முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.047.திருமயிலாப்பூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.047.திருமயிலாப்பூர்
2.047.திருமயிலாப்பூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கபாலீசுவரர்.
தேவியார் - கற்பகவல்லியம்மை.
இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
1971 | மட்டிட்ட
புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.1 |
பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச் சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?
1972 | மைப்பயந்த
வொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.2 |
பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?
1973 | வளைக்கை
மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.3 |
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
1974 | ஊர்திரை
வேலை யுலாவு முயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.4 |
பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?
1975 | மைப்பூசு
மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் நெய்ப்பூசுமொண்புழுக்கனேரிழையார்கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.5 |
பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைத் கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ?
1976 | மடலார்ந்த
தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் அடலானே றூரு மடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.6 |
பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
1977 | மலிவிழா
வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.7 |
பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது முறையோ?
1978 | தண்ணா
வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான் கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான் பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள் கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.8 |
பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண்கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?
1979 | நற்றா
மரைமலர்மே னான்முகனு நாரணனும் முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.9 |
பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?
1980 | உரிஞ்சாய
வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன் பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். |
2.047.10 |
பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சுரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?
1981 | கானமர்
சோலைக் கபாலீச் சரமமர்ந்தான் தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார் வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. |
2.047.11 |
மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமயிலாப்பூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பூம்பாவாய், கபாலீச், போதியோ, முறையோ, காணாதே, காணாது, கபாலீச்சரம், சரமமர்ந்தான், செல்வது, கோயிலில், என்னும், விழாவைக், நிகழும், வாழும், விளங்கும், மடநல்லார், சூழ்ந்த, மயிலையில், பொருந்திய, கொண்டாடும், மயிலாப்பூரில், மாமயிலைக், இளமகளிர், சோலைகள், கடலாட்டுக், சிறந்த, பெருஞ்சாந்தி, பாட்டாகச், கண்டான், நிறைந்த, மூர்த்தி, உறையும், பங்குனி, கண்ணாரக், பெருமானுக்கு, ஐப்பசி, கண்களை, நீற்றான், திருச்சிற்றம்பலம், திருமுறை, அமர்ந்துள்ள, திருமயிலாப்பூர், சோலைக், காட்சியைக், மகளிர், நிகழ்த்தும், ஊர்ந்து