கோவிந்தனும் வீரப்பனும்
சில்லறை கொடுக்கச் சற்று நேரமாயிற்று. இதற்குள்
சில சிநேகிதர்கள் வந்தார்கள். அவர்கள் குடிக்கும்போது தான் மட்டும் சும்மாயிருக்கக்
கூடாதென்று இன்னொரு சீசா கேட்டான். அதையும் குடித்த பிறகு "இன்று இரண்டு சீசா
பீர் குடித்தாகிவிட்டது. நாளைக்கு வரக்கூடாது. ஆகையால் சாராயக் கடையில் ஒரு திராம்
வாங்கிக் குடித்து விடலாம்" என்று யோசித்து அப்படியே சாராயக் கடைக்குப் போனான்.
ஒரு திராம் வாங்கிக் குடித்து விட்டுப் பிறகு இன்னொரு அரை திராம் போடச் சொன்னான்.
கடைக்காரன் கொடுத்த சில்லறையில் ஒரு அரைக்கால் ரூபாய் செல்லாப்பணம். வீரப்பனுக்கு
போதை நன்றா யேறியிருந்தபடியால் அது தெரியவில்லை. கடைக்காரன் கொடுத்த சில்லறையை
எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அவற்றில் நல்ல இரண்டணா ஒன்று சட்டைப்
பையில் விழாமல் தரையில் விழுந்தது. அதை அவன் கவனிக்கவில்லை. ஆகவே சாயங்காலம்
ஆறு மணிக்கு நல்ல பணம் ரூ. 5-12-0ம் செல்லாப் பணம் இரண்டணாவும் எடுத்துக் கொண்டு
அவன் வீடு போய்ச் சேர்ந்தான்.
வீட்டில் அரிசி, பருப்பு சாமான் ஒன்றும் கிடையாது. அன்று காலைச் சாப்பாட்டுக்கே நாகம்மாள் அரிசி கடன் வாங்கிச் சமைத்திருந்தாள். எனவே மிகுந்த எரிச்சலுடன் அவள் வீரப்பன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். வந்ததும் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். வீரப்பன் தன்னிடமிருந்த பணத்தை அவள் முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் தானும் கூச்சல் போட்டான். இதைக் கண்டு அவர்களுடைய மகன் ராமன் - ஏழு வயது பையன், பயந்து வாசல்புறம் ஓடிப் போனான். நாகம்மாள் அதற்குப் பிறகு கடைக்குப் போய் சாமான் வாங்கிக்கொண்டு வந்து சமையல் செய்தாள். சாப்பிட்டு முடிய இரவு பத்து மணியாயிற்று. அப்புறம் அரைமணி நேரம் அவர்கள் காட்டுப் பூனைகள் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு தூங்கிப் போனார்கள்.
மறுநாள் காலையில் கறிகாய் வாங்கி வருவதற்காக வீரப்பன் பணம் கேட்டான். நாகம்மாள் செல்லாப்பணம் இரண்டணாவைக் கொண்டு வந்து கொடுத்தாள். வீரப்பன் உடனே சண்டை பிடிக்கத் தொடங்கினான். முதல் நாள் இரவு கடைசாமான் வாங்கியபோது நாகம்மாள் ஏமாந்து செல்லாப்பணம் வாங்கி வந்திருக்க வேண்டும் என்று சொன்னான். "குடி வெறியில் நீதான் வாங்கிக் கொண்டு வந்தாய்" என்றாள் நாகம்மாள். இந்த சண்டையின்போது ராமன் நடுவில் வந்து "நோட்டு பென்சில் வேண்டும்" என்றான். அவனுக்கு ஒரு அறை கிடைத்தது. நாகம்மாள் போட்டிக்குக் கைக் குழந்தையை அடித்தாள். ஏக ரகளையாயிற்று. வீரப்பனுக்கு வேஷ்டி துவைக்க நேரங் கிடைக்கவில்லை.
இத்தனை தொந்தரவுகளுக் கிடையில் நாகம்மாள் சமைத்தபடியால் குழம்புக்கு உப்புப்போட மறந்து போனாள். சாப்பிடும்போது வீரப்பன் குழம்புச் சட்டியைத் தூக்கி நாகம்மாள் மேல் எறிந்தான். அது குழந்தை மீது விழுந்தது. மறுபடிய்ம் ரணகளந்தான்.
இன்று பீர்க்கடைக்குப் போகவேண்டாமென்று முதல்நாள் வீரப்பன் தீர்மானித்திருந்தான். ஆனால் மாலை மூன்று மணி ஆனதும் இந்தத் தொல்லைகளையெல்லாம் மறந்து சற்று நேரம் "குஷி"யாக இருந்து வரலாமென்று தோன்றிற்று. ஆகவே முழு ரூபாய் ஒன்றை எடுத்துக் கொண்டு சாராயக் கடையைத் தேடிச் சென்றான்.
சாராயக் கடையில் பன்னிரண்டணா தொலைந்தது. அடுத்த சந்தில் சூதாடும் இடம் ஒன்று உண்டு. வீரப்பன் அங்கே போனான். பாக்கி நாலணாவையும் அங்கே தொலைத்தான். இருட்டிய பிறகு வீட்டுக்குக் கிளம்பினான். வழியில் குடிமயக்கத்தில் விளக்குக் கம்பத்தில் முட்டிக் கொண்டான். ஒரு புருவம் விளாங்காய் அளவுக்கு வீங்கிப் போயிற்று. வீட்டுக்குப் போனதும் படுத்துத் தூங்கிப் போனான்.
நாகம்மாள் சாயங்கால மெல்லாம் ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். இரவு சமைக்கவில்லை. ராமன் மற்றப் பிள்ளைகளுடன் தெருவிலும் சாக்கடையிலும் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். நாகம்மாள் மத்தியானம் மீதியிருந்த சோற்றை அவனுக்கும் போட்டுத் தானும் சாப்பிட்டான். வீரப்பனை எழுப்பிச் சோறு போடவில்லை.
திங்கட்கிழமை காலையில் வீரப்பனுக்குத் தலை நோவு பலமாயிருந்தது. புருவம் வீங்கி ஒரு கண் மூடிப்போயிற்று. முணு முணுத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். நாகம்மாள் மெதுவாகத்தான் எழுந்திருந்தாள். முதல் நாள் அழுது அழுது இப்பொழுது அவள் முகம் பார்க்க முடியாதபடி கோரமாயிருந்தது. தலைமயிர் ஒரே பரட்டை. முனகிக் கொண்டே குழம்பும் சோறும் செய்தான். வீரப்பன் அவசர அவசரமாய் அறை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு மத்தியானச் சோற்றுக்காகச் சண்டை போட்டு இரண்டணா எடுத்துக்கொண்டு அழுக்குச் சட்டையும் கந்தல் வேஷ்டியுமாய் ஓடினான்.
ராமனுக்கு அன்று காலை இரண்டு மூன்று தடவை அடி விழுந்திருந்தது. கணக்குப் போடவில்லையாகையால் பள்ளிக்கூடத்துக்கும் போய் அடிபடி வேண்டுமேயென்று அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் சென்றான். கைக் குழந்தையைக் கவனிப்பார் யாருமில்லை. அது ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தது.
வீரப்பனைப் போன்ற எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கை கள்ளு, பீர், சாராயக் கடைகளினால் பாழாகி வருகின்றது. அந்தக் கடைகளைத் தொலைக்க நீங்கள் என்ன உதவி செய்யப் போகிறீர்கள்?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோவிந்தனும் வீரப்பனும் - Govindanum Veerappanum - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நாகம்மாள், வீரப்பன், பிறகு, சாராயக், இரவு, அழுது, சண்டை, கொண்டு, போனான், வந்து, வாங்கிக், திராம், ராமன், பணம், அவள், செல்லாப்பணம், அவன்