விஷ மந்திரம்
1
"பக்திமான்" என்றால் எங்கள் ஊர் போஸ்டு
மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம்.
வீட்டுக்கூடத்தில் அழகியதொரு சிறு மண்டபம் கட்டி, அதில் கண்ணபிரான் படத்தை
ஸ்தாபித்திருந்தார். தினந்தோறும் மாலையானதும், அவர் மனைவி படங்களை மலர்
மாலைகளால் அலங்கரித்துத் திருவிளக்கேற்றி வைப்பாள். போஸ்டுமாஸ்டர் தம்புராவில்
சுருதி கூட்டிக் கொண்டு ராமஜெபம் செய்வார். சனிக்கிழமை ஏகாதசி தினங்களில்
பஜனை நடைபெறும். சுண்டல், வடை, பாயசம் - குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்!
நாராயண ஐயருக்கு சொந்தத்தில் குழந்தைகள் இல்லை. ஆனால் ஊரிலுள்ள குழந்தைகள் எல்லாம் அவருடைய குழந்தைகள் போல்தான். இத்தனைக்கும் உபாத்தியார்! 'ஸார்' என்றால் பிள்ளைகளெல்லாம் உயிரை விடுவார்கள். பயத்தினாலன்று; பிரியத்தினால். அவருடைய மாணாக்கர்களுக்கு இராமாயணம், மகாபாரதம், பாகவதம் இவற்றிலுள்ள கதைகள் ஒன்று விடாமல் தெரியும். தாயுமானவர் பாடலில் மூன்று பாடல் நெட்டுருவாய் ஒப்புவிக்கும் மாணாக்கனுக்குக் கற்கண்டு வாங்கித் தருவதாகச் சொல்வார். ஒருவரும் ஒப்புவியாவிட்டால் கற்கண்டை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விடுவார்!
மார்கழி மாதம் வரப்போகிறதென்று நாராயண ஐயர் மனைவி புரட்டாசி மாதத்திலிருந்தே சாமான்கள் சேகரித்து வைப்பாள். அம்மாதத்தில் தினந்தோறும் வைகறையில் சிறுவர்கள் பஜனை செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். ஊர்வலம் போஸ்ட்மாஸ்டர் வீட்டில் வந்து முடியும். பின்னர் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கள் வகையறாக்கள் குழந்தைகள் உண்டு ஆனந்திப்பதைக் கண்டு கணவனும் மனைவியும் பெருமகிழ்ச்சி எய்துவார்கள்.
நான் அவருடைய பழைய மாணாக்கனாதலால், அவரைப் பற்றி மிகைப்படப் புகழ்ந்து கூறுகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். எங்கள் ஊருக்குச் சுற்றுப்புறம் ஐந்நூறு மைல் தூரத்திற்குச் சென்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் ஒரு முகமாய் என்னை ஆதரித்துச் சாட்சி சொல்லுவார்கள். அப்பக்கத்தில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு, மரியாதை.
அவருடைய செல்வாக்குக் காரணம் செல்வமன்று. அவருக்குப் பொருட் செல்வம் அவ்வளவு இல்லை. மற்று, அவருடைய தூய ஒழுக்கமும், தெய்வபக்தியுமே முக்கிய காரணங்களாகும். இத்துடன் அவருக்கு விஷக்கடி மந்திரத்தில் விசேஷ தேர்ச்சியுண்டு. அவரிடம் ஜனங்கள் விசுவாசம் கொண்டிருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். பகலிலும், இரவிலும், எந்த நிமிஷத்திலும், பாம்புக்கடி என்று வந்தால் அவர் சிறிதும் தயங்குவதில்லை. தலைவலியையும், மலைச்சுரத்தையும் பொருட்படுத்தாமல் அவர் உடனே தலை முழுகி ஈரத்துணியுடன் மந்திரஞ் செய்யத் தொடங்குவார். மூர்ச்சையாகி வந்தவர்கள் விஷம் இறங்கப் பெற்று தெளிவடைந்து 'தபால் ஐயரை' வாழ்த்திக் கொண்டு செல்வார்கள். ஆனால் ஐயரோ இரண்டு மூன்று தினங்கள் பொறுக்க முடியாத தலையிடி உபத்திரவத்தினால் வருந்திக் கொண்டிருப்பார்.
நாராயண ஐயருக்குக் காந்தியடிகளிடம் பக்தி அதிகம் உண்டு. அவர் தேச பக்தருங்கூட. வங்காளப் பிரிவினைக் காலத்திலிருந்து சுதேசி விரதம் அனுஷ்டித்து வருபவர். ஆனால், மகாத்மா காந்தியின் திட்டங்களுள் 'தீண்டாமை விலக்கு' மட்டும் அவருக்கு விலக்கு. எனக்கும் போஸ்டு மாஸ்டருக்கும் இது சம்பந்தமாய் நடந்த விவாதங்களுக்கு எல்லையில்லை. அவற்றை இங்கு எழுதுவதனால், கந்தபுராணமாக - முருகனடியார் மன்னிக்க - விரிந்து விடும். அவருடைய அம்பறாத் தூணியில் எல்லா பாணங்களும் விட்டான பிறகு கடைசியாக அவர் பிரயோகிக்கும் பாணம் இதுவே:-
"எல்லாம் சரி! நான் உனக்குப் பிரத்தியக்ஷமாகக் காட்டுகிறேன். கொடிய விஷ சர்ப்பம் தீண்டியவன் ஒருவன் இங்கு வரட்டும். மூன்றாவது மூர்ச்சை போட்டவனாகவே இருக்கட்டும். இதோ மந்திரம் செய்து விஷம் இறங்கச் செய்கிறேன் பார்! நீயே பலமுறை இந்த மந்திர சக்தியைப் பார்த்திருக்கிறாய். ஆனால், ஸ்நானம் செய்த பின்னர் ஒரு பறையனுடைய காற்று மட்டும் என்பேரில் பட்டுவிடட்டும், அப்போது மந்திரம் பலிப்பதில்லையே! விஷம் இறங்குவதில்லையே! இதற்கென்ன சொல்கிறாய்?"
அவருடைய இந்தப் பாசுபதாஸ்தரத்தை வெல்வதற்குத் தகுந்த அஸ்திரம் என்னிடம் வேறு எதுவும் இல்லை. ஆகவே, எங்களுடைய வாதங்களை எவரேனும் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் பக்கமே முடிவாகத் தீர்ப்புச் சொல்லி விடுவது வழக்கமாயிருந்தது.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ மந்திரம் - Visha Manthiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவருடைய, அவர், குழந்தைகள், விஷம், அவருக்கு, நாராயண, கொண்டு, இல்லை