முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.019.திருக்கடம்பூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.019.திருக்கடம்பூர்
5.019.திருக்கடம்பூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடேசுவரர்.
தேவியார் - சோதிமின்னம்மை.
1254 | தளருங் கோளர வத்தொடு தண்மதி வளருங் கோல வளர்சடை யார்க்கிடம் கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக் களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.019.1 |
தளருகின்ற கொள்ளுதல் தப்பாத பாம்பினோடு, குளிர்ந்த பிறைமதி வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானுக்கு இடம், பேரிசை கிளர்கின்ற கின்னரங்களின் பாட்டு அறாத, கரிய கடம்பு நிறைந்த ஊரில் திருக்கரக் கோயிலே.
1255 | வெலவ லான்புல னைந்தொடு வேதமும் சொலவ லான்சுழ லூந்தடு மாற்றமும் அலவ லான்மனை யார்ந்தமென் தோளியைக் கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.019.2 |
கடம்பூர்த் திருக்கரக் கோயிலின்கண் வீற்றிருக்கும் இறைவன் புலன் ஐந்தினை வெல்ல வல்லமை உடையவன்; வேதமும் சொல்லவல்லவன்; சுழல்கின்ற தடுமாற்றமும் நீக்க வல்லவன்: மனையார்ந்த மங்கையாகிய மென்றோளுடைய உமாதேவியாரைக் கலத்தல் வல்லவன்.
1256 | பொய்தொ ழாது புலியுரி யோன்பணி செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா வைதெ ழாதெழு வாரவ ரௌகநீர் கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே. |
5.019.3 |
உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது புலியின் தோலை உடுத்தோனாகிய சிவபிரான் பணியைச் செய்து, அவ்வாறு எழுவார் பணியினையும் உடன்செய்து கரக்கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும்.
1257 | துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே பண்ணி னால்முனம் பாட லதுசெய்தே எண்ணி லாரெயில் மூன்று மெரித்தமுக் கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.019.4 |
நல்ல எண்ணமில்லாதாரது முப்புரம் எரித்த முக்கண்ணனானது கடம்பூர்க் கரக்கோயிலை, பண்ணினால் திருமுன்பு பாடல் பரவி அச்சமின்றி நெஞ்சமே தொழுவாயாக!
1258 | சுனையுள் நீல மலரன கண்டத்தன் புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக் கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை நினையு முள்ளத் தவர்வினை நீங்குமே. |
5.019.5 |
சுனையுள் பூத்த நீலமலர் போன்ற கண்டத்தனும், புனையும் பொன்னிறக் கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும்.
1259 | குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவ ரன்புடை யாரெலாம் வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும் கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. |
5.019.6 |
அன்புடையாரெலாம் குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவதும், கணங்கள் வணங்கிவான்மலர் கொண்டு வைகலும் அடி போற்றிசைப்பதும் கரக்கோயில் தலத்திலாகும்.
1260 | பண்ணி னார்மறை பல்பல பூசனை மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும் விண்ணி னார்கள் வியக்கப் படுவன கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.019.7 |
திருக்கடம்பூர்க் கரக்கோயில் பண்ணினைப் பொருந்திய மறையோதிப் பல்பூசனைகளை மண்ணினுள்ளார் செய்வதன்றியும் நாள்தோறும் விண்ணினுள்ளாரும் வியக்கப்படும் பூசனைகள் செய்யக்கருதினர்.
1261 | அங்கை ஆரழ லேந்திநின் றாடலன் மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக் கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத் தங்கை யால்தொழு வார்வினை சாயுமே. |
5.019.8 |
உமையம்மை உடனிருந்து மகிழ்ந்து பாட அங்கையில் அழல் ஏந்தி நின்று ஆடல் புரிபவன், ஆய கங்கையுறையும் சடையான் வீற்றிருக்கும் கரக்கோயிலைத் தம்கையால் தொழுவாருடைய வினைகள் வலியற்றுக்கெடும்.
1262 | நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே. |
5.019.9 |
கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல்; என் போன்றார் கடன் பணிசெய்து தற்போதம் இன்றியே இருத்தல்.
1263 | பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் மணங்க மழ்மலர்த் தாமரை யானவன் பிணங்கும் பேராழ லெம்பெரு மாற்கிடம் கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. |
5.019.10 |
பாற்கடலில் கிடக்கும் படம்கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும் மணம் கமழ் மலர்த்தாமரையானாகியபிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த எம்பெருமானுக்கு இடம், கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலாகும்.
1264 | வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே. |
5.019.11 |
திருக்கயிலாயத் திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள்புரிந்த ஈசனார் வீற்றிருக்கும், அலைவீசும் குளிர் புனல் சூழ்கரக்கோயிலைக் கூறும் உள்ளத்தவர் வினைகள் ஓயும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடம்பூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயிலே, வணங்கி, பூர்க்கரக், கணங்கள், வைகலும், வீற்றிருக்கும், திருக்கரக், வினைகள், உள்ளத்தவர், பேசியும், குற்றங்கள், குணங்கள், குங்கரக், ஈசனார், தாங்குதல், கரக்கோயில், தவர்வினை, போற்றிசைக், புனையும், வல்லவன், ழாவெழு, வேதமும், திருச்சிற்றம்பலம், திருமுறை, செய்து, எழுவார், பொன்னிறக், கோயிலை, திருக்கடம்பூர், சுனையுள், நெஞ்சமே, முள்ளத்