கோவிந்தனும் வீரப்பனும்
பொழுது போனதும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
மத்தியானமே சமைத்து வைத்திருந்த சாப்பாடு தயாராயிருந்தது. எல்லாரும் சாப்பிட்டுவிட்டுக்
கவலையின்றித் தூங்கினார்கள். கடற்கரைக்குப் போய் வந்ததற்காக கோவிந்தனுக்கு உண்டான
செலவு ஒன்றரை அணாதான்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் இன்றைக்கு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். பீப்பிள்ஸ் பார்க்குக்குப் போக வேண்டுமென்று தீர்மானமாயிற்று. சுந்தரம் அவசர அவசரமாய்ச் சமையல் செய்தாள். கோவிந்தன் மார்க்கட்டுக்குப் போய்க் காய்கறி வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வேஷ்டி சட்டைகளுக்குச் சவுக்காரம் போட்டுத் துவைத்தான். பிறகு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நடராஜன் வீட்டுக் கணக்குகளைப் போட்டான்.
எவ்வளவோ அவசரப்படுத்தியும் கிளம்புவதற்கு மணி ஒன்றாகி விட்டது. சுந்தரம் சிற்றுண்டிக்காகக் கொஞ்சம் அப்பம் செய்து ஒரு பொட்டணத்தில் கட்டி எடுத்துக் கொண்டாள். புரசவாக்கம் வரையில் அவர்கள் நடந்துசென்று அங்கிருந்து டிராம் வண்டியில் போனார்கள். மாலை நான்கு மணி வரையில் பீப்பிள்ஸ் பார்க்கைச் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தார்கள். நடராஜனுக்குக் குரங்குகளைவிட்டுப் பிரிந்து வருவதற்கு மனமே இல்லை. மூர்மார்க்கட்டில் ஊதல் வாங்கித் தருவதாய்ச் சொன்னதின் மேல்தான் அவன் வந்தான்.
இதுவரை டிராம் சத்தம் ஒன்றறை அணாவும், பீப்பிள்ஸ் பார்க் டிக்கட் மூன்றணாவும் ஆக நாலரை அணா செலவாயிருந்தது. மூர்மார்க்கட்டில் அவர்கள் பின்வரும் சாமான்கள் வாங்கினார்கள்:-
ரூ. |
அ. |
பை |
|
கோவிந்தனுக்குப் பித்தளை டிபன்பாக்ஸ் |
0 |
11 |
0 |
சுந்தரத்திற்கு ஒரு தந்தச் சீப்பு |
0 |
2 |
6 |
நடராஜனுக்கு ஒரு ஊதலும் பெல்ட்டும் |
0 |
3 |
0 |
குழந்தைக்கு ஒரு ரப்பர் பொம்மை |
0 |
2 |
6 |
சாயங்காலம் 5 மணிக்கு அவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். போகும்போது டிராம் சத்தமும் சேர்ந்து ரூ. 1-9-0 செலவாயிற்று. நேற்று ஒன்றரை அணா செலவாயிற்று. ஆக ரூ. 1-10-6 போக பாக்கி இருந்த ஒன்றரை அணாவை ஒரு சிமிழில் போட்டு வைத்தார்கள். சுந்தரத்துக்குச் சேலை வாங்குவதற்காக இந்த மாதிரி ஏற்கனவே ரூ. 2-8-0 வரையில் சேர்ந்திருந்தது.
மறுநாள் திங்கட்கிழமை காலையில் சுந்தரம் புதிய தந்தச் சீப்பினால் தலையை வாரி முடித்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டுக் காரியங்களைச் செய்தாள். ஏழரை மணிக்குள் கோவிந்தனுக்குச் சோறுபோட்டு, மத்தியானத்திற்கும் பலகாரம் பண்ணிக் கொடுத்தாள். கோவிந்தன் ஸ்நானம் செய்து, சுத்தமான வேஷ்டியும் சட்டையும் அணிந்து, புதிய டிபன்பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஆலைக்குப் புறப்பட்டான். நடராஜன் இடுப்பில் புதிய பெல்டு போட்டு அதில் ஊதலைத் தொங்கவிட்டுக் கொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான். குழந்தை கையில் ரப்பர் பொம்மையை வைத்துக் கொண்டு ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தது.
*****
இனி அடுத்த வீட்டில் வீரப்பனுடைய குடும்பத்தார் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழித்தார்களென்று பார்ப்போம்.
சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு வீரப்பனுக்கு ஏழு ரூபாய் கிடைத்தது. அவன் அதை வாங்கி அலட்சியமாய்த் தன் கந்தல் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் பீர்க்கடையைக் கண்டதும் ஒரு நிமிஷம் நின்று தயங்கினான். அப்போது உள்ளிருந்து ஒருவன் "அண்ணே! ஏன் நிற்கிறாய்? வா!" என்றான். வீரப்பன் கடைக்குள் நுழைந்தான். முதலில் ஒரு சீசா குடித்துவிட்டுக் கிளம்பி விடலாமென்று நினைத்தான். ஆனால் ஒரு சீசா குடித்ததும் இன்னொரு சீசா குடித்தால்தான் தாகம் தணியுமென்று தோன்றிற்று. ஆனால் தடுத்துக் கொண்டான். ஒரு ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோவிந்தனும் வீரப்பனும் - Govindanum Veerappanum - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, சீசா, டிராம், வரையில், பீப்பிள்ஸ், சுந்தரம், ஒன்றரை