவள் தண்டத்தை (ஒறுப்பு முறை)க் கையாள்பவனும், தக்கன் செய்த பெருவேள்வியைச் செண்டு ஏந்தி ஆடுதல்போல் எளிதாக அட்ட தேவர்கள் முதல்வனும் ஆகிய ஆரூர் வீதிவிடங்கனை (அவன் உலாப்போதரும்போது) பன்முறை கண்டு அவனைக் காதலித்து அன்பே வடிவாய் நம் வயப்பட்டு ஒழுகாத கொண்டி (பட்டி) ஆயினவாறு என்னே!
1139 | இவள்ந மைப்பல பேசத் தொடங்கினாள் அவண மன்றெனி லாரூ ரரனெனும் பவனி வீதி விடங்கனைக் கண்டிவள் தவனி யாயின வாறென்றன் தையலே. |
5.007.8 |
இவள்நம்பால் ஒருநெறிப்படாதபலபேச்சுக்களைப் பேசத்தொடங்கிவிட்டாள். இவள் உள்ள அவ்விடத்தேம் அல்லேம் எனின் (அதாவது, இவள் தனித்துள்ளபோது) ஆரூர் அரன் என மொழிவாள், என்றன் தையலாகிய இவள் உலாப்போந்த வீதிவிடங்கப் பெருமானைக் கண்டமையால் காம நோயுடையாள் ஆனவாறு இது!
1140 | நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார் காரொத் தமிடற் றர்கனல் வாயரா ஆரத் தருறை யும்மணி யாரூரைத் தூரத் தேதொழு வார்வினை தூளியே. |
5.007.9 |
கங்கைச் சடையரும், திருநீலகண்டரும், அரவாகிய ஆரம் உடையவருமாகிய பெருமான் உறையும் அணி ஆரூர்த் தலத்தைத் தூரத்தே கண்டு தொழுவார் வினைகள் தூளியாகிக் கெடும்.
1141 | உள்ள மேயொ ருறுதி யுரைப்பன்நான் வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன் அள்ளல் நீர்வய லாரூ ரமர்ந்தவெம் வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே. |
5.007.10 |
உள்ளமே! நான் ஓர் உறுதி உரைப்பன்; கேள்; கங்கைவெள்ளத்தைத் தாங்கும் விரித்த சடை உடைய வேதியனும் சேறு, நீர் பொருந்திய வயல்களை உடைய ஆரூர் அமர்ந்த எம் வள்ளலுமாகிய பெருமான் சேவடிகளை வாழ்த்து; வணங்கு.
1142 | விண்ட மாமலர் மேலுறை வானொடும் கொண்டல் வண்ணனுங் கூடி யறிகிலா அண்ட வாணன்த னாரூ ரடிதொழப் பண்டை வல்வினை நில்லா பறையுமே. |
5.007.11 |
விரிந்த மலர்மேலுறை பிரமனும், மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும்.
1143 | மையு லாவிய கண்டத்த னண்டத்தன் கையு லாவிய சூலத்தன் கண்ணுதல் ஐய னாரூ ரடிதொழு வார்க்கெலாம் உய்ய லாம்அல்லல் ஒன்றிலை காண்மினே. |
5.007.12 |
கரிய கண்டம் உடையானும், அண்டத்திலுள்ளானும், கையிற் சூலம் உடையானும், கண்ணுதலானும் ஆகிய திருவாரூர்த்தலத்தின்கண் ஐயன் அடிதொழும் எல்லாரும் உய்தி பெறலாம்; துன்பம் ஒன்றும் அவர்க்கில்லை; காண்பீராக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமான், திருவாரூர், திருவாரூர்ப், உறையும், வல்லரே, தக்கன்றன், கெடும், உடையானும், இருமுதுகுரவரும், பன்முறை, வாறென்றன், கொண்டி, கண்டிவள், முதல்வனும், என்றன், ஆளவும், பூதங்கள், கொண்டு, கொடுகொட்டி, திருச்சிற்றம்பலம், திருமுறை, நின்று, செய்தனை, பகலும், இரவும், தொடர்ந்து, என்றபடி, நினைந்து