மரபுக் கவிதைகள் - வலவன் ஏவா வான ஊர்தி
- கலைஞர். மு. கருணாநிதி
* "சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற்றிதழ் அலரின் நிறைகண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே,
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே;
புலவர் பாடும் புகழுடையார் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து' எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே."
(புறநானூறு:பாடல்:27 பாடியவர்:உறையூர் முதுகண்ணன் சாத்தனார்)
பொருள் விளக்கம்:
பயந்த=பூத்த. ஒண்கேழ்=ஒளிபொருந்திய நிறம்.
விழுத்திணை=உயர்குடி. மரையிலை=தாமரையிலை.
விசும்பு=ஆகாயம். வலவன்=செலுத்துபவன், ஓட்டுபவன், பாகன்.
திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்=திங்களெனும் புதுமை இயங்குகின்ற உலகம்.
விஞ்ஞானம் வளர்ந்ததாலே விண்ணு‘ர்ந்து; இற்றைநாளில்
வியத்தகு புதுமைகளை விளைக்கின்றார் அறிவுடையார்! - முற்றிலும்
அஞ்ஞானம் நிறைந்த காலமல்ல பழங்காலம்;
அன்றைக்கும் வானத்துக் கோள்களை ஆராய்ந்து
காலமாறுதலைக் கணக்கிட்டு, கோள்களின் சுழற்சிக்
கோலமதைத் தீட்டிக்காட்டி; குமிழ் மின்னல் சிரிப்புக்
கொட்டுகின்ற விண்மீன்கள்; தாங்களிருக்குமிடம்
விட்டுப் பெயர்கின்ற நிலையறிந்து நாழிபார்த்துக் கூறி;
கதிரவனைச் சந்திரனைப் பூமியின் நிழல் சூழ்ந்து - நம்
கண்ணுக்கு ஒருநாள் மறைக்கின்ற "கிரகணம்" வருகின்ற
நாளைக்கூட நமது முன்னோர் வானநூல் இயற்றித்தந்து
வேளைதவறாமல் விரித்துரைத்தார் எனல் வேடிக்கையல்ல!
ஒளிபெற்று வாழ்ந்த நாமோ; திடுமென இருட்டில் வீழ்ந்தோம்!
வெளிநாட்டு விஞ்ஞான வளமோ; விரிந்தது வான் முகட்டில்!
தேய்ந்து வளரும் திங்களை நாம் தெய்வமென்றோம்
தினம் வந்து கடமையாற்றும் சூரியனை தேவனென்றோம்
ஓய்ந்திருக்கும் வேளையிலே உப்பில்லாக் கற்பனையில்
சாய்ந்து சயனித்துக் கிடந்தோமன்றி - முன்னோர்
ஆய்ந்தறிந்து வகுத்திட்ட வானநூற்புதுமைகளை; வறட்சியினால்
காய்ந்த பயிர் ஆக்கிவிட்டு மடமைக் கதைகளிலே மாய்ந்துபோனோம்!
இலக்கியத் தமிழ் இன்பம் பருகுதற்கு முற்பட்டு
இனிய சங்கப் பாடல் ஒன்றில் கண்புதைத்தபோது;
இதயத்தைப் பூரிப்பால் நனைக்கின்ற ஒரு செய்தி! அதனை
எடுத்தெழுதி உம்மையெலாம், "நான் பெற்ற இன்பம்;
பெருக நீவிர்!" என உவகையுடன் அழைக்கின்றேன்.
பெருமை மிகு தமிழகத்தின் பழஞ்சிறப்பு காண வாரீர்!
முடியுடைச் சோழன் நலங்கிள்ளியின் கீர்த்திபாடும்
முதுகண்ணன் சாத்தனார் எனும் உறையூர்ப்புலவர்;
வளர்தலும், தேய்தலும், பிறத்தலும், இறத்தலும்
வாடிக்கையாய்க் கொண்டதிவ் வுலகமென்றும்,
வருந்தி வந்தோர்க்கு வழங்கிடும் வள்ளலாய்
வாழ்வதே மண்ணாளும் அரசுக்கு மாண்பென்றும்
போற்றுவதற்கிடையே பொன்மொழி புகன்று
ஊற்றுப் பெருக்காய் உதவிடுக வறியோர்க்கென்றார்!
மற்றும்
வழிவழியாக இவ்வையகம் தனிலே
வாழ்ந்து மறைந்தோர்; எண்ணிலடங்கார்!
சேற்றில் முளைத்திடும் செந்தாமரையின்
செழிப்புறு இதழ்கள் பலவே ஆயினும்
வேற்றுமை காண இயலா அளவில்
விளங்கும் எழிலைக் காணுதல் எளிது!
சாற்றுவேன் ஒன்று, சரியெனத் தோன்றியதை; இந்த
செகத்தினில் உதித்தோர் பலரில் சிலரே - உண்மைப்
புலவர் பாடிடும் புகழுக்குரியோர் - மற்றும்
பலரோ தாமரையிலை எனப் பொலிவிழந்து போயினர்!
இதழின் அழகுக்கும் இலையின் பயனிலாத் தன்மைக்கும்
இப்படியோர் உவமையைப் பொருத்திய புலவர்;
பாவலர் ஏத்திடும் பாராட்டுக்குரிய மன்னர் - இந்தப்
பாரில் எய்திடும் புகழின் உயர்வைக் காட்டுவார்; கவிதையில்!
அதாவது,
வலவன் எனும் ஓட்டுபவன் இல்லாமலே
வானில் பறந்திடும் ஊர்தியில் செல்லும்
வாய்ப்பினை எய்திடும் வகை கிடைத்தோர்க்கு;
வாழ்வின் உயர்வு - அந்த வானின் உயர்வாம்!
வைரமென ஒளிபொழியும் இப்புறப்பாட்டில்;
"வலவன் ஏவா வான் ஊர்தி" என வருதலாலே
வலவன் ஏவுகின்ற வான ஊர்தியும் அக்காலம்
வழக்கத்தில் இருந்ததெனக் கொள்ளலாம் அன்றோ?
ஆதியிலே அறிவியலில் அக்கறை காட்டியதால்; வான
வீதியிலே வலவரென்போர் ஊர்தியினைச் செலுத்தியிருக்கவும் கூடும்!
பாதியிலே படையெடுத்த பத்தாம்பசலி எண்ணத்தினால்
பகுத்தறிவுக்கு வேலையின்றிப் பாழ்பட்டுப் போனதம்மா இந்த நாடு!
பாவாணர் முதுகண்ணன் சாத்தனார், சோழனைப்
பாராட்டி எடுத்து வைத்த அறிவுரையில் - என்
பார்வையினை இந்தச் செய்தி ஈர்த்ததினால் - நீவிரும்
படித்தாய்ந்து உரைத்திடுக எனப் படைத்திட்டேன்;
பிழையெனில் திருத்திடுவீர்! ஏற்றுக்கொள்வேன்!
( நன்றி: சங்கத் தமிழ் )
தேடல் தொடர்பான தகவல்கள்:
வலவன் ஏவா வான ஊர்தி - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - ", வலவன், உண்மையும், சாத்தனார், முதுகண்ணன், ஆயினும், புலவர்