முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.056.திருக்கோளிலி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.056.திருக்கோளிலி
5.056.திருக்கோளிலி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலியப்பர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
1632 | மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத் தொக்க கையினன் செய்யதோர் சோதியன் கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி நக்க னைத்தொழ நம்வினை நாசமே. |
5.056.1 |
மையணிந்த கண்களையுடைய உமையை ஒருபங்கில் உடையவனும், மானும் மழுவும் பொருந்திய கைகளை உடையவனும், செவ்விதாகிய ஒப்பற்ற ஒளி வடிவினனும், மாமரங்கள் பொருந்திய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் உறையும் திகம்பரனுமாகிய பெருமானைத் தொழ நம்வினைகள் நாசமாம்.
1633 | முத்தி னைமுத லாகிய மூர்த்தியை வித்தி னைவிளை வாய விகிர்தனைக் கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி அத்த னைத்தொழ நீங்கும்நம் அல்லலே. |
5.056.2 |
முத்தினைப் போல்வானும், உலக முதலாக உள்ள திருவுரு உடையோனும், வித்தும் விளைவும் ஆகிய மேலானவனும், பூங்கொத்துக்களை உடைய பொழில்கள் சூழ்ந்த கோளிலியில் உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும்.
1634 | வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக் கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. |
5.056.3 |
வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் நெஞ்சு கலந்து பொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும், மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை.
1635 | பலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவுங் கங்கையுந் திங்களு மொண்சடை குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி நிலவி னான்றனை நித்தல் நினைமினே. |
5.056.4 |
வலிய வினைகள் பலவும் கெடும் தன்மையினால், கங்கையும் மதியும் உலவும் ஒள்ளிய சடை பொருந்தியவனும்,குளிரும் பொழில்களை உடைய கோளிலியில் நிலவியவனுமாகிய பெருமானை நாடோறும் நினைந்து பொழுவீராக! 'தொழுவார்க்கன்றி வினை நீங்கா' என்பது கருத்து.
1636 | அல்ல லாயின தீரு மழகிய முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச் செல்வன் சேவடி சென்று தொழுமினே. |
5.056.5 |
அழகிய முல்லையைப் போன்ற வெள்ளிய முறுவலை உடைய உமாதேவியார் அஞ்சுமாறு குறிஞ்சியில் வாழும் யானையை உரித்தவனும், கோளிலியில் உறையும் திருவருட் செல்வனுமாகிய பெருமான் சேவடிகளைச் சென்று தொழுவீர்களாக; உம் அல்லலாயின அனைத்தும் தீரும். `அல்லல் நீங்கும் என்பதற்குக் கயாசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தமை சான்றுழு என்றபடி.
1637 | ஆவின் பால்கண் டளவி லருந்தவப் பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல் கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி மேவி னானைத் தொழவினை வீடுமே. |
5.056.6 |
பசுவின் பாலை முன் உண்டமையால், மிக்க அருந்தவம் உடைய பாலனாகிய உபமன்யு அப் பால் வேண்டலும், 'செல்க' என்று பாற்கடலைக் கூவி அருளியவனும் குளிர் பொழில்களையுடைய கோளிலியில் விரும்பி உறைபவனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் வீடும். 'பெருமானது அளவில் ஆற்றலும் பேரருளுடைமையும் ' குறித்தபடி.
1638 | சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலால் கூத்த னாருறை யுந்திருக் கோளிலி ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே. |
5.056.7 |
பெருமைமிக்க நல்ல மனைவியும், பெற்ற பிள்ளைகளும், பொருந்திய சுற்றத்தாரும் நிலைத்த சார்பு ஆதல் இல்லையாதலால் ஆடும் பெருமான் உறையும் திருக்கோளிலியை ஏத்தி, நீர் தொழுவீராக; நும் இடர்கள் தீரும். 'இறைவனே இருமைக்கும் நீங்காத்துணை' என்றபடி.
1639 | மால தாகி மயங்கும் மனிதர்காள் காலம் வந்து கடைமுடி யாமுனம் கோல வார்பொழிற் கோளிலி மேவிய நீல கண்டனை நின்று நினைமினே. |
5.056.8 |
மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதற்கு முன்னம், அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக! 'யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க!' என்றபடி.
1640 | கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி யீசனைப் பாடு மின்னிர வோடு பகலுமே. |
5.056.9 |
கேடுகள் சூழ்ந்து மூடிக்கிடந்து துயர் என்னும் நாகநாட்டினைத் தேடி, நீர் திரியாது, திருக்கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடுவீர்களாக; பாடுவீர்களாயின் சிவகதியே கூடலாம்.
1641 | மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை அடர்த்துப் பின்னு மிரங்கி யவற்கருள் கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே. |
5.056.10 |
செருக்கை உட்கொண்டு திருக்கயிலாயப் பெருமலையை எடுக்கலுற்றானாகிய இராவணனை நெருக்கிப் பின்னும் இரக்கமுற்று அவனுக்கு அருள்கொடுத்த பெருமான் உறைகின்ற கோளிலியே தொழப் பழைய பிறவிகளிற் செய்த வினைத் துன்பங்கள் விடுத்து நீங்கும். 'பிழைத்தாரையும் பின்னர் இரங்கி வந்தடையில் முதல்வன் காத்தருள்வான்' என்பது குறிப்பு.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோளிலி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோளிலி, கோளிலியில், உறையும், பெருமானைத், என்றபடி, பெருமான், பொருந்திய, விரும்பி, நீங்கும், திருக்கோளிலி, நினைந்து, சென்று, என்பது, தீரும், உறைகின்ற, விடுத்து, நின்று, கண்டனை, மயங்கும், பொழில்களை, பலவும், னைத்தொழ, உடையவனும், சூழ்தரு, திருச்சிற்றம்பலம், திருமுறை, ஒப்பற்ற, சூழ்ந்த, நினைமினே, ரும்பொழிற், னான்குளி, வெள்ளிய, வினைகள்