முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.024.திருவொற்றியூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.024.திருவொற்றியூர்

5.024.திருவொற்றியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
1305 | ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே ஒற்றி யூர வொருசடை வைத்தவன் ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே. |
5.024.1 |
ஒளி விளங்குகின்ற மதி பாம்பினை ஒற்றி ஊரும்; பாம்பும் அம்மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும்; இவ்வாறு இவை ஒன்றையொன்று ஒற்றி ஊரும்படியாக ஒருசடையில் வைத்த சிவபெருமானுக்குரிய ஒற்றயூரைத் தொழ நம்வினைகள் ஓயும்.
1306 | வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள் ஈட்ட வேயிரு ளாடி யிடுபிணக் காட்டி லோரி கடிக்க எடுத்ததோர் ஓட்டை வெண்தலைக் கையொற்றி யூரரே. |
5.024.2 |
மலையரசன் மகளாகிய உமாதேவியார் தளர்ச்சியாகிய ஒன்று உரைக்க, பேய்க்கணங்கள் நெருங்க நள்ளிருளின்கண் இடுபிணக்காட்டில் ஓரி கடிக்கும்படியாக எடுத்த துளை உடைய வெண்தலையினைக் கையிலே உடையவர் ஒற்றியூர்த் தலத்து இறைவர்.
1307 | கூற்றுத் தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின் ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம் ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே. |
5.024.3 |
கூற்றுவனால் வருந்தண்டமாகிய இறப்புக்கு அஞ்சி, அறத்தின் ஆற்றினால் அனைத்தையும் இயக்கும் சிவ பிரானடியைக் குறிக்கொள்ளுவீராக! திருநீற்றினைப்பூசி வணங்கியெழுந்து நினைக்கின்ற அன்பர்க்கெல்லாம் இனிப்பு ஊறும் கரும்பினை ஒத்து இனிப்பர் ஒற்றியூர்த்தலத்து இறைவர்.
1308 | சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர் மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய் ஒற்றி யூர்புக் குறையு மொருவரே. |
5.024.4 |
மற்றையூர்களிலெல்லாம் சென்று பலி தேர்ந்து பெற்று மீண்டுபோய் ஒற்றியூரிற்புக்கு உறையும் ஒப்பற்றவராகிய இறைவர் பாய்கின்ற புலியினையுரித்த தோலுடையினராய், சுற்றி நிற்கின்ற பேய்கள் சுழலச் சுடுகாட்டின்கண் கையில் எரியினைப் பற்றி ஆடும் இயல்பினர்.
1309 | புற்றில் வாளர வாட்டி யுமையொடு பெற்ற மேறுகந் தேறும் பெருமையான் மற்றை யாரொடு வானவ ருந்தொழ ஒற்றி யூருறை வானோர் கபாலியே. |
5.024.5 |
மற்றையவர்களோடு தேவர்களும் தொழுமாறு ஒற்றியூரில் உறைவானாகிய கபாலம் கைக்கொண்ட இறைவன் புற்றிலுறையும் வாள்போன்று வருத்தந்தரவல்ல பாம்பினை ஆட்டி உமையோடு ஆனேற்றின்மேல் உயர்ந்து ஏறித்தோன்றும் பெருமையை உடையவன்.
1310 | போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர் மாது தாழ்சடை வைத்த மணாளனார் ஓது வேதிய னார்திரு வொற்றியூர் பாத மேத்தப் பறையும்நம் பாவமே. |
5.024.6 |
போதுகளைவிட்டுப் பூத்த புதுமலர்களைக் கொண்டு கங்கையைத் தாழ்சடையின் கண் வைத்த மணாளனாரும், திருவொற்றியூரில் வேதம் ஓதும் வித்தகரும் ஆகிய பெருமானின் திருவடிகளை ஏத்தினால் நம் பாவங்கள் கெடும்.
1311 | பலவும் அன்னங்கள் பன்மலர் மேல்துஞ்சும் கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும் உலவு பைம்பொழில் சூழ்திரு வொற்றியூர் நிலவி னானடி யேயடை நெஞ்சமே. |
5.024.7 |
நெஞ்சமே! அன்னங்கள் பலவும் பலமலர்கள் மேல் தூங்குவதும் கருமை உடைய இருள் விளைத்தலைக் கண்டு பைம்பொழிலை அங்கு உலவும் தோகையுடைய மயில்கள் மேகமெனக் கருதிப் பின் அவையின்மை தெரிந்து வெட்கமுறுதற் சிறப்புடையதுமாகிய திருவொற்றியூரில் விளங்குகின்ற இறைவன் திருவடிகளையே அடைவாயாக!
1312 | ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று ஒன்று போலு முதைத்துக் களைந்தது ஒன்று போலொளி மாமதி சூடிற்று ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே. |
5.024.8 |
உயர்ந்து அவர் ஏறியதும் ஒரு விடையினை; உதைத்துக் களைந்ததும் ஒரு கூற்றுவனை; சூடியதும் ஒளி விளங்கும் ஒரு மதியினை; இவையனைத்தும் ஒன்றுபோல் உகந்தவர் ஒற்றியூர்த்தலத்து இறைவர்.
1313 | படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர் சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் நீற்றினர் உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர் அடையு முள்ளத் தவர்வினை யல்குமே. |
5.024.9 |
பூதப்படை கொண்டவரும், வேதத்தவரும், இனியகீதத்தவரும், சடையிற்கொண்ட கங்கையினரும், சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும், தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும்.
1314 | வரையி னாலுயர் தோளுடை மன்னனை வரையி னார்வலி செற்றவர் வாழ்விடம் திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர் உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே. |
5.024.10 |
மலையென உயர்ந்த தோள்களை உடைய மன்னனான இராவணனை ஒரு சிறு எல்லையில் ஆற்றல் கெடுத்த பெருமான் வாழும் இடம், அலைகள் பக்கங்களிற்சூழ்ந்த திருவொற்றியூர்; அதனை வாக்கினாற் கூறி விளக்கமுறுவோரே உயர்ந்தவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவொற்றியூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இறைவர், வொற்றியூர், பாம்பினை, திருவொற்றியூர், பலவும், திருவொற்றியூரில், சூழ்திரு, பெருமான், நெஞ்சமே, அன்னங்கள், இறைவன், திருச்சிற்றம்பலம், திருமுறை, பாம்பும், விளங்குகின்ற, ஒற்றியூர்த்தலத்து, உயர்ந்து