கேதாரியின் தாயார்
5
காலம் எப்படியோ சென்றது. நானும் மலையைக்
கல்லி எலியைப் பிடித்தது போல பி.ஏ. பாஸ் செய்து, நான் படித்த பள்ளிக்கூடத்திலேயே
உபாத்தியாயர் ஆனேன். கேதாரி சீமையிலிருந்து திரும்பி வரும் காலம் சமீபித்தது.
எதிர்பார்த்தது போலவே அவன் மிகச் சிறப்புடன் ஐ.ஸி.எஸ். தேறினான். அவனுடைய தகப்பனாருடைய மரணத்தைப் பற்றியும், மற்ற விவரங்களைப் பற்றியும் அவனைத் திடுக்கிடச் செய்யாத விதத்தில் கடிதம் எழுதி, அது பம்பாயில் அவன் கையில் கிடைக்கும்படி அனுப்பியிருந்தோம். ஆனால் அவனுக்கிருந்த அவசரத்தில், கப்பலிலிருந்து நேரே ரயிலுக்கு வந்து விட்டானாதலால், மேற்படி கடிதம் அவன் கையில் சேரவில்லையென்று பின்னால் தெரிய வந்தது.
அவன் வரும் விவரம் தந்தியில் தெரிவித்திருந்தானாதலால் வீட்டு வாசலில் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தேன். என் கழுத்தைக் கட்டியவண்ணமாய் இழுத்துக் கொண்டு அவசரமாய் உள்ளே போனான். தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த அம்மாமியின் மேல் அவன் பார்வை விழவில்லையோ, அல்லது விழுந்தும் அடையாளம் தெரியவில்லையோ, நான் அறியேன். அவன் பாட்டுக்கு "அம்மா! அம்மா!' என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.
அம்மாமியின் கண்களில் கண்ணீர் வந்ததை முதன் முதலாக அப்போதுதான் நான் பார்த்தேன்.
"அடே கேதாரி! என்னடா இது? அம்மா இதோ இருக்கிறாள்; எங்கேயோ தேடிக் கொண்டு போகிறாயே!" என்றேன்.
கேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப்புடவை அணிந்து மொட்டைத் தலையை முக்காடால் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த பாகீரதி அம்மாமியை உற்றுப் பார்த்தான்.
"ஐயோ! அம்மா!..." என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டுவிட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்தான். தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டான்.
*****
கேதாரிக்கு கடுமையான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. திருச்சிராப்பள்ளியில் அவனை வந்து பார்க்காத டாக்டர் இல்லை; அவனுக்குச் செய்யாத சிகிச்சை பாக்கி கிடையாது. ஒன்றும் பயன்படவில்லை.
அவனுடைய உடம்பு கொதித்துக் கொண்டிருந்ததைப் போல் உள்ளமும் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரே நினைவு, ஒரே ஞாபகந்தான். நான் தனியாய் அவனுடன் இருக்க நேர்ந்து விட்டால் போதும்; உடனே ஆரம்பித்து விடுவான்.
"சங்கரா! அது என்ன சாஸ்திரமடா அது? அநாதையாய் விட்டுப் போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன் செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம்! அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம்!" என்பான்.
"இதோ பார், சங்கர்! என் தாயார் ரொம்ப புத்திசாலி, இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு நாளும் உட்பட்டிருக்க மாட்டாள். எல்லாம் என்னால் வந்ததுதான். நான் பெரிய இடத்தில் - வைதிகக் குடுக்கைகளின் வீட்டில் - கலியாணம் செய்து கொண்டேன் அல்லவா? அவர்களுடைய ஏச்சுக்குப் பயந்துதான் அம்மா இதர்குச் சம்மதித்திருக்க வேண்டும்" என்பான்.
ஒரு நாள் வாசலில் இரண்டு கூலி வேலைக்காரர்கள் பேசிக் கொண்டு போனார்கள். ஒருவன், "அண்ணே! இன்று காலை புறப்படும் போது ஒரு மொட்டைப் பாப்பாத்தி எதிரில் வந்தாள். அது தான் வேலை அகப்படவில்லை" என்று சொன்னது கேதாரியின் காதில் விழுந்துவிட்டது.
"சங்கர்! கேட்டாயா? என் தாயாரின் முகத்தில் விழித்தால் சகல பீடைகளும் நீங்குமென்று சொல்வார்களடா! இப்போது அவளும் அபசகுனந்தானே?" என்று புலம்பினான்.
எவ்வளவோ சமாதானம் சொல்லித் தேற்றினேன். ஆனாலும் அவன் அந்தப் பேச்சை மட்டும் விடுவதில்லை.
"இதைக் கேள், சங்கர்! உத்தியோகமும் ஆயிற்று. மண்ணும் ஆயிற்று. நான் மட்டும் பிழைத்து எழுந்தேனானால் ஒரே ஒரு காரியந்தான் செய்யப் போகிறேன். பிராமண ஸ்திரீகள், புருஷனை இழந்தால் தலையை மொட்டையடிக்கும் வழக்கத்தையொழிக்க ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனி கௌரவம் நம்முடைய சாதிக்கு மட்டும் வேண்டாம்" என்றான்.
ஆனால் ஐ.ஸி.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் இந்த மாதிரி அற்பமான காரியங்களில் இறங்குவது யமதர்மனுக்கே விருப்பமில்லை போலிருக்கிறது. கேதாரி உடல் குணமடையாமலே, சீமையிலிருந்து வந்த இருபத்தோராம் நாள் காலஞ் சென்றான்.
*****
இந்த பரிதாப வரலாற்றில் சொல்ல வேண்டியது இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கியிருக்கிறது. கேதாரியின் மாமனார் அவனுடைய புகைப்படம் ஒன்று இருந்தால் கொண்டு தரும்படி எனக்குச் சொல்லியிருந்தார். நானும் அவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் ஒன்று என்னிடம் இருந்தது. அதிலிருந்து அவனுடைய படத்தை மட்டும் தனியாக எடுக்கச் செய்து சட்டம் போட்டு எடுத்துக் கொண்டு போனேன். அப்போது அவர்களுடைய வீட்டில் தற்செயலாய்க் கேதாரியின் மனைவியைக் காண நேரிட்டது. அவளைப் பார்த்ததும் என் உடம்பு நடுங்கிற்று; மயிர் சிலிர்த்தது. அவளைக் "கிளி" என்று சொன்னேனல்லவா? அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேதாரியின் தாயார் - Kethariyin Thaayar - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, அவன், நான், அம்மா, மட்டும், அவனுடைய, தலையை, கேதாரி, ஒன்று, செய்து, கேதாரியின், சங்கர்