முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.053.திருவதிகைவீரட்டம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.053.திருவதிகைவீரட்டம்
5.053.திருவதிகைவீரட்டம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
1600 | கோணன் மாமதி சூடியோர் கோவணம் நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.1 |
வளைந்த பிறைமதி சூடி, கோவணம் அணிந்து விரும்பியும் பயனற்ற நாணமில்லாத வாழ்க்கை உடையவரேனும், வீணையிற் பாடல் பயின்ற சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1601 | பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி அண்ண லையம ரர்தொழு மாதியைச் சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் நண்ணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.2 |
பண்வடிவானவரும், பவளத்தொகுதி போன்ற மாமணி மேனியுடைய அண்ணலும், தேவர்கள் தொழும் முதல்வரும், திருநீற்றுப்பொடியணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை நண்ணினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1602 | உற்ற வர்தம் உறுநோய் களைபவர் பெற்ற மேறும் பிறங்கு சடையினர் சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டம் கற்கி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.3 |
தம்மைப் பற்றுக்கோடாக அடைந்தவரது மிக்க துயரங்களைக் களைபவரும், இடபம் ஏறுபவரும், விளங்கும் சடையுடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற பாயும் கெடில நீர்சுற்றிச் சூழ்கின்ற திருவதிகைவீரட்டத்தைக் கற்ற பின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1603 | முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டம் கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.4 |
முதிராத வெள்ளிய பிறையினைச் சூடும் முதல்வரும், சினக்கப்பட்டார் வாழும் மூன்று புரங்கள் தீயெழுமாறு மேருமலையாகிய வில்லைத் தாம் கொண்டு எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கற்றால் அல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1604 | பல்லா ரும்பல தேவர் பணிபவர் நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டம் கல்லே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.5 |
பலவகைப்பட்ட தேவர்களாலும் பணியப்படுபவரும், நல்லார்களாலும் விரும்பிப் பரவப்படுபவரும், வில்லால் மூவெயில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கல்லேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1605 | வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் கொண்டான் கோல மதியோ டரவமும் விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டம் கண்டா லல்லதென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.6 |
வண்டுகள் பொருந்திய கொன்றையும், ஊமத்தமலரும், பிறையும், அரவமும் அழகு வளரும் தம் சடையிற் கொண்டவரும், பகைவரது மும்மதில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கண்டபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1606 | அரையார் கோவண ஆடைய னாறெலாந் திரையா ரொண்புனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்குவீ ரட்டன்பால் கரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.7 |
இடுப்பிற் பொருந்திய கோவண ஆடையரும், வழியெல்லாம் அலையெறியும் ஒள்ளிய நீர் பாய்கின்ற கெடிலக் கரையில் விளங்கும் நறுமணமுடைய திருநீற்றுப் பூச்சினரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1607 | நீறு டைத்தடந் தோளுடை நின்மலன் ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை ஏறு டைக்கொடி யான்திரு வீரட்டம் கூறி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.8 |
திருநீறு அணிந்த பெருந்தோளராகிய மலமற்றவரும், இடபக்கொடியுடையாரும் ஆகிய பெருமான் உறைவதும் புனல் பாய்கின்ற கெடில ஆற்றினுடைய கரையில் உள்ளதுமாகிய திருவதிகை வீரட்டத்தைக் கூறினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1608 | செங்கண் மால்விடை யேறிய செல்வனார் பைங்க ணானையி னீருரி போர்த்தவர் அங்கண் ஞாலம தாகிய வீரட்டம் கங்கு லாகவென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.9 |
சிவந்த கண்ணை உடைய திருமாலாகிய விடையேறிய திருவருட்செல்வரும், பசிய கண்ணை உடைய ஆனையின் பச்சைத் தோலை உரித்துப் போத்தருளியவரும், அழகிய இடமகன்ற உலகமுழுதானவருமாகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் (காணேனாயின்) என் கண்கள் இரவாயினும் ஆக, உறக்கம் கொள்ளுமோ?
1609 | பூணா ணாரம் பொருந்த வுடையவர் நாணா கவ்வரை வில்லிடை யம்பினால் பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டம் காணே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.10 |
பூண், நாண், மாலை முதலியவற்றைப் பொருந்த உடையவரும், அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால், பகைவர் மும்மதில்களை எய்தவர் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1610 | வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கம் திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் உரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.11 |
மலைகளில் நிறைந்த வயிரத்தின் தொகுதியும் மாணிக்கமும் ஆகியவற்றைக்கொண்டு அலையார்ந்த புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ளதும், நறுமணமிக்க திருநீற்றினையணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை உரையேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
1611 | உலந்தார் வெண்தலை உண்கல னாகவே வலந்தான் மிக்கவவ் வாளரக் கன்றனைச் சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம் புலம்பே னாகிவென் கண்துயில் கொள்ளுமே. |
5.053.12 |
இறந்தவர்களது(வாழ்நாள் உலந்தார்) வெள்ளிய தலைகளை உண்கலனாகக்கொண்டு, வெற்றிமிக்க அவ்வாளரக்கனாகிய இராவணனைச் சிலம்பணிந்த திருவடி விரலால் ஊன்றிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் புலம்பிப்பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவதிகைவீரட்டம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொள்ளுமே, கண்கள், கொள்ளுமோ, கண்துயில், உறக்கம், வீரட்டம், பெருமான், உறையும், திருவதிகை, லல்லதென், வீரட்டத்தைக், னாகிலென், லக்கரை, எய்தவரும், திருவதிகைவீரட்டத்தைக், லெய்தவன், பாய்கெடி, பாய்கின்ற, பொருந்த, கரையில், பொருந்திய, மும்மதில்களை, வில்லிடை, விரையார், உலந்தார், மும்மதி, நீற்றன், சூடும், வாழ்க்கை, கோவணம், திருச்சிற்றம்பலம், திருமுறை, முதல்வரும், விளங்கும், வில்லால், மேருமலையாகிய, வெள்ளிய, திருவதிகைவீரட்டம், கொன்றையும்