நாடகக்காரி
1
சென்ற ஆண்டில் சோழ நாட்டில் கடும் புயலுடன்
சேர்ந்து வந்த பெருமழையைப் பற்றி நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சிலர்
அதைக் 'கடவுளின் கருணை மழை' என்றார்கள். வேறு சிலர், "இப்படிப் பயங்கரமான
புயலில் ஏறிக் கொண்டுதானா வர வேண்டும்? இனிய செந்தமிழையொத்த மெல்லிய
தென்றல் காற்றிலே மிதந்து வரக் கூடாதா?" என்றார்கள். அவரவர்களுக்கு நேர்ந்த
சௌகரிய - அசௌகரியங்களைப் பொறுத்து எதையும் முடிவு செய்வது தான் மானிட
இயற்கை. எனக்கு அச்சமயம் கடவுளின் கருணையின் பேரில் வந்த கோபம் இவ்வளவு
அவ்வளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில், அக்கருணையின் காரணமாக நான் நள்ளிரவில்
மாயவரத்துக்கும் சீர்காழிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும்படி
நேர்ந்தது.
கதையோ, கட்டுரையோ, விறுவிறுப்பாக ஓட வேண்டும் என்றால் அதை ரெயிலிலே ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இந்தக் கதை என்னமோ ரெயிலிலேதான் ஆரம்பமாகிறது. அதிலும் ஸிலோன் போட் மெயிலில் ஆரம்பமாகிறது. ஆனாலும் என்ன பயன்? அதிவிரைவாகச் செல்ல வேண்டிய அந்த ரெயில் சீர்காழிக்கும் வைத்தீசுவரன் கோயிலுக்கும் நடுவில் சுமார் மூன்று மணி நேரம் ஸ்தம்பித்து நின்று விட்டது.
'ஸ்தம்பித்து நின்றது' என்றா சொன்னேன்? அர்த்தமில்லாத வழக்கச் சொற்கள் அப்படியாக நம்மை அடிமைப்படுத்தி விடுகின்றன. நான் ஏறியிருந்த போட் மெயில் முன்னாலும் போகாமல் பின்னாலும் போகாமல் நின்றதே தவிர ஸ்தம்பித்து நிற்கவில்லை. மணிக்கு என்பது மைல் வேகத்தில் அடித்த புயற்காற்று அதைத் தாக்கிக் கொண்டிருக்கும் போது ரெயில் எப்படி ஸ்தம்பித்து நிற்க முடியும்? பூமிக்குள்ளே நெடுந்தூரம் வேர் விட்டு நிலை பெற்றிருந்த பெரிய பெரிய மரங்கள் எல்லாம் தடால் தடால் என்று கீழே விழுந்து கொண்டிருந்த போது ரெயில் மட்டும் எப்படி அசையாமல் இருக்க முடியும்? ரெயில் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டுதான் இருந்தது. ரெயிலுக்குள் இருந்தவர்களின் உயிர்களும் ஊசலாடிக் கொண்டிருந்தன. இப்படி மூன்று யுகம் போலக்கழிந்த மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரெயில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது. மிக மிக மெதுவாக ஊர்ந்து சென்று காலை ஐந்து மணிக்கு மாயவரம் ரெயில் நிலையத்தை அடைந்தது.
சீர்காழிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் ரெயில் பாதை மிகவும் சேதமாகி விட்டபடியால், இனி மூன்று நாள் அந்தப் பக்கம் ரெயில் போவதற்கில்லையென்றும், சென்னைக்குப் போகிறவர்கள் திருச்சிக்குத் திரும்பிப் போய் அங்கிருந்து விருத்தாசலம் வழியாகப் போக வேண்டும் என்றும் மாயவரத்தில் சொன்னார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட மனச் சோர்வுக்கு அளவில்லை. ஆண்டவன் கருணை இப்படியா நம்மைச் சோதிக்க வேண்டும் என்று கிலேசப்பட்டுக் கொண்டு திருச்சிக்குத் திரும்பிப்போன முதல் ரெயிலில் ஏறினேன்.
அற்ப அறிவு படைத்தவர்களாகிய மானிடர்கள் நன்மை என்று குதூகலிக்கிற காரியங்கள் பெருந் தீமையாக முடிகின்றன. அவர்கள் தீமை என்று நினைத்து வருந்தும் காரியங்களிலிருந்து எதிர்பாராத நன்மைகள் விளைகின்றன. ஏற்கனவே பலமுறை இந்த உண்மையை வாழ்க்கை அநுபவத்தில் கண்டிருந்தும் அச்சமயத்தில் மறந்து போனேன். ஐயம்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தபோதுதான் இருள் நீங்கி ஒளி உண்டாயிற்று. ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளையும் அவருடைய தவுல் வாத்தியமும் என் வண்டியில் ஏறி அமர்ந்ததும், அவருடைய தவுல் வாத்தியத்தின் இடி முழக்க நாதத்தைப் போலவே, இறைவன் கருணையின் உண்மை இயல்பு என் உள்ளத்தில் வெடித்துக் கொண்டு உதயமாயிற்று.
"வருக! வருக! அகில பூமண்டல தவுல் வாத்திய ஏக சக்ராதிபதியே! வருக!" என்று முகமன் கூறிக் கந்தப்பப் பிள்ளையை வரவேற்றேன்.
'திருவழுந்தூர்ச் சிவக்கொழுந்து', 'வீணை பவானி' போன்ற அருமையான கதைகளைச் சொன்னவரை இம்மாதிரிச் சந்தர்ப்பத்தில் பார்த்தால், உற்சாகம் பீறிக் கொண்டு கிளம்புவதற்குக் கேட்பானேன்!-ரெயிலும் உற்சாகமாக ஊதிக் கொண்டு கிளம்பியது.
ஐயம்பேட்டை கந்தப்பனும் சென்னைக்குத்தான் வருகிறார் என்று அறிந்ததும் என் மனச் சோர்வெல்லாம் பறந்துவிட்டது. நான் சீர்காழி வரையில் போய்த்திண்டாடிவிட்டுத் திரும்பியதைப் பற்றிச் சொன்னேன். அவர் புயலினால் அந்தப் பக்கத்தில் விளைந்த சேதங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு,
"இன்னல் கூட்டி இன்பம்
ஊட்டி
இந்திர ஜால வித்தை காட்டி"
என்று முனகும் குரலில் பாடி நிரவல் செய்யத் தொடங்கினார். திடீரென்று
நிரவலை நிறுத்தி, "ஆமாம்; ஆண்டவனுக்கு இதெல்லாம் இந்திர ஜால வித்தை;
அநுபவிக்கிற நமக்கோ சொல்லமுடியாத அவஸ்தை!" என்று சொன்னார்.இந்திர ஜால வித்தை காட்டி"
ஏதோ ஒரு கதையை மனதில் வைத்துக் கொண்டு தான் அவர் இப்படிப் பேசுகிறார் என்று ஊகித்துக் கொண்டேன். (ஐயம்பேட்டை கந்தப்பன் தம் வாழ்க்கையில் கண்டு கேட்ட வரலாற்றைத்தான் சொல்லுவார். ஆனால் அந்த வரலாறு கதையைக் காட்டிலும் அதிசயமாக இருப்பது வழக்கம். அதனாலேயே கதை என்று குறிப்பிடுகிறேன்.)
அவருடைய மனதில் உள்ளதை எப்படி வெளியே கொண்டு வருவது என்று யோசித்தேன்.
"பிள்ளைவாள்! நீங்கள் முன்னொரு தடவை சொன்ன 'வீணை பவானி' கதையை ரேடியோவில் நாடகமாகப் போட்டார்களே கேட்டீர்களா?" என்றேன்.
"உலக வாழ்க்கையே நாடகம். அதிலே சிலர் அரங்க மேடையில் ஏறி நாடகம் ஆடுகிறார்கள். அப்படி ஆடும் நாடகக்காரர்கள் - நாடகக்காரிகள் வாழ்க்கையிலும் எத்தனையோ நாடகங்கள்!" என்றார் கந்தப்பன்.
"எத்தனையோ நாடகக்காரர்கள் நாடகக்காரிகளை உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்றேன்.
"பாலாமணி என்ற பிரசித்தமான நாடகக்காரியைப் பற்றி ஐயா கேள்விப்பட்டிருக்குமே?" என்றார் கந்தப்ப பிள்ளை.
"கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் பார்த்ததில்லை."
"ஆனால் சின்ன பாலாமணி என்று கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்!"
"கேள்விப் பட்டதில்லை. அப்படி ஒரு நாடகக்காரி இருந்தாளா, என்ன?"
"ஆமாம்; இரண்டு வருஷம் மிகப் பிரசித்தியாக இருந்தாள். பிறகு தெய்வத்துக்கே பொறுக்காமல் போய்விட்டது! ஆனால் தெய்வத்தைச் சொல்லி என்ன பயன்? மனிதர்களுடைய அறிவீனத்துக்குத் தெய்வம் என்ன செய்யும்?"
"மனிதர்களை ஏன் இவ்வளவு மூடர்களாகவும் துஷ்டர்களாகவும் கடவுள் படைக்கிறார் என்று அவர் பேரில் குற்றம் சொல்லலாம் அல்லவா? - அது போகட்டும். யாரோ சின்ன பாலாமணி என்கிறீர்களே? அது யார்? உங்களுக்குத் தெரியுமா?"
"ஏழு வயது முதல் எடுத்து வளர்த்தவன் ஆயிற்றே? எனக்குத் தெரியாமல் எப்படியிருக்கும்?" என்றார் கந்தப்பப் பிள்ளை.
இன்னும் சில கேள்விகள் அவரைக் கேட்டுத் தூண்டிய பிறகு கந்தப்பன் கதையைக் கூறலானார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகக்காரி - Naadagakkaari - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரெயில், கொண்டு, வேண்டும், மூன்று, பிறகு, ஐயம்பேட்டை, ஸ்தம்பித்து, என்ன, பாலாமணி, வருக, என்றார், அவர், கந்தப்பன், தவுல், எப்படி, சீர்காழிக்கும், நான், நடுவில், சிலர், கந்தப்பப், அவருடைய