கேதாரியின் தாயார்
1
கேதாரிக்கு அவனுடைய தந்தையைப் பற்றிய
ஞாபகமே கிடையாது. அவன் மூன்று வயதுக் குழந்தையாயிருந்த போது அவனுடைய
தந்தை வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடிப் போய் விட்டார். ஒரு நாடகக்காரியின்
மையலில் அகப்பட்டு அவர் தம்முடைய இளம் மனைவியையும், மூன்று வயதுப் பிள்ளையையும்
அநாதையாக விட்டுவிட்டுப் போனார். இந்த விவரமெல்லாம் எங்களுக்கு வெகு
நாள் வரையில் தெரியாது. கேதாரிக்குக் கலியாணப் பேச்சு நடந்த போதுதான்
அவனுடைய தாயார் சொல்லித் தெரிந்து கொண்டோம்.
பெண்ணைப் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி பாகீரதி அம்மாமி சொன்னபோது, "நீ பார்த்து நிச்சயம் செய்தால் சரிதான், அம்மா! ஒரு மூளிப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சொன்னாலும் பண்ணிக் கொள்கிறேன்" என்றான் கேதாரி.
"பின், என்ன, அம்மாமி உங்களுக்கு? இந்தக் கலியுகத்தில் இந்த மாதிரி பிள்ளை இன்னொருவனைக் காணவே முடியாது. நீங்களே முடிவு செய்து விடுங்களேன்" என்றேன் நான்.
ஆனால் பாகீரதி அம்மாமி கேட்கவில்லை. "கேதாரி போய்ப் பெண்ணைப் பார்த்துப் பிடித்திருக்கிறது" என்று சொன்னால்தான் கலியாணம் நிச்சயம் பண்ணுவேன் என்று சொன்னாள். அப்போதுதான் கேதாரியின் தகப்பனாரின் பேச்சை அவள் எடுத்து நான் கேட்டது.
"இப்படியெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் சம்மதம் கேட்காமல் கலியாணம் பண்ணிப் பண்ணித்தான் குடும்பங்களில் கஷ்டம் ஏற்படுகிறது. இவனுடைய (கேதாரியினுடைய) தகப்பனார் எங்களை விட்டுவிட்டுப் போனதற்காக ஊரெல்லாம் அவரைத் திட்டினார்கள். எனக்கும் அப்போது கோபமும் ஆத்திரமும் அடைத்துக் கொண்டு தான் வந்தது. நாற்பது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தேன். ஆனால், பின்னால் ஆற அமர யோசித்துப் பார்த்ததில் அவர் மேல் ஒரு குற்றமும் இல்லையென்று தோன்றிற்று. என்னைக் கலியாணம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமே இல்லையாம். அப்படிச் சொல்லவும் சொன்னாராம். ஆனால் பெரியவர்கள் பலவந்தப்படுத்திக் கலியாணம் செய்து வைத்தார்களாம். ஏதோ ஐந்தாறு வருஷம் பல்லைக் கடித்துக் கொண்டு குடும்பம் நடத்தினோம். அப்புறம் அந்தக் கூத்தாடிச்சி வந்து சேர்ந்தாள்; போய்விட்டார்."
இப்படி பாகீரதி அம்மாமியே அந்தப் பேச்சை எடுத்த போது, நானும் பக்குவமாகச் சிற்சில கேள்விகளைப் போட்டு மற்ற விவரங்களையும் அறிந்தேன். கேதாரியின் தகப்பனார் சுந்தரராமையர் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாய் ஆள் நன்றாயிருப்பாராம். ரொம்ப நன்றாய்ப் பாடுவாராம். அப்போது திருமங்கலத்தில் தபாலாபீஸில் அவருக்குக் குமாஸ்தா உத்தியோகம். ரங்கமணி என்னும் பெயர் பெற்ற நாடகக்காரி அவ்வூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அயன் ராஜபார்ட் போடுகிறவனுக்கு ரொம்ப உடம்பு சரிப்படவில்லையென்றும், அன்று அநேகமாய் நாடகம் நடைபெறாதென்றும் செய்தி வந்தது. கேதாரியின் தகப்பனாருக்கு நாடகம் என்றால் பித்து. நாடகம் பார்த்துப் பார்த்து எல்லா நாடகங்களும் நெட்டுரு; பாட்டுக்கள் தலைகீழ்ப் பாடம். ஆகவே இவர் போய் "நான் ராஜபார்ட் போட்டுக் கொள்கிறேன்" என்றார். சில பாட்டுக்களும் பாடிக் காட்டினார். ரங்கமணி சம்மதித்தாள். நாடகம் நடந்தது. எல்லாரும் அதிசயிக்கும்படி கேதாரியின் தகப்பனார் நடித்தார். அம்மாமிக்குக் கூட அது பெருமையாயிருந்தது. அப்புறம் திருமங்கலத்தில் அந்தக் கம்பெனி இருந்தவரையில் அவர்களுடனேயே இருந்தார். வேலையை ராஜீனாமாக் கொடுத்து விட்டாரென்றும், தன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போகிறாளென்றும் ஊரிலே பேசிக் கொண்டார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி அதையெல்லாம் நம்பவில்லை. கடைசியில், நாடகக் கம்பெனி ஊரைவிட்டுப் போயிற்று. அதற்கு மறுநாள் சுந்தரராமையரையும் காணவில்லை. நாடகக் கம்பெனி இலங்கைக்குப் போயிற்றென்றும், அங்கே போய் இவரும் சேர்ந்து கொண்டாரென்றும் பின்னால் தகவல் தெரிய வந்தது.
அதற்குப் பிறகு அவரைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. மேற்படி நாடகக் கம்பெனியார் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், பினாங்கு முதலிய வெளி நாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டொரு தடவை சென்னை நகருக்கும் வந்திருந்தனராம். ஆனால் பாகீரதி அம்மாமி அதற்குள் அவரைப் பற்றி எண்ணுவதையே விட்டு விட்டாள். இப்போது அவளுடைய ஆசை முழுவதையும் கேதாரியின் மேல் வைத்திருந்தாள்.
சுந்தரராமையர் ஓடிப் போன செய்தியறிந்து, பாகீரதி அம்மாமியின் தாய் தந்தையர்கள் திருமங்கலத்துக்கு வந்து அவளைத் தங்களுடன் கிராமத்துக்கு அழைத்துப் போனார்கள். அவர்கள் சொற்பக் குடித்தனக்காரர்கள். பாகீரதியைத் தவிர அவர்களுக்கு வேறு பிள்ளைக் குட்டி கிடையாது. கிராமத்தில் ஐந்தாறு வருஷம் இருந்தார்கள். அப்புறம் கேதாரியைப் படிக்க வைப்பதற்காகத் திருச்சிராப்பள்ளிக்குக் குடி வந்தார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேதாரியின் தாயார் - Kethariyin Thaayar - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பாகீரதி, கேதாரியின், கலியாணம், அம்மாமி, நாடகம், கம்பெனி, வந்தது, அப்புறம், கொண்டு, நாடகக், நான், போய், விட்டு, நாள், செய்து, அவனுடைய, தகப்பனார்