ஒன்பது குழி நிலம்
5
நாட்டாற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்
தோடியது. இரு கரையிலும் மரங்களடர்ந்ததனால், நீரின் மேல் இருண்ட நிழல்
படிந்திருந்தது. ஆங்காங்கு ஒவ்வோர் ஒளிக்கிரணம், இலைகளினூடே நுழைந்து
தண்ணீரை எட்டிப் பார்த்தது. சீனிவாசம் பிள்ளை ஒரு கரையில் உட்கார்ந்து
பல் துலக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் முன்னால் எதிர்க்கரை
ஓரத்தில் நீரில் ஓரு சேலையின் தலைப்பு மிதப்பதைக் கண்டார் - ஒரு பெண்ணுருவம்!
சீனிவாசம் பிள்ளை நன்றாக உற்றுப் பார்த்தார். நீலவானத்தில் மெல்லிய மேகத்
திரையால் மறைக்கப்பட்ட களங்கமற்ற முழுமதியை போன்று அந்நீல நீர்ப்பெருக்கில்
அலைகளால் சிறிதளவே மறைந்து திகழ்ந்த அவ்வழகிய வதனம் யாருடையது? நுனியில்
சிறிது வளைந்துள்ள அந்த மூக்கு, அவ்வழகிய செவ்விதழ்கள், திருத்தமாக அமைந்த
அந்த முகவாய்க்கட்டை, நீண்டு வளர்ந்து அலையில் புரளும் கரிய கூந்தல்
- ஆ! அவருடைய உறவினர் - இல்லை - பகைவர் சோமசுந்தரம் பிள்ளையின் அருமை
புதல்வி நீலாம்பிகையே அவள். ஒரு வினாடிக்குள் சீனிவாசம் பிள்ளையின் மனதில்
ஆயிரம் எண்ணங்கள் சுழன்றன. உயிரினும் அருமையாக வைத்துப் போற்றி வளர்த்து
வரும் ஒரே பெண் இறந்தொழிந்தால் சோமசுந்தரம் பிள்ளையின் கர்வம் அடங்கி
விடுமல்லவா? தாம் பேசாமல் போய் விட்டாலென்ன? ஆனால், அடுத்த கணத்தில்,
அவர் சோமசுந்தரம் பிள்ளையையும், அவரிடம் தமக்குள்ள பகையையும், ஒன்பது
குழி நிலத்தையும், ஒன்பதாயிரம் ரூபாய் நஷ்டத்தையும் முற்றிலும் மறந்தார்.
குழந்தை நீலாம்பிகை ஆற்றில் போகிறாளென்னும் ஒரு நினைவே அவர் உள்ளத்தில்
எஞ்சி நின்றது. அவரையும் அக்குழந்தையையும் பிணைத்த இரத்த பாசத்தினால்
இழுக்கப்பட்டவராய், அவர் திடீரெனத் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்று
நீலாம்பிகையைக் கொண்டு வந்து கரை சேர்த்தார்.
ஆனால், அதன் பின்னர் என்ன செய்வதென்று அவருக்குத் தோன்றவில்லை. உணர்ச்சியற்றுக் கிடந்த உடலில் உயிர் தளிர்க்கச் செய்வதெப்படி? அப்படியே தூக்கிக் கொண்டு தமது வீடு சேர்ந்தார். அவர் புதல்வன் சுப்பிரமணியன், உள்ள நிலைமையை ஒரு கணத்தில் குறிப்பாக உணர்ந்தான். சாரணர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றவனாதலால், இவ்வித அபாய காலங்களில் செய்ய வேண்டிய ஆரம்ப சிகிட்சைகளைச் செவ்வையாகக் கற்றிருந்தான். நீலாம்பிகை மீண்டும் உணர்வு பெற்றபோது தான் வேறொருவர் வீட்டில் கட்டிலின் மீது விரிக்கப்பட்ட மெத்தையின் மேல் கிடத்தப் பட்டிருப்பதைக் கண்டாள். அவளுடைய கண்கள், குனிந்த வண்ணம் அவளுக்கு எப்பொழுது உணர்வு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியனுடைய கண்களைச் சந்தித்தன.
நீலாம்பிகையுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் ஓட்டமாக ஓடி, சோமசுந்தரம் பிள்ளை வீட்டுக்குச் சென்று அவர்கள் வீட்டுப் பெண் சுழலில் அகப்பட்டு ஆற்றோடு போய் விட்டதாக தெரிவித்தார்கள். சோமசுந்தரம்பிள்ளையும் அவர் மனைவியும் மற்றுமுள்ளவர்களும் அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால் அவர்கள் சிறிது தூரம் வருவதற்குள் சீனிவாசம் பிள்ளை அனுப்பிய ஆள் அவர்களைச் சந்தித்து, நீலாம்பிகை சீனிவாசம் பிள்ளையினால் காப்பாற்றப்பட்டு அவருடைய வீட்டில் சுகமாக இருப்பதாகத் தெரிவித்தான். அதன்மேல் சோமசுந்தரம் பிள்ளை முதலியவர்கள் சிறிது மன ஆறுதல் பெற்றுச் சீனிவாசம் பிள்ளையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். குழந்தை நீலாம்பிகையை பார்த்துச் சிறிது துக்கம் தணிந்த பின்னர், சீனிவாசம் பிள்ளையும் சோமசுந்தரம் பிள்ளையும் முகமன் கூறிக் கொண்டார்கள். எல்லோரும் அன்று சீனிவாசம் பிள்ளை வீட்டிலேயே உணவருந்தினார்கள்.
பழைய உறவினரும் இடையில் பகைவர்களாயிருந்து பின்னர் சேர்ந்தவர்களுமான அவ்விரு குடும்பத்தாருக்கும் விரைவிலேயே புதிய நெருங்கிய உறவு என்ன ஏற்பட்டதென்று வாசகர்களுக்கு நாம் சொல்லவும் வேண்டுமோ?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்பது குழி நிலம் - Onbathu Kuli Nilam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சீனிவாசம், அவர், சோமசுந்தரம், பிள்ளை, சிறிது, பிள்ளையின், பின்னர், கொண்டு, நீலாம்பிகை