கேதாரியின் தாயார்
3
கேதாரி காலேஜ் வகுப்புக்குப் போனதிலிருந்தே
பெண்ணைப் பெற்றவர்கள் அவனுடைய தாயாரைப் பிய்த்து எடுத்த வண்ணமாயிருந்தார்கள்.
அந்த நிலைமையில் வேறு யாராயிருந்தாலும் "அப்பளம் இடும் தொல்லை ஒழிந்தது"
என்று எண்ணி, ஏதாவது ஒரு பெண்ணைப் பிடித்துக் கேதாரியின் கழுத்தில் கட்டியிருப்பார்கள்.
ஆனால் பாகீரதி அம்மாமி, வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் மிகவும் கடினமான
பாடங்களைப் படித்து அறிவு பெற்றவள். "பி.ஏ. முடிகிற வரையில் கல்யாணப்
பேச்சே கூடாது" என்று பிடிவாதமாய்ச் சொல்லி வந்தாள்.
ஆகவே, இப்போது கேதாரி, பி.ஏ. தேறியதும் கலியாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று. மணிபுரம் பண்ணையார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் அப்போது எங்கள் காலேஜ் பழைய மாணாக்கர் சங்கத்தின் அக்கிராசனராயிருந்தார். ஒவ்வொரு வருஷமும், கேதாரி வகுப்பில் முதலாவதாகத் தேறி முதற்பரிசுகள் பெற்று வருவதைக் கவனித்திருந்தார். பையனுடைய முகவெட்டு, நடை உடை பாவனை எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தன. ஆகவே தம்முடைய பெண்ணை அவனுக்குக் கொடுப்பதென்று பேசத் தொடங்கினார். பையனைக் கேட்டதில் அம்மாவைக் கேட்க வேண்டுமென்று சொல்லிவிட்டான். பாகீரதி அம்மாமி இவ்வளவு பெரிய சம்பந்தம் கிடைக்கப் போகிறதை எண்ணியபோது பிரமித்துப் போய்விட்டாள். ஆனாலும் காரியத்தில் கண்ணாயிருந்தாள். இன்னொரு ஸ்திரீயாயிருந்தால், "ஐயாயிரம் வேணும்; பத்தாயிரம் வேணும்" என்று கேட்டிருப்பார்கள். பாகீரதி அம்மாமியோ, "பணங்காசு ஒன்றும் வேண்டாம்; கலியாணம் சீர்வகையரா எல்லாம் உங்கள் இஷ்டம். பையனைச் சீமைக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ். படிக்க வைப்பதற்கு மட்டும் ஒப்புக் கொண்டால் போதும்" என்றாள்.
இந்த மாதிரி எண்ணம் அம்மாமிக்கு உண்டென்று எனக்கு முன்னாலேயே தெரியும். ஏனென்றால், ஐ.ஸி.எஸ்.ஸுக்குப் போவது பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு நாள் என்னை அவள் கேட்டது உண்டு. அக்கம் பக்கத்தில் எல்லாரும் அதிசயப்பட்டார்கள்; சிலர் அம்மாமியை வையக்கூட வைதார்கள். "பார்! என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு? ஒரு பிள்ளை; அதைச் சீமைக்கு அனுப்புகிறாளே?" என்றார்கள்.
பண்ணையார் நரசிம்மய்யர் வைதிகப்பற்று உள்ளவர். ஆகையால் முதலில் தயங்கினார். கடைசியில், பெரிய சாஸ்திரிகள் தீக்ஷிதர்கள் எல்லாருடனும் யோசித்து, "சாஸ்திரங்களில் சமுத்திரப் பிரயாணத்துக்குப் பிராயச்சித்தம் இருக்கிறது" என்று உறுதிப்படுத்திக் கொண்டு சம்மதித்தார். எனக்கென்னவோ, "ஒரு ஸ்திரீக்குள்ள மனோதிடம் நமக்கு வேண்டாமா?" என்ற எண்ணத்தினாலேதான் அவர் சம்மதித்தார் என்று தோன்றிற்று.
இதற்குப் பிறகுதான் கேதாரியைப் போய்ப் பெண்ணைப் பார்த்துவிட்டு வரும்படி அம்மாமி சொன்னது. நானும் கூடப் போயிருந்தேன். கேதாரி தன் தாயிடம் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு நியாயமானது என்று விளங்கிற்று. கிளி என்றால் கிளி, பெண் அவ்வளவு அழகாயிருந்தாள். பதின்மூன்று, பதினாலு வயது இருக்கலாம்.
அந்தக் கதையையெல்லாம் இப்போது வளர்ப்பதில் பயன் என்ன? கல்யாணம் சிறப்பாக நடந்தது. அடுத்த வருஷம் கேதாரி இங்கிலாந்துக்குப் பிரயாணமானான். பம்பாய் வரையில் நான் சென்று கப்பல் ஏற்றிவிட்டு வந்தேன்.
பாகீரதி அம்மாமியைத் தங்கள் வீட்டிலேயே வந்திருக்க வேண்டும் என்று மணிபுரத்தார் எவ்வளவோ வருந்தி அழைத்தார்கள். அம்மாமி கேட்கவில்லை. அவளுடைய சித்தி ஒருத்தி இரண்டு குழந்தைகளை அநாதையாய் விட்டு விட்டு, இறந்து போய்விட்டாள். அவர்களைக் கிராமத்திலிருந்து தருவித்துத் தனியாக ஒரு வீட்டில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு அவர்களைப் பராமரித்து வந்தாள். ஆனால் சம்பந்திகளின் கௌரவத்தையும் மற்ற விஷயங்களையும் உத்தேசித்து அப்பளம் இட்டு விற்பதை மட்டும் நிறுத்தி விட்டாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேதாரியின் தாயார் - Kethariyin Thaayar - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கேதாரி, பாகீரதி, அம்மாமி, பெண்ணைப்