சாரதையின் தந்திரம்
4
அடுத்த சனிக்கிழமை காலை, ஸ்ரீமான்நாராயணன்
பி.ஏ. (ஆனர்ஸ்) தன் வீட்டின் முன்புறத்திலிருந்த ஹாலில் சாய்மான நாற்காலியொன்றில்
சாய்ந்து கொண்டிருந்தான். நமது கதாநாயகன், பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்று
அரசாங்க உத்தியோகத்தில் ரூ.150 சம்பாதிப்பவனாயினும், கதை ஆசிரியனுக்குள்ள
உரிமையால் அவனை, ஏக வசனத்திலேயே அழைக்கின்றோம். கையிலிருந்த ஆங்கில மாதாந்திர
சஞ்சிகையொன்றில் அவன் கருத்துச் சென்றிருந்தது. பந்தயக் குதிரையோட்டியொருவன்,
எப்படி ஒரு கோடீசுவரன் புதல்வியால் காதலிக்கப்பட்டுப் பல இடையூறுகளுக்குள்ளாகி,
கடைசியில் அவளை மணம் புரிந்தான் என்று கூறும் ஒரு சிறு கதையை அவன் படித்துக்
கொண்டிருந்தான். நாற்காலிச் சட்டத்தின் மீது ஆங்கில தினசரிப் பத்திரிகையும்,
ஒரு சிறு புத்தகமும் கிடந்தன. பத்திரிகையில் பந்தயங்களையும் மற்றும்
விளையாட்டுகளையும் பற்றிய விவரங்கள் உள்ள பக்கம் மேலே காணப்பட்டது. புத்தகம்
கிண்டி குதிரைப் பந்தயத்தில் போட்டியிடப்போகும் பற்பல குதிரைகளைப் பற்றிய
விவரங்கள் அடங்கியது. நாராயணனது முழுக் கவனத்தையும் அக்கதை கவர்ந்ததாகத்
தெரியவில்லை. அடிக்கடி சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை ஏறிட்டு
பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்தரை ஆனதும், சஞ்சிகையை மூடி வைத்துவிட்டு
"லக்ஷ்மி, சமையல் ஆகவில்லையா இன்னும்?" என்று உரத்த குரலில் கேட்டான்.
"ஆகிவிட்டது, வாருங்கள்."
இச்சமயத்தில் "ஸார், தபால்!" என்று கூறிக் கொண்டு தபால்காரன் வந்தான். நாராயணன் எழுந்து சென்று கடிதத்தை வாங்கி உறையை உடைத்து உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தான். அவன் கண்களிலே அப்போது தோன்றிய அசட்டுப் பார்வை கடிதத்தின் பொருள் அவனுக்கு விளங்கவில்லையென்று காட்டிற்று. கைக்குட்டையை எடுத்துக் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு, மற்றொரு முறை படித்தான். அக்கடிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
பிரியமுள்ள ஐயா,
ஆலகால விஷத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே
என்ற பாட்டைத் தங்கள் சிந்தையிற் பதித்தல் நலம்.
"ஏன் சாப்பிட வரவில்லை?" என்று குயிலோசையினும்
இனிய குரலில் கேட்டுக் கொண்டு வந்தாள் லக்ஷ்மி.ஆலகால விஷத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே
என்ற பாட்டைத் தங்கள் சிந்தையிற் பதித்தல் நலம்.
தங்கள் நன்மையை விரும்பும்
நண்பன்.
நண்பன்.
"ஏதோ கடிதம் வந்திருக்கிறது போலிருக்கிறதே. எங்கிருந்து வந்தது? விசேஷம் ஏதேனும் உண்டோ ?"
"விசேஷம் ஒன்றையுங் காணோம்" என்று சொல்லி நாராயணன் கடிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு சாப்பிட எழுந்து சென்றான்.
அன்று நாராயணன் சாப்பிடும் போது, அதிசயமான ஒரு காரியம் செய்தான். லக்ஷ்மி உணவு பரிமாறுகையில், அவள் தன்னைப் பாராத சமயம் பார்த்து, திரும்பத் திரும்பச் சுமார் இருபது முறை அவளை உற்று உற்றுப் பார்த்தான். இன்னதென்று தெளிவாக விளங்காத பலவகை ஐயங்கள் அவன் உள்ளத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. சட்டென்று அவனுக்கு ஒன்று நினைவு வந்தது. லக்ஷ்மியின் நடத்தையில் சென்ற ஒரு வாரமாக ஒருவகை மாறுதல் இருப்பதாக அவனுக்குத் தோன்றிற்று. வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே இந்தச் சில தினங்களாய் அவள் தன்னிடம் அன்பு காட்டி வருவதாக நினைத்தான். இம்மாறுதலுக்குக் காரணம் என்ன? - இதற்கு விடை கூறிக்கொள்ள அவனுக்கே அச்சமாயிருந்தது.
சாப்பிட்ட பின்னர், நாராயணன் மீண்டும் வந்து நாற்காலியில் சாய்ந்து கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான். கிண்டிக்குப் போகும் முதல் ஸ்பெஷலைப் பிடிக்க வேண்டுமானால் உடனே கிளம்ப வேண்டும். அடுத்த ஸ்பெஷலுக்குத்தான் போவோமே என்று எண்ணிக் கொண்டு அந்தக் கடிதத்தை இன்னொரு முறை எடுத்துப் படித்தான். அதை யார் எழுதியிருக்கக்கூடும்? அந்த எழுத்து? - எங்கேயோ பார்த்தது போலத் தோன்றிற்று. தலையை இரு கரங்களாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு யோசித்தான். பயனில்லை.
இதற்குள் மணி 12.30 ஆகிவிட்டது. இன்று ஒரு நாள் போகாவிட்டால் என்ன?...சை! "இந்தப் பைத்தியக்காரக் கடிதத்துக்காகவா போகாமலிருந்து விடுவது? நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?..." உடனே எழுந்து உடுப்புகளைத் தரித்துக்கொண்டு விரைந்து சென்றான்.
கடைசி ஸ்பெஷல்தான் கிடைத்தது. வழக்கம் போல் நண்பர்கள் முதல் ஸ்பெஷலில் போயிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் அவர்களைக் கண்டு பிடிப்பதெப்படி? அன்று அவர்களைக் கண்டுபிடிக்க அவன் அவ்வளவு ஆவல் கொள்ளவுமில்லை.
அதிசயங்களிலெல்லாம் அதிசயம், அன்று நாராயணன் ஒரு பைசாகூடப் பந்தயம் வைக்கவில்லை! உண்மையில் அவன் மனம் பந்தயத்தில் செல்லவேயில்லை. லக்ஷ்மியின் அதிகப்படியான அன்பு - அக் கடிதம் - அதிலுள்ள எழுத்து - இவைகளிலேயே அவன் சிந்தை உழன்று கொண்டிருந்தது.
பந்தயம் முடிந்து, எல்லோரும் திரும்பிய போது, நாராயணனும் புறப்பட்டான். வண்டியில் நண்பர்களை சந்தித்தான். "ஓ! மிஸ்டர் நாராயணன்! உம்மைத் தேடித் தேடிப் பார்த்தோமே! எந்த ஸ்பெஷலில் வந்தீர்?" என்று ஒருவர் கேட்டார்.
"கடிகாரத்தின் தவறு. முதல் ஸ்பெஷல் புறப்பட்டு இரண்டு நிமிஷங் கழித்து வந்தேன்."
"ஓ! ஏதோ நேரிட்டு விட்டதென்று பயந்தோம். ஆனால், முகம் ஏன் வாட்டமுற்றிருக்கிறது? ஏதேனும் பணம் தொலைந்து போயிற்றா?"
அப்பொழுதுதான் நாராயணனுக்குத் தன் சட்டைப் பையிலிருந்த சில்லரையைத் தவிர வேறு பணம் கொண்டு வரவில்லையென்று நினைவு வந்தது. ஆயினும் நமது கதாநாயகன் - எழுத வெட்கமாயிருக்கிறது - மீண்டும் ஒரு பெரும் பொய் சொன்னான். "ஆம், ஸார், இருநூறு ரூபாய்."
"கவலைப்படாதேயும். அடுத்த வாரம் அதிர்ஷ்டம் அடிக்கலாம்" என்றார் அந்த 'அழகான' நண்பர்களில் ஒருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாரதையின் தந்திரம் - Saradhaiyin Thandhiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, அவன், நாராயணன், வந்தது, அன்று, என்ன, முறை, படித்தான், கொண்டிருந்தான், அடுத்த, எழுந்து, லக்ஷ்மி